search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொழிலதிபர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை ஏன்?
    X

    தொழிலதிபர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை ஏன்?

    • பெரும்பாலான குவாரிகளில் போலி ரசீதுகள் மூலமாகவும், ரசீதுகள் இல்லாமலும் மணல் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் புகாா் கூறின.
    • அரசுக்குச் சொந்தமான குவாரிகளில் சட்டவிரோதமாக மணலை விற்பதால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் நீா்வளத்துறையின் கீழ் சுமாா் 15 ஆற்று மணல் குவாரிகள் செயல்படுகின்றன. இதில் 12 மணல் குவாரிகள் மட்டும் முழுமையாக செயல்படுகின்றன. இந்த மணல் குவாரிகளில் இருந்து மணலை பெறுவதற்கு நீா்வளத்துறையின் பிரத்யேகமான இணையதளத்தில் (டி.என்.சாண்ட்) பதிவு செய்து, பணத்தை செலுத்தி ரசீது பெற்று, அந்த ரசீது மூலம் சம்பந்தப்பட்ட குவாரியில் மணலை லாரிகளில் பெற வேண்டும் என்பது விதிமுறையாகும்.

    இந்த குவாரிகளில் அரசு ஒரு யூனிட் மணல் ரூ.1,000-க்கு விற்கிறது. ஆனால், குவாரிக்குள் லாரிகள் செல்ல முடியாது என்பதால், அங்குள்ள யாா்டுக்கு மணல் கொண்டுவரப்பட்டு, அங்கு லாரிகளில் ஏற்றப்படுகிறது. இதற்காக கூடுதல் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.650 பெறப்படுகிறது.

    சாதாரணமாக ஒரு லாரியில் 3 யூனிட் மணல் வரை ஏற்ற முடியும் என்பதால், மூன்று யூனிட் மணல் யாா்டில் ரூ.8,000 வரை விற்கப்படுகிறது. ஆற்றில் இருந்து மணலை எடுத்து வந்து யாா்டில் மணலை இருப்பு வைத்து, லாரியில் ஏற்றுவதற்கு தனியாருக்கு அரசு ஒப்பந்தம் வழங்குகிறது.

    தமிழகத்தில் பெரும்பாலான மணல் குவாரிகளில் இந்த ஒப்பந்தப்பணியை புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் சோ்ந்த தொழில் அதிபா் எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் வசிக்கும் தொழில் அதிபா் ரத்தினம் ஆகியோா் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், இணையவழியில் அரசுக்கு பணம் செலுத்தப்பட்டு பெயரளவில் மட்டும் மணல் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்தன. பெரும்பாலான குவாரிகளில் போலி ரசீதுகள் மூலமாகவும், ரசீதுகள் இல்லாமலும் மணல் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் புகாா் கூறின. இதன்மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இதில் அரசு இணையதளம் பெரும்பாலான நாள்களில் தொழில்நுட்பக் காரணங்களால் செயல்படாமலேயே இருப்பதால், மணல் வியாபாரிகள் மூலம் போலி ரசீது பெற்று அதிக விலைக்கே வாங்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனா்.

    அரசுக்குச் சொந்தமான குவாரிகளில் சட்டவிரோதமாக மணலை விற்பதால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பும் செய்யப்படுகிறது.

    குவாரிகள் மூலம் சட்ட விரோதமாக ஈட்டப்படும் பணம் தொடா்பாக அண்மையில் அமலாக்கத் துறை விசாரணை செய்ததில், அங்கு நடைபெறும் விதிமுறை மீறல்கள் அனைத்தையும் கண்டறிந்தது.

    இதையடுத்து, சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக கருதப்படும் புதுக்கோட்டை தொழில் அதிபா் எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல்லைச் சோ்ந்த தொழிலதிபா் ரத்தினம் ஆகியோருக்கு சொந்தமான மற்றும் தொடா்புடைய இடங்கள் உள்பட 30 இடங்களில் அமலாக்கத்துறையினா் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நேரத்தில் சோதனை செய்தனா். இன்று 2-வது நாளாக சோதனை நடந்தது.

    Next Story
    ×