search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடிநீர் கட்டண மேல்வரி ஜூலை 1-ந்தேதி முதல் குறைப்பு
    X

    குடிநீர் கட்டண மேல்வரி ஜூலை 1-ந்தேதி முதல் குறைப்பு

    • தற்போது வசூலிக்கப்பட்டு வரும் மேல்வரி 1.25 சதவீதத்தில் இருந்து ஜூலை 1-ந்தேதி முதல் 1 சதவீதமாக குறைத்திட சென்னை குடிநீர் வாரியம் தீர்மானித்துள்ளது.
    • பொதுமக்கள் சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை இணைய தளம் வழியாக செலுத்தலாம்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மாதத்திற்கு 1.25 சதவீதத்தில் மேல் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நுகர்வோர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது வசூலிக்கப்பட்டு வரும் மேல்வரி 1.25 சதவீதத்தில் இருந்து ஜூலை 1-ந்தேதி முதல் 1 சதவீதமாக குறைத்திட சென்னை குடிநீர் வாரியம் தீர்மானித்துள்ளது.

    எனவே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் (மண்டலம் 1 முதல் 15 வரை) உள்ள நுகர்வோர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் குடிநீர், கழிவு நீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செலுத்தி மேல் வரியினை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் பொதுமக்கள் சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை இணைய தளம் வழியாக www.cmwssb.tn.gov.in என்ற வலைதளத்தை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம்.

    பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலங்களில் வரைவோலை, காசோலை மற்றும் ரொக்கமாகவும், தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில் காசோலை, வரைவோலையாகவும் செலுத்தலாம்.

    மேலும் யூ.பி.ஐ., கி.யூ.ஆர். குறியீடு மற்றும் Pos போன்ற பிற கட்டண முறைகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம். எனவே பொதுமக்கள் குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை உரிய காலத்திற்குள் செலுத்தி வாரியத்தின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    Next Story
    ×