search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குழந்தை விற்பனை விவகாரத்தில் உடல் உறுப்பு கடத்தல் கும்பலுக்கு தொடர்பு: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
    X

    குழந்தை விற்பனை விவகாரத்தில் உடல் உறுப்பு கடத்தல் கும்பலுக்கு தொடர்பு: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

    • பாலாமணி என்ற பெண் மூலமாக லோகாம்பாள் குழந்தை விற்பனை தொழிலை கற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
    • தினேஷ்-நாகஜோதியின் பெண் குழந்தையை விற்பனை செய்வதற்கு இருவரும் சேர்ந்து முயற்சித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    சென்னை:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த தினேஷ்-நாகஜோதி தம்பதிக்கு 3-வதாக பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்ய பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் திருச்செங்கோடு அரசு டாக்டர் அனுராதா, புரோக்கர் லோகாம்பாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நாகஜோதி-தினேஷ் தம்பதிகளின் வீட்டுக்கு சென்று குழந்தையை விற்பனை செய்ய லோகாம்பாள் ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணம் தருவதாக கூறியுள்ளார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போதுதான் குழந்தை விற்பனை தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியானது.

    பாலாமணி என்ற பெண் மூலமாக லோகாம்பாள் குழந்தை விற்பனை தொழிலை கற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து லோகாம்பாலின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் டாக்டர் அனுராதாவுடன் சேர்ந்து ஏற்கனவே ஆண் குழந்தையை சட்ட விரோதமாக விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது.

    தினேஷ்-நாகஜோதியின் பெண் குழந்தையை விற்பனை செய்வதற்கு இருவரும் சேர்ந்து முயற்சித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் குழந்தை விற்பனை விவகாரத்தில் உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை விற்பனை கும்பலின் பின்னணியில் மனித உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் குழந்தை விற்பனை வழக்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    தமிழகம் முழுவதும் குழந்தை விற்பனை சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரையும் பிடிப்பதற்கு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    அதே நேரத்தில் உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் பற்றியும் அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    குழந்தை விற்பனை கும்பல், பச்சிளம் குழந்தைகளின் உடல் உறுப்புகளை திருடி விற்பனை செய்திருக்கலாமோ? என்கிற சந்தேகம் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து குழந்தை விற்பனை மற்றும் உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்களை கூண்டோடு பிடிக்க போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    Next Story
    ×