search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குமரி மாவட்டத்தில் பரவலாக மழை
    X

    குமரி மாவட்டத்தில் பரவலாக மழை

    • கேரளாவில் பெய்து வரும் மழையின் தாக்கமாக, தமிழகத்தின் குமரி மாவட்டத்திலும் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது.
    • மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவுக்கு நீர்வரத்து உள்ளது.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் 5 தினங்கள் வரை இந்த மழை நீடிக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கேரளாவில் பெய்து வரும் மழையின் தாக்கமாக, தமிழகத்தின் குமரி மாவட்டத்திலும் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரள எல்லை அருகே அமைந்துள்ள தமிழக பகுதிகளில் பரவலாக மழை நீடித்தே வருகிறது.

    இன்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 14.2 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. இதேபோல் சுருளோடு பகுதியில் 5.4 மில்லிமீட்டர் மழையும், திற்பரப்பு அருவியில் 4.6 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவுக்கு நீர்வரத்து உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1517 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து பாசனத்திற்கு 281 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.35 அடியாக உள்ளது. அணைக்கு 535 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 375 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.60 அடியாக உள்ளது. அணைக்கு 113 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 12.69 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 38.14 அடியாகவும் உள்ளது. இந்த அணையில் இருந்து 1 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:- (மில்லி மீட்டரில்)

    பாலமோா்-14.2, சுருளோடு-5.4., திற்பரப்பு - 4.6. புத்தன் அணை-3. பேச்சிப்பாறை-2 பெருஞ்சாணி-2.4, சிற்றார்-1-4.6, பூதப்பாண்டி-1.4.

    Next Story
    ×