search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வைகை அணை
    X
    வைகை அணை

    69 அடிக்கு கீழ் குறைந்த வைகை அணை நீர் மட்டம்

    கூடலூர் நீர் பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் நின்று விட்டதால் வைகை அணை நீர் மட்டம் 69 அடிக்கும் கீழ் சரிந்தது.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த நீர் மட்டம் 71 அடியாகும். கடந்த நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை இப்பகுதியில் அதிக அளவு பெய்ததால் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை நெருங்கியது. அதனைத் தொடர்ந்து தேனி, மதுரை, உள்பட 5 மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    அதன் பிறகு பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையிலும் அணையின் நீர் மட்டம் 69 அடியிலேயே நீடித்து வந்தது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அவ்வப்போது பெய்த கோடை மழை காரணமாகவும் நீர் மட்டம் குறையாமல் இருந்தது.

    கடந்த 15ந்தேதி அணையின் நீர் மட்டம் 69 அடிக்கும் கீழ் சரிந்து மறுநாள் மீண்டும் 69 அடியை கடந்தது. அதன் பிறகு அவ்வப்போது அணைக்கு நீர் வரத்து வந்தவண்ணம் இருந்தது.

    மதுரை மாநகர குடிநீருக்கு மட்டும் தினசரி 72 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 15 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் அணையின் நீர் மட்டம் 68.95 அடியாக குறைந்தது. நீர் வரத்து அடியோடு நின்று விட்டது. நீர் இருப்பு 5558 மி.கன அடியாக உள்ளது.

    பெரியாறு அணையின் நீர் மட்டம் 125.05 அடியாக உள்ளது. வரத்து மற்றும் திறப்பு 100 கன அடி. இருப்பு 3629 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர் மட்டம் மேலும் குறைந்து வரும் நிலையில் அடுத்த வாரம் மதுரை கள்ளழகர் கோவில் திருவிழாவுக்காக ஆற்று வழியாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதே போல் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவின் போதும் தண்ணீர் திறக்கப்படும். இதனால் அணையின் நீர் மட்டம் மேலும் சரிந்து கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மழை பெய்தால் மட்டுமே கோடை காலத்தில் ஏற்படக்கூடிய தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க முடியும்.
    Next Story
    ×