search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ராமநாதபுரம் அருகே வேன் மோதி பைக்கில் சென்ற 2 பேர் பலி

    ராமநாதபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகே உள்ள சின்னச்சம்பை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஆறுமுகவேலன் (வயது28). இவர் வெளிநாடு சென்று விட்டு சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார்.

    இவரது வீட்டுக்கு நண்பரான சென்னையை சேர்ந்த நாகராஜன் (30) குடும்பத்துடன் வந்திருந்தார். இரு குடும்பத்தினரும் அரியமான் கடற்கரைக்கு சுற்றுலா செல்ல காரில் புறப்பட்டனர்.

    காரில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் ஆறுமுக வேலன் மற்றும் நாகராஜன் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

    இவர்கள் நதிப்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே மினி வேன் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த வேன் இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆறுமுகவேலன், நாகராஜன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

    அவர்களை, காரில் வந்த குடும்பத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஆறுமுகவேலன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். நாகராஜன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    விபத்து குறித்து உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் அக்காள் மடத்தைச் சேர்ந்த ராஜ்கண்ணன் (24) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×