search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்தி உயிருடன் இருந்த போது எடுத்த படம்
    X
    கார்த்தி உயிருடன் இருந்த போது எடுத்த படம்

    ஜாமீனில் வெளியே வர இருந்த கைதி மர்ம மரணம் - 5 மாத கைகுழந்தையுடன் மனைவி கதறல்

    ஆத்தூர் கிளை சிறையில் கைதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆத்தூர்:

    சேலம், கிச்சிப்பாளையம் சன்னியாசி குண்டு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகன் கார்த்தி (வயது 34). இவர் சேலத்தில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நீலா (வயது 25). இவர்களுக்கு சிவவர்ஷினி (6) என்ற மகளும், 5 மாதமே ஆன யாழ்மதி என்ற பெண் குழந்தையும் உள்ளது.

    கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே லாட்டரி சீட்டு விற்பனை வழக்குகள் இவர் மீது உள்ளன.இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி கிச்சிப்பாளையம் போலீசாரால் கார்த்தி, லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை ஜெயிலில் அடைத்தனர்

    இந்த வழக்கில் கார்த்திக்கு நேற்று ஜாமீன் கிடைத்துள்ளது. இதனால் இன்று அவர் ஜெயிலில் இருந்து வெளியே வர இருந்தார். அவர் வீட்டிற்கு வர உள்ளதால் குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

    இதையடுத்து இன்று காலை 6.30 மணி அளவில் ஜெயிலில் ஜாமீனை சரிபார்த்து கார்த்தியை வெளியே அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார்த்தி நெஞ்சு வலிப்பதாக கூறி சுருண்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

    உடனே ஜெயிலில் இருந்த போலீசார் கார்த்தியை உடனடியாக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கார்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதைதொடர்ந்து கார்த்தியின் உடல் ஆத்தூர் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது

    இது பற்றி சிறை நிர்வாகம் சார்பில் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இடிபோல் அமைந்த இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி நீலா மற்றும் குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். இன்று வீட்டிற்கு வந்து விடுவீர்கள் என்று ஆவலோடு இருந்தோம். இப்படி இறந்து விட்டீர்களே என 5 மாத கைகுழந்தையுடன் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    மேலும் அவரது 6 வயது மகள் சிவ வர்ஷினி, அப்பா, அப்பா எழுந்திருங்கள் எப்போது வீட்டுக்கு வருவீர்கள் என கேட்டு அழுதது.

    இந்த நிலையில் கார்த்தி சாவில் சந்தேகம் உள்ளது. அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார் என கூறி போலீசார் மற்றும் சிறை அதிகாரிகளிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து கார்த்தியின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    கார்த்தி வலிப்பு மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக சிறை துறை சார்பில் விளக்கம் அளித்துள்ளது. விசாரணை கைதி இறந்த சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆத்தூர் கிளை சிறைக்கு சென்று கார்த்தி எப்படி இறந்தார்? உடலில் காயங்கள் இருந்ததா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்பத்திரியில் கார்த்தியை அனுமதித்த போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×