search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இரவு நேர பாடசாலையை தொடர்ந்து விஜய் நூலக திட்டம்: தமிழகம் முழுவதும் நாளை தொடக்கம்
    X

    இரவு நேர பாடசாலையை தொடர்ந்து விஜய் நூலக திட்டம்: தமிழகம் முழுவதும் நாளை தொடக்கம்

    • நூலகத்தில் மாணவ-மாணவிகளின் பொது அறிவினை வளர்க்கும் வகையில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும்.
    • மாணவ-மாணவிகள் நல்ல முறையில் விஜய் நூலக திட்டத்தினை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

    அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தி ஏழை குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காக 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலை திட்டம் தொடங்கப்பட்டு சிறப்புடன் நடந்து வருகிறது. தொடர்ந்து அடித்தட்டு மக்களின் தேவைக்காக இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டது.

    இதன்மூலம் பட்டா மாற்றம், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீதிமன்ற வழக்கு குறித்த சட்ட உதவிகள் ஏழை பொதுமக்களுக்கு இலவசமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அடுத்த அதிரடி திட்டமாக மாணவ-மாணவிகளின் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு திறனை மேம்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் நாளை முதல் 'தளபதி விஜய் நூலகம்' என்ற பெயரில் புதிய நூலகம் திறக்கப்பட உள்ளது.

    இதுபற்றி விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியதாவது:-

    விஜய் ஆலோசனையின் பேரில் மக்கள் இயக்கத்தின் அடுத்த திட்டமாக நூலகம் திட்டம் நாளை முதல் தொடங்கப்படுகிறது.

    முதல்கட்டமாக நாளை 11 இடங்களில் தொடங்க இருக்கிறோம். செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட தாம்பரம் தொகுதி சி.டி.ஓ. காலனி பாலாஜி நகர் 3-வது தெருவிலும், பல்லாவரம் மும்மூர்த்தி நகர் 5-வது தெருவிலும் அமைக்கப்பட்டுள்ள புதிய நூலகங்களை காலை 10 மணியளவில் நான் தொடங்கி வைக்கிறேன்.

    இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் 3 இடத்திலும், அரியலூர், நாமக்கல் மேற்கு, வடசென்னை கிழக்கு, வேலூர் ஆகிய மாவட்டங்கள் உள்பட 11 இடங்களில் நாளை காலை நூலகம் திறக்கப்பட உள்ளது.

    இரண்டாம் கட்டமாக வருகிற 23-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் 5 இடங்களிலும், கோவை மாவட்டத்தில் 4 இடங்கள், ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்கள், தென்காசியில் 2 இடங்கள் மற்றும் புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 21 இடங்களிலும் நூலகம் தொடங்க இருக்கிறோம். மொத்தம் 32 இடங்களில் நூலகத்தை தொடங்க இருக்கிறோம்.

    இதைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் ஆலோசனையின் படி 234 தொகுதிகளிலும் படிப்படியாக இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும். நூலகத்தில் மாணவ-மாணவிகளின் பொது அறிவினை வளர்க்கும் வகையில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

    தலைவர்கள் வரலாறு, பொது அறிவு புத்தகங்கள், வரலாற்று கதைகள் என பல்வேறு அரிய புத்தகங்கள் நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கும். மாணவ-மாணவிகள் நல்ல முறையில் இந்த திட்டத்தினை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×