search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குட்டியுடன் இறந்து கிடந்த காட்டுயானை
    X
    குட்டியுடன் இறந்து கிடந்த காட்டுயானை

    சிறுமுகை வனப்பகுதியில் குட்டி ஈன்ற காட்டு யானை இறந்தது- குட்டியானையும் இறந்த சோகம்

    சிறுமுகை வனப்பகுதியில் குட்டி ஈன்ற நிலையில் தாயும் பச்சிளம் யானைக்குட்டியும் இறந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சிறுமுகை:

    கோவை மாவட்டம் சிறுமுகை வனசரகத்தில் காட்டு யானைகள், மான்கள், அரியவகை விலங்குகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி வனத்தையொட்டிய கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றனர்.

    சமீபகாலமாக சிறுமுகை வனசரகத்தில் காட்டு யானைகள் மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை சிறுமுகை வனசரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டை காப்பு காட்டு வனப்பகுதியில் வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பவானி சாகர் நீர் தேக்க பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து சென்ற போது, அங்கு பெண் யானை ஒன்று, குட்டியுடன் இறந்த நிலையில் கிடந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சியான வன ஊழியர்கள் சம்பவம் குறித்து உடனடியாக சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்தனர்.

    வன அதிகாரிகள், கால்நடை டாக்டர்கள் சுகுமார், தியாகராஜன் ஆகியோருடன் யானை இறந்து கிடந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டனர்.

    இதனையடுத்து கால்நடை மருத்துவர்கள் யானையின் உடலை உடற்கூறாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    வனத்திற்குள் இறந்து கிடந்த யானைக்கு 30 வயது இருக்கும். கர்ப்பிணியான இந்த யானை நேற்று குட்டி ஈன்றது. குட்டி யானையும் இறந்தே பிறந்தது. குட்டி ஈன்ற சில நிமிடங்களிலேயே யானையும் இறந்து விட்டது.

    கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்தபோது கருச்சிதைவு ஏற்பட்டு சிசுவுடன் யானை இறந்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் உடற்கூறாய்வுக்கு பின்னரே யானையின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என தெரிவித்தனர்.

    குட்டி ஈன்ற நிலையில் தாயும் பச்சிளம் யானைக்குட்டியும் இறந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை வனக்கோட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து யானைகள் இறந்து வருவது குறித்து உயர்மட்ட சிறப்பு குழு ஆய்வு செய்து வரும் நிலையில் சிறுமுகையில் மேலும் ஒரு பெண் யானை இறந்துள்ள சம்பவம் வனத்துறையினரிடம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
    Next Story
    ×