search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஐ.பி.எல். டிக்கெட்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு
    X

    ஐ.பி.எல். டிக்கெட்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு

    • சமீபத்தில், ஐ.பி.எல். டிக்கெட்களை கள்ள சந்தையில் விற்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • கள்ள சந்தையில் டிக்கெட்கள் விற்பனை செய்வது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்கு எதிராக அளித்த புகார் மனுவை பரிசீலிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

    சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சத்திய பிரகாஷ் தாக்கல் செய்த மனுவில், "சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை காண நியாயமான கட்டணத்தில் டிக்கெட் பெறுவது இமாலய இலக்காக உள்ளது.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ஆன்லைன் மூலம் டிக்கெட்களை விற்கிறது. ஆனால் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே டிக்கெட்கள் விற்று தீர்ந்து விடுகின்றன. சில சமூக விரோதிகள், டிக்கெட்களை மொத்தமாக வாங்கி, அதனை 10 மடங்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்கின்றனர்.

    குறைந்த கட்டண டிக்கெட்கள் கூட, 14 ஆயிரம் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. டிக்கெட்டுகளை வாங்கி அதிக விலைக்கு விற்பதன் பின்னணியில், மாபியா கும்பல் இயங்கி வருகிறது.

    சமீபத்தில், ஐ.பி.எல். டிக்கெட்களை கள்ள சந்தையில் விற்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்களும், 31 ஆயிரத்து 500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதனால், இந்த மாபியா கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், விதிகளை மீறி செயல்படும் சேப்பாக்கம் மைதான அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கள்ள சந்தையில் டிக்கெட்கள் விற்பனை செய்வது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, விளையாட்டு போட்டிகள் முடியும் நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவெடுக்கும்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×