search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான சிறுவன் ஆதிஷ்வரன்- பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி
    X
    பலியான சிறுவன் ஆதிஷ்வரன்- பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி

    ஒட்டப்பிடாரம் அருகே லாரி மோதி 5 வயது சிறுவன் பலி

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே லாரி மோதிய விபத்தில் 5 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சிறுவனின் உடல் டயரில் சிக்கி சுமார் 50 அடி தூரம் இழுத்து செல்லப்பட்டுள்ளது.
    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மேலஅரசரடியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 38). கூலி தொழிலாளி. இவரது மனைவி பெருமாள் அம்மாள் (32). இவர்களுக்கு ஒரு மகளும், ஆதிஷ்வரன் (5) என்ற மகனும் உள்ளனர்.

    நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் ஆதிஷ்வரன் விளையாடிக் கொண்டிருந்தான். இரவு 7 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு ராமநாதபுரத்திற்கு சென்ற லாரி ஆதிஷ்வரன் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தலை நசுங்கி ஆதிஷ்வரன் சம்பவ இடத்திலேயே இறந்தான். சிறுவனின் உடல் டயரில் சிக்கி சுமார் 50 அடி தூரம் இழுத்து செல்லப்பட்டுள்ளது.

    இதையறிந்த அப்பகுதியினர் அங்கு திரண்டனர். உடனே லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பலியான சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர்.

    ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதிஷ்வரனின் பெற்றோர் மற்றும் ஊர்பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் ஏராளமான கனரக உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அதிவேகமாக செல்கிறது.

    இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே நீண்ட நாட்களாகவே வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே உடனடியாக வேகத்தடை ஏற்படுத்த வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது பேசிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், உடனடியாக வேகத்தடை அமைக்கப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில் இரவு 9½ மணிக்கு போராட்டத்தை கைவிட்டனர்.

    இதனால் 2½ மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×