search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தைத்திருநாள் கோலாகலமாக தொடங்கியது- பொங்கல் பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்

    • பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் மல்லி ஜாதி உள்ளிட்ட பூக்களின் விலை அதிகரித்து உள்ளது.
    • பொங்கல் பண்டிகைக்காக திண்டிவனம், பண்ருட்டி பகுதியில் இருந்து திருவள்ளூருக்கு கரும்பு விற்பனைக்கு வந்துள்ளது.

    போரூர்:

    தைத்திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. பொங்கல் கொண்டாட்டமானது போகி பண்டிகையுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. போகி பண்டிகையையொட்டி பொதுமக்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை ரோடுகளில் போட்டு எரித்தனர். சிறுவர்கள் மேளம் அடித்து மகிழ்ந்தனர்.

    பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக தமிழகம் முழுவதும் இன்று மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது. பொங்கல் வைப்பதற்கான பொருட்கள், பூஜை பொருட்கள், கரும்பு, மஞ்சள் குலை, பூக்கள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.

    சென்னையில் உள்ள மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் குவிந்து பொங்கல் வைப்பதற்கான பொருட்களை வாங்கிச் சென்றனர்.

    கோயம்பேடு சிறப்பு சந்தையில் கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்து விற்பனை களை கட்டி உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து நள்ளிரவில் ஏராளமான வாகனங்களில் குவிந்த சில்லரை வியாபாரிகள் பொங்கல் பொருட்களை வாங்கி சென்றனர்.

    அதேபோல் அதிகாலை முதல் பொதுமக்கள் அதிகளவில் வந்து பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட் வளாகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

    இதேபோல் பூ, பழம் மற்றும் காய்கறி மார்க்கெட்டிலும் ஏராளமானோர் குவிந்துள்ளனர். பூ, வாழைத்தார், வாழை இலை, சிறு கிழங்கு உள்ளிட்ட பொருட்களின் விற்பனை தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கரும்பு ஒரு கட்டு (20 எண்ணிக்கை) ரூ.250 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது. இஞ்சி கொத்து சிறிய கட்டு ரூ.40-க்கும், மஞ்சள் கொத்து சிறிய கட்டு ரூ.60-க்கும் விற்பனையாகிறது.

    மஞ்சள் வாழைத்தார் ஒன்று ரூ.200 முதல் ரூ.500 வரையும் வாழை இலை ஒன்று ரூ.8-க்கும், சிறு கிழங்கு ஒரு கிலோ ரூ.70-க்கும், வெற்றிலை கிழங்கு ஒரு கிலோ ரூ.100-க்கும், மொச்சைக்காய் ஒரு கிலோ ரூ.150-க்கும், சர்க்கரை வள்ளி கிழங்கு ஒரு கிலோ ரூ.50-க்கும், வத்தலவள்ளி கிழங்கு ஒரு கிலோ ரூ.90-க்கும், துவரக்காய் ஒரு கிலோ ரூ.100-க்கும், தேங்காய் கிலோ ரூ.33-க்கும், வெற்றிலை ஒரு கவுளி ரூ.40-க்கும், விற்கப்படுகிறது.

    அதேபோல் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் மல்லி ஜாதி உள்ளிட்ட பூக்களின் விலை அதிகரித்து உள்ளது. மல்லிப்பூ ஒரு கிலோ ரூ.4500-க்கும், ஐஸ் மல்லி ரூ.3800-க்கும், ஜாதி ஒரு கிலோ ரூ.3000-க்கும், கனகாம்பரம் ஒரு கிலோ ரூ.1200-க்கும், சாமந்தி ஒரு கிலோ ரகத்தை பொறுத்து ரூ.100 முதல் ரூ.140 வரையும் பன்னீர் ரோஜா ஒரு கிலோ ரூ.180 முதல்-ரூ.200 வரையும் சாக்லேட் ரோஜா ரூ.180 முதல் ரூ.220 வரையும் செவ் அரளி கிலோ ரூ.500-க்கும், விற்கப்பட்டு வருகிறது.

    பொங்கல் பண்டிகையை ஒட்டி மல்லி, ஜாதி ஆகிய பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதால் விலை தாறுமாறாக அதிகரித்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் காய்கறி விலை நேற்றை விட 2 மடங்காக அதிகரித்து உள்ளது. இன்று நாட்டு தக்காளி ஒரு கிலோ ரூ.35-க்கும், உஜாலா கத்தரிக்காய் கிலோ ரூ.70-க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.110-க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ.150-க் கும், ஊட்டி கேரட் கிலோ ரூ.90-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.60-க்கும், அவரைக்காய் கிலோ ரூ.80-க்கும், முட்டை கோஸ் கிலோ ரூ.10-க்கும், பச்சை பட்டாணி கிலோ ரூ.40-க்கும், சேனை கிழங்கு கிலோ ரூ.35-க்கும், காலி பிளவர் ஒன்று ரூ.20-க்கும், எலுமிச்சை கிலோ ரூ.80-க்கும், பச்சை மிளகாய் கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் சென்னை தி.நகர், புரசைவாக்கம், தாம்பரம், கொத்தவால் சாவடி, திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளிலும் இன்று ஏராளமான பொதுமக்கள் குவிந்து பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.

    பொங்கல் பண்டிகைக்காக திண்டிவனம், பண்ருட்டி பகுதியில் இருந்து திருவள்ளூருக்கு கரும்பு விற்பனைக்கு வந்துள்ளது. இதன் ஒரு கட்டு ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனை ஆகிறது.

    மேலும் திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் மண்பான தொழிலாளர் ஏராளமான மண்பானைகளை விற்பனைக்கு குவித்து உள்ளனர்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் விலை சற்று உயர்ந்திருந்தாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×