search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 1½ அடி சரிவு
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 1½ அடி சரிவு

    • ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல்லில் தற்போது வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிரதான அருவி மற்றும் காவிரி கரைகளில் குளித்து மகிழ்கிறார்கள்.

    மேலும் தொங்கு பாலத்தில் இருந்து ஒகேனக்கல் அருவிகளின் அழகையும், குடும்பத்தினருடன் பார்த்து ரசித்து வருகிறார்கள். ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 2 ஆயிரத்து 49 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 2 ஆயிரத்து 108 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று முன்தினம் 102.29 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 101.62 அடியானது. இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து 100.95 அடியானது.

    இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் சுமார் 1½ அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

    Next Story
    ×