search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை விற்பனை"

    • பிறந்த ஆண் குழந்தையை வளர்ப்பதில் முத்துசுடலிக்கு சற்றும் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
    • குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் ஜீவா நகர் சந்தனமாரியம்மன் கோவில் சேர்ந்தவர் முனீஸ்வரன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துசுடலி (வயது 36). இந்த தம்பதிக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த முத்துசுடலி வேறு ஒரு வாலிபரிடம் கள்ளக்காதல் வைத்துக் கொண்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்ததால் மீண்டும் கர்ப்பம் ஆனார்.

    பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துசுடலிக்கு கடந்த 18.10.2023 அன்று ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப வறுமை, ஏற்கனவே இருக்கும் குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கும் சவால்களை கருத்தில் கொண்டு தற்போது பிறந்த ஆண் குழந்தையை வளர்ப்பதில் முத்துசுடலிக்கு சற்றும் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் தகாத உறவில் குழந்தை பிறந்ததால் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் நினைத்தார்.

    இதையடுத்து குழந்தையை கொல்லும் எண்ணத்தை கைவிட்டு, தனது கணவர் மற்றும் உறவினர்கள் யாருக்கும் தெரியாமல் குழந்தையை விற்றுவிட முத்துசுடலி முடிவு செய்தார். அதன்படி தனது விருப்பத்தை சேத்தூரை அடுத்த முகவூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி ராஜேஸ்வரி (54) என்பவரிடம் கூறியுள்ளார்.

    அவர் மற்றும் தென்காசி மாவட்டம் பெரும்பத்தூரை சேர்ந்த புரோக்கர் ஜெயபால், ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த செல்வி (30) ஆகியோர் மூலம் ஈரோட்டை சேர்ந்த தம்பிராஜன் மனைவி அசினாவுக்கு பிறந்த 7 நாட்களேயான ஆண் குழந்தையை கடந்த 25.10.2023 அன்று முத்துசுடலி விற்றுள்ளார்.

    இதற்கிடையே வீடு திரும்பிய முத்துசுடலிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தாய்ப்பால் கொடுக்காததால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர் குழந்தை பெற்றெடுத்த ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவ மனைக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் மற்றும் செவிலியர்கள் குழந்தை எங்கே என்று கேட்டுள்ளனர். முதலில் பல்வேறு மழுப்பலான பதில்களை கூறிய முத்துசுடலி, பின்னர் குழந்தையை விற்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் இதுபற்றி குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அலுவலர் திருப்பதிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் முத்துசுடலியிடம் விசாரணை நடத்தியபோது பிறந்த 7 நாட்களில் குழந்தையை ஈரோட்டை சேர்ந்த பெண்ணுக்கு விற்பனை செய்தது உறுதியானது. இதுபற்றி திருப்பதி மற்றும் விருதுநகர் உதவி மைய மேற்பார்வையாளர் விஸ்வநாதன் ஆகியோர் சேத்தூர் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், முத்துசுடலியிடம் அதிரடியாக விசாரணை நடத்தினார். இதில் குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லாததால் ஈரோட்டை சேர்ந்தவருக்கு ரூ.3½ லட்சத்துக்கு விற்றதும் அம்பலம் ஆனது. அந்த பணத்தில் ரூ.2 லட்சத்தை குழந்தையின் தாய் முத்துசுடலிக்கும், மீதமுள்ள ரூ.1½ லட்சம் புரோக்கர் மற்றும் மற்ற பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    அதனை அடிப்படையாக கொண்டு குழந்தையை விற்ற முத்துசுடலி, முகவூர் ராஜேஸ்வரி, நாமக்கல் குமாரபாளையம் செல்வி, குழந்தையை வாங்கிய ஈரோடு அசினா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள புரோக்கர் ஜெயபாலை தேடி வருகின்றனர். மேலும் கைதானவர்கள் அளித்த தகவலின் பேரில் குழந்தையை மீட்ட போலீசார் விருதுநகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து பராமரித்து வருகிறார்கள்.

    ராஜபாளையத்தில் பிறந்த ஒரு வாரமேயான ஆண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாலாமணி என்ற பெண் மூலமாக லோகாம்பாள் குழந்தை விற்பனை தொழிலை கற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
    • தினேஷ்-நாகஜோதியின் பெண் குழந்தையை விற்பனை செய்வதற்கு இருவரும் சேர்ந்து முயற்சித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    சென்னை:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த தினேஷ்-நாகஜோதி தம்பதிக்கு 3-வதாக பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்ய பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் திருச்செங்கோடு அரசு டாக்டர் அனுராதா, புரோக்கர் லோகாம்பாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நாகஜோதி-தினேஷ் தம்பதிகளின் வீட்டுக்கு சென்று குழந்தையை விற்பனை செய்ய லோகாம்பாள் ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணம் தருவதாக கூறியுள்ளார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போதுதான் குழந்தை விற்பனை தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியானது.

    பாலாமணி என்ற பெண் மூலமாக லோகாம்பாள் குழந்தை விற்பனை தொழிலை கற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து லோகாம்பாலின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் டாக்டர் அனுராதாவுடன் சேர்ந்து ஏற்கனவே ஆண் குழந்தையை சட்ட விரோதமாக விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது.

    தினேஷ்-நாகஜோதியின் பெண் குழந்தையை விற்பனை செய்வதற்கு இருவரும் சேர்ந்து முயற்சித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் குழந்தை விற்பனை விவகாரத்தில் உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை விற்பனை கும்பலின் பின்னணியில் மனித உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் குழந்தை விற்பனை வழக்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    தமிழகம் முழுவதும் குழந்தை விற்பனை சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரையும் பிடிப்பதற்கு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    அதே நேரத்தில் உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் பற்றியும் அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    குழந்தை விற்பனை கும்பல், பச்சிளம் குழந்தைகளின் உடல் உறுப்புகளை திருடி விற்பனை செய்திருக்கலாமோ? என்கிற சந்தேகம் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து குழந்தை விற்பனை மற்றும் உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்களை கூண்டோடு பிடிக்க போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    • புரோக்கர் லோகாம்பாள் மற்றும் அரசு டாக்டர் அனுராதா ஆகியோரை கைது செய்து சேலம் பெண்கள் ஜெயிலில் அடைத்தனர்.
    • குழந்தை விற்பனை வழக்கில் குமாரபாளையத்தை சேர்ந்த புரோக்கர் பாலாமணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 29). இவரது மனைவி நாகதேவி (26). மில் தொழிலாளி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 7-ந் தேதி சூரியம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாகதேவிக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் 3-வது பெண் குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்று தருவதாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றும் டாக்டர் அனுராதா என்பவரும், கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த புரோக்கர் லோகாம்பாள் என்பவரும் பேரம் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து தினேஷ் திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகாம்பாளிடம் விசாரணை நடத்தியதில் புரோக்கர்கள் மூலம் தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து புரோக்கர் லோகாம்பாள் மற்றும் அரசு டாக்டர் அனுராதா ஆகியோரை கைது செய்து சேலம் பெண்கள் ஜெயிலில் அடைத்தனர். மேலும் டாக்டர் அனுராதா பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவர் நடத்தி வந்த 2 கிளீனிக்குகளும் மாவட்டம் நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த நிலையில் குழந்தை விற்பனை வழக்கில் குமாரபாளையத்தை சேர்ந்த புரோக்கர் பாலாமணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோசங்கி தேவி இருவரிடமும் தனித்தனியாக ரூ.5 ஆயிரம் முன்பணம் பெற்றுக்கொண்டார்.
    • கடந்த 4-ந் தேதி கோசங்கி தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் கோசங்கி தேவி. நிறைமாத கர்ப்பிணியான இவர் குடும்ப வறுமையால் தவித்தார். இதன் காரணமாக அவர் தனக்கு பிறக்க போகும் குழந்தையை விற்க முடிவு செய்தார்.

    அம்பேத்கர் காலனி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற கோசங்கி தேவி அங்கு பணியில் இருந்த ஆஷா ஊழியர் ஜெயாவை தொடர்பு கொண்டார். வறுமையின் காரணமாக தனக்கு பிறக்க போகும் குழந்தையை விற்க உள்ளதாக அவரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து ஜெயா ஆட்டோ நகரை சேர்ந்த ஷபானா பேகம் மற்றும் அமீனா பேகம் என்பவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

    கோசங்கி தேவி இருவரிடமும் தனித்தனியாக ரூ.5 ஆயிரம் முன்பணம் பெற்றுக்கொண்டார். அப்போது ஆண் குழந்தை பிறந்தால் ரூ 1.50 லட்சமும், பெண் குழந்தை பிறந்தால் ரூ.1 லட்சம் தர வேண்டும் என பேரம் பேசினார்.

    கடந்த 4-ந் தேதி கோசங்கி தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததை அறிந்த ஜெயா ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார்.

    அப்போது எனக்கு தெரியாமல் எப்படி 2 பேரிடம் தனித்தனியாக முன்பணம் வாங்கினாய் என சண்டையிட்டார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரும் வாக்குவாதம் செய்வதை வீடியோவாக செல்போனில் பதிவு செய்தனர்.

    பதிவு செய்யப்பட்ட வீடியோவை போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். கோசங்கி தேவி, ஜெயா, ஷபானா பேகம், அமினா பேகம் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை அளிக்க சென்ற டாக்டர்கள் பெண் மற்றும் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • மன உளைச்சலில் இருந்த பெண், குழந்தை பிறந்ததும் அதனை கே.ஜி.எப். எடுத்து சென்று விற்பனை செய்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.

    ஆம்பூர்:

    குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயது பெண். இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் தனது அக்கா வீட்டில் தங்கி வந்தார்.

    அப்போது பெண்ணுக்கும், அவரது அக்கா கணவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு பழகி வந்தனர்.

    இதில் கர்ப்பமான பெண்ணை அவரது உறவினர்கள் கடந்த 23-ந்தேதி பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு நேற்று முன்தினம் இரவு பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை மற்றும் அவரது தாய் நேற்று காலை திடீரென அங்கிருந்து மாயமாகி விட்டனர்.

    சிகிச்சை அளிக்க சென்ற டாக்டர்கள் பெண் மற்றும் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து டாக்டர்கள் உமராபாத் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் பெண்ணின் செல்போன் எண் சிக்னலை வைத்து தேடினர்.

    பெண் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் கே.ஜி.எப். விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அங்கு குழந்தையின் தாய் குழந்தையை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு, பெண் மற்றும் அவரது உறவினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    ஆஸ்பத்திரியிலிருந்து குழந்தை மற்றும் அவரது தாய் திடீரென காணாமல் போனதால் அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கினோம்.

    பெண் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து பெண் ஆம்பூர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி வந்தார்.

    அக்காவின் கணவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் கர்ப்பமானார். பெண்ணை அவரது உறவினர்கள் கேலி கிண்டல் செய்வார்கள் என பயந்தனர்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த பெண், குழந்தை பிறந்ததும் அதனை கே.ஜி.எப். எடுத்து சென்று விற்பனை செய்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.

    இதுகுறித்து பெண், அவரது உறவினர்களிடம் என் அண்ணனுக்கு பயந்து நான் குழந்தையை வேறொரு நபரிடம் கொடுத்துள்ளேன் எனக்கூறி நாடகமாடி உள்ளார்.

    பெண்ணிடம் தொடர்ந்து விசாரித்ததில் குழந்தையை விற்பனை செய்தது தெரிய வந்தது. குழந்தையை மீட்டு அவரிடம் ஒப்படைத்ததோடு அறிவுரைகள் வழங்கியுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • குழந்தையை ரூபாலி மோண்டல் ஒரு பெண்ணுக்கு விற்று விட்டதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் செய்தார்.
    • ரூபாலியை கைது செய்த போலீசார் மிட்னாபூர் சென்று குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் நோனா டங்கா பகுதியில் உள்ள ரெயில்வே காலனியை சேர்ந்தவர் இளம் பெண் ரூபாலி மோண்டல்.

    இவருக்கு கடந்த 21 நாட்குளுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

    இந்நிலையில் அந்த குழந்தையை ரூபாலி மோண்டல் ஒரு பெண்ணுக்கு விற்று விட்டதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அனந்தபுர் போலீசார் ரூபாலியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பிறந்து 21 நாட்களே ஆன குழந்தையை ரூ.4 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    மிட்னாபூரை சேர்ந்த கல்யாணி குஹா பெண்ணுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத நிலையில் அவரிடம் பணம் வாங்கிக்கொண்டு குழந்தையை விற்றதாக ரூபாலி கூறினார். இதைத்தொடர்ந்து ரூபாலியை கைது செய்த போலீசார் மிட்னாபூர் சென்று குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் ரூபாலிக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் மற்றும் கல்யாணி குஹா உள்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.
    • போலீசார் விசாரிப்பதை அறிந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார்.

    கொல்கத்தா :

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்காநகர் பனிஹத்தி பகுதியில் அந்த தம்பதி வசித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த சில வாரங்களாக தங்கள் குழந்தையின்றி நடமாடுவது குறித்தும், ஜாலியாக பல இடங்களுக்கு சுற்றித்திரிவது குறித்தும் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து போலீசார், இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரிப்பதை அறிந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார். குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.

    ஒரு மாதத்திற்கு முன்பாக அந்த தம்பதி தங்களது 8 மாத ஆண் குழந்தையை ஒருவரிடம் விற்றுள்ளனர். அதில் கிடைத்த பணத்தில் ஐபோன்-14 என்ற நவீன மாதிரி போனை விலைக்கு வாங்கி உள்ளனர். மேலும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று உல்லாசமாக வாழ்ந்துள்ளனர்.

    அத்துடன் புதிதாக வாங்கிய செல்போனில் வீடியோ காட்சிகளை பதிவு செய்து ரீல்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.

    "இதுகுறித்து எங்களுக்கு கடந்த 24-ந் தேதிதான் புகார் வந்தது. குழந்தையை விற்பனை செய்த குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தையை எவ்வளவு பணத்திற்கு விற்றார்கள், யாரிடம் விற்றார்கள் என்பது பற்றிய விவரங்கள், அந்த பெண்ணின் கணவரை பிடித்தால்தான் தெரியவரும். இது தொடர்பாக அவளது கணவரையும், குழந்தையை வாங்கியவர்களையும் தேடி வருகிறோம்" என்று போலீசார் தெரிவித்தனர்.

    • குழந்தைகள் நலன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • 2 குழந்தைகளையும் மீட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மிருதொட்டி மண்டலம் மல்லுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பணேட்டி போச்சையா. இவரது மனைவி ரேணுகா, கவுதம் (வயது 3) தருண்(2) என்ற மகன்கள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரேணுகா கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    போச்சையா மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

    இந்நிலையில் போச்சையா உடல் நலம் பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார் . அவரால் 2 குழந்தைகளையும் கவனிக்க முடியவில்லை.

    இதனால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தனது மகன்களை விற்பனை செய்ய முடிவு செய்தார். அவர்களிடம் ரூ.1 லட்சம் முதல் பேரம் பேசி வந்தார் .

    இது குறித்து குழந்தைகள் நலன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் போச்சையா வீட்டிற்கு வந்தனர்.

    அவரிடம் இருந்து 2 குழந்தைகளையும் மீட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் குழந்தைகள் அங்குள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    போச்சயாவை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர். குழந்தைகளை விற்றாலும் அல்லது வாங்கினாலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    குழந்தை இல்லாத பெற்றோர்கள் வழிகாட்டு முறைகளை பின்பற்றி குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வடலூரில் குழந்தை கடத்தி விற்பனை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • குழந்தை விற்பனையில் தொடர்புடைய அரசியல் பிரமுகரை நெருங்கி விட்டதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் குறைந்த விலைக்கு குழந்தைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக வடலூரை சேர்ந்த சித்த மருத்துவர் மெகருன்னிசா, சுடர் விழி, சீர்காழி சட்ட நாதபுரம் ஆனந்தன், புவனகிரி கீரப்பாளையம் கஜேந்திரன் மனைவி ஷீலா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 2 மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது.

    கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏழை பெற்றோரிடம் இருந்து ஆண் குழந்தையை குறைந்த விலைக்கு வாங்கி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் பெற்று விற்பனை செய்தது தெரியவந்தது.

    இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார். இதன் பேரில் சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் புவனகிரி, வடலூர் பகுதிகளில் குழந்தைகள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன குழந்தைகள் குறித்தும் விவரம் சேகரித்து வருகின்றனர்.

    கைதான சித்த மருத்துவர் மெகருன்னிசா தான் 3 குழந்தைகளை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார். எனவே வடலூரில் பிடிபட்ட குழந்தை விற்பனை கும்பலுக்கு தமிழகத்தில் பிற குழந்தை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் வடலூர் நறிக்குறவர் காலனியை சேர்ந்த ஆனந்த் மற்றும் கடலூர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த நந்தினி ஆகியோரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.

    குழந்தை விற்பனையில் தொடர்புடைய அரசியல் பிரமுகரை நெருங்கி விட்டதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

    • பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை ரூ.40 ஆயிரத்துக்கு விற்ற பெற்றோர், உடந்தையாக இருந்த நர்சுகள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • ஏழ்மை காரணமாக பாண்டீசுவரன், பஞ்சவர்ணம் தம்பதி குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரநேரி ஈசுவரன் காலனியை சேர்ந்தவர் பாண்டீசுவரன் (வயது 28). இவருடைய மனைவி பஞ்சவர்ணம் (24). இவர்களுக்கு காவியா என்ற மகளும், சித்தார்த், அரவிந்த் என்ற மகன்களும் உள்ளனர்.

    கணவன், மனைவி இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள்.

    ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், பஞ்சவர்ணம் மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு கடந்த மாதம் 23-ந்தேதி சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில், 4-வதாக பெண் குழந்தை பிறந்தது.

    ஏழ்மை காரணமாக பாண்டீசுவரன், பஞ்சவர்ணம் தம்பதி இந்த குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி மாரநேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை செய்துவந்த அஜிதா (34) என்பவருக்கு தெரியவந்தது. அவர், தனக்கு தெரிந்த ஒருவர் நாகர்கோவிலில் உள்ளதாகவும், அவரிடம் குழந்தையை கொடுத்தால், தேவையான பணம் கொடுப்பார் என்று கூறியதாக தெரிகிறது.

    இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு பாண்டீசுவரன், பஞ்சவர்ணம் ஆகியோர் சிவகாசியில் இருந்து குழந்தையுடன் நாகர்கோவில் புறப்பட்டுள்ளனர். செல்லும் வழியில் நெல்லையில், வங்கி அதிகாரியான ஜார்ஜ் மற்றும் அவரது மனைவி ஐரின் (42) ஆகியோரிடம் ரூ.40 ஆயிரம் பெற்றுக்கொண்டு குழந்தையை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், பாண்டீசுவரன், பஞ்சவர்ணத்துக்கு இடையே குழந்தையை விற்றது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பஞ்சவர்ணத்தின் தாய் மாரியம்மாள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஜானகி, நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    விசாரணையில், கணவன், மனைவி இருவரும் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை ரூ.40 ஆயிரத்துக்கு விற்றது உறுதியானது. இதை தொடர்ந்து அதிகாரி ஜானகி, மாரநேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாண்டீசுவரன், பஞ்சவர்ணம், நாகர்கோவிலை சேர்ந்த ஜார்ஜ், அவருடைய மனைவி ஐரின், குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக மாரநேரி ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் அஜிதா, முத்துமாரி அம்மாள் (51) ஆகிய 6 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் பாண்டீஸ்வரன், பஞ்சவர்ணம், ஐரின், அஜிதா, முத்துமாரி அம்மாள் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • வக்கீல் அந்த குழந்தையை ரூ.3.50 லட்சத்துக்கு விற்பனை செய்து விட்டு ஜானகிக்கு ரூ.80 ஆயிரம் மட்டுமே கொடுத்து உள்ளார்.
    • குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்படுமா அல்லது காப்பக பராமரிப்பில் விடப்படுமா? என்பது தெரியவரும்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி மங்கமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி (வயது 33). திருமணம் ஆகாத நிலையில் தகாத உறவினால் கர்ப்பம் தரித்தார். பின்னர் அந்த கருவை கலைக்க முயற்சி செய்தார். ஆனால் 7 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் கலைப்பது சாத்தியமில்லை என்பதை அறிந்து அமைதியானார்.

    அதன் பின்னர் ஜானகிக்கு பெண் குழந்தை பிறந்தது. தகாத உறவில் பிறந்ததால் அந்த குழந்தையை வளர்க்க மனமின்றி அதனை விற்க முயற்சி செய்துள்ளார். அதன்படி அந்த பகுதியில் வசித்து வரும் வக்கீல் பிரபு என்பவர் மூலம் குழந்தையை விற்பனை செய்தார்.

    வக்கீல் அந்த குழந்தையை ரூ.3.50 லட்சத்துக்கு விற்பனை செய்து விட்டு ஜானகிக்கு ரூ.80 ஆயிரம் மட்டுமே கொடுத்து உள்ளார். இதனைத் தாமதமாக அறிந்து கொண்ட ஜானகி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வக்கீலை பழி வாங்குவதற்காக குழந்தையை காணவில்லை என்று ஐகோர்டில் ஜானகி மனு தாக்கல் செய்து ஒரு நாடகம் ஆடினார்.

    அதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் தாயின் ஒப்புதலுடனேயே அந்த குழந்தை விற்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தையின் தாய் ஜானகி, வக்கீல் பிரபு, கார் டிரைவர் ஆகாஷ், குழந்தையை வாங்கி விற்ற உறையூரை சேர்ந்த புரோக்கர் கவிதா உள்ளிட்ட 6 பேரை லால்குடி போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    அதன் பின்னர் புரோக்கர் கவிதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த குழந்தை டெல்லியில் உள்ள மற்றொரு புரோக்கர் மூலம் மீண்டும் கை மாறி இருப்பது தெரிய வந்தது. உடனே குழந்தையை மீட்கும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம், இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி விரைந்தனர். அதன் பின்னர் டெல்லியை சேர்ந்த புரோக்கர் கோபிநாத் என்கிற கோபிகிருஷ்ணன் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் ஜானகியின் குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு கர்நாடக மாநிலம் வெள்ளக்கவி மாவட்டம் உத்யம்பாக் போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஜன்னம்மா நகரை சேர்ந்த பாக்கியஸ்ரீ என்ற பெண்ணிடம் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பாக்யஸ்ரீ தம்பதிக்கு குழந்தை இல்லாததால் டெல்லியில் சிகிச்சை பெற்றபோது, அவரை அணுகிய புரோக்கர் கோபி ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்து அவரும் கமிஷன் பெற்றுள்ளார்.

    இதையடுத்து மீட்கப்பட்ட குழந்தையுடன் தனிப்படை போலீசார் திருச்சி திரும்பி உள்ளனர். பின்னர் முறைப்படி அந்த குழந்தையை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். அதன் பின்னரே அந்த குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்படுமா அல்லது காப்பக பராமரிப்பில் விடப்படுமா? என்பது தெரியவரும்.

    இதற்கிடையே கைதான டெல்லி புரோக்கரை அங்குள்ள கோர்ட்டு அனுமதியுடனும், ரூ.5 லட்சம் கொடுத்து குழந்தையை வாங்கிய பாக்கியஸ்ரீ என்ற பெண்ணையும் உரிய அனுமதியுடன் திருச்சிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளர்.

    • தனிப்படை நடத்திய விசாரணையில் குழந்தை டெல்லியில் உள்ள குழந்தை புரோக்கர் ஒருவரிடம் விற்கப்பட்டது தெரிய வந்தது.
    • விசாரணையில் குழந்தை வெளிநாட்டிற்கு விற்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி மங்கமாள்புரத்தை சேர்ந்தவர் ஜானகி. இவருக்கும் லால்குடி பகுதியில் வக்கீலாக பணிபுரிந்த பிரபு என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ஜானகி கர்ப்பமானார்.

    இதையடுத்து ஜானகியை வக்கீல் பிரபுவும், அவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளியும், குழந்தை பிறந்தவுடன் அதனை விற்று காசு பார்க்கலாம் என்று கூறி சமாதானப்படுத்தி உள்ளனர். அதன்படி ஜானகிக்கு பிறந்த பெண் குழந்தையை பிரபு வாங்கி சென்று ரூ.3.50 லட்சத்துக்கு விற்றுள்ளார்.

    ஆனால் 1 லட்சத்திற்கு குழந்தையை விற்றதாக கூறி ரூ.20 ஆயிரத்தை கமிஷனாக எடுத்துக்கொண்டு ரூ.80 ஆயிரத்தை ஜானகியிடம் கொடுத்துள்ளார். இதனை மோப்பம் பிடித்த மற்றொரு வக்கீல் குழந்தை ரூ.3.50 லட்சத்திற்கு விற்கப்பட்டதை ஜானகியிடம் கூறவே, ஆத்திரம் அடைந்த ஜானகி பிரபுவிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்துவிட்டார்.

    இதனால் குழந்தையை காணவில்லை என்று ஐகோர்டில் ஜானகி மனுதாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது குழந்தை விற்கப்பட்டதை அறிந்த நீதிபதி, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதன் காரணமாக ஜானகி, பிரபு, அவரின் 2-வது மனைவி சண்முகவள்ளி, கார் டிரைவர் ஆகாஷ், குழந்தையை வாங்கி விற்ற உறையூரை சேர்ந்த புரோக்கர் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் விற்கப்பட்ட குழந்தையை மீட்பதற்கு டி.எஸ்.பி. அஜய்தங்கம் தங்கம் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்றது. தனிப்படை நடத்திய விசாரணையில் குழந்தை டெல்லியில் உள்ள குழந்தை புரோக்கர் ஒருவரிடம் விற்கப்பட்டது தெரிய வந்தது.

    இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில், பிரெட்ரிக், பாண்டியராஜன், அபுதாகீர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் டெல்லி சென்று கடந்த ஒரு வார காலமாக முகாமிட்டு உள்ளனர்.

    தொடர் தேடுதல் வேட்டையில் குழந்தை புரோக்கர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அவரை சுற்றி நடத்திய ரகசிய விசாரணையில் குழந்தை வெளிநாட்டிற்கு விற்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. குழந்தையை மீட்கும் நடவடிக்கையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே டெல்லியில் குழந்தை புரோக்கர் விரைவில் கைது செய்யப்பட்டு திருச்சிக்கு அழைத்து வரப்பட உள்ளதாகவும், குழந்தையும் மீட்கப்படலாம் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    ×