search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் பொன்முடிக்கு இன்று தண்டனை அறிவிப்பு
    X

    அமைச்சர் பொன்முடிக்கு இன்று தண்டனை அறிவிப்பு

    • 2016-ம் ஆண்டு விழுப்புரம் நீதிமன்றம் விடுதலை செய்தது.
    • 2017-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின்போது 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி. இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கன்னியப்பன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 2015-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சுந்தரமூர்த்தி முன்பு இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ.1 கோடியே 36 லட்சத்திற்கு மேல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. ஆந்திர மாநில பத்திர பதிவுத்துறை தாசில்தார் மற்றும் வங்கி அதிகாரிகள் உட்பட 39 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. பொன்முடி மீது போலீஸ் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் வழங்கப்பட்டன.

    இதை பொன்முடி தரப்பினர் மறுத்தனர். இருதரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த தீர்ப்பில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர்களை விடுதலை செய்கிறேன் என்று கூறியிருந்தார்.

    இதை எதிர்த்து ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். பின்னர் நேற்று முன்தினம் பொன்முடி குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு 21-ந்தேதி (இன்று) வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.

    தண்டனை அறிவிக்கப்பட இருப்பதால் நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஏதாவது இடையூறு இருந்தால், இருவரும் ஆன்லைன் வாயிலாக ஆஜராகலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×