search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம், புதுச்சேரியில் 14-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    தமிழகம், புதுச்சேரியில் 14-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

    • நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது
    • சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 14-ந்தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளையும், நாளை மறுதினமும் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதேபோல 14-ந்தேதியன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

    மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள், வடக்கு, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், ஒடிசா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று வானிலை மையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேர நிலவரப்படி, சின்னக்கல்லாரில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    இதற்கு அடுத்தப்படியாக அவலாஞ்சியில் 8 செ.மீ., வால்பாறை, பந்தலூரில் தலா 7 செ.மீ., சோலையார், ஹரிசன் எஸ்டேட்டில் தலா 6 செ.மீ., ஊத்துக்கோட்டை, மேல்பவானி, சின்கோனாவில் தலா 5 செ.மீ., தேவாலாவில் 4 செ.மீ., பெரியாறில் 3 செ.மீ., தேக்கடி, பாலக்கோடு, தாமரைப்பாக்கம், எமரால்டு, பொன்னேரி, மாரண்டஹள்ளி, நடுவட்டம், அஞ்சட்டி, ஒகேனக்கல், பள்ளிப்பட்டில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

    Next Story
    ×