search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி நாளை மறுநாள் வருகை- கோவையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

    பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கொடிசியா மைதானத்தில் மேடை அமைக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது.
    கோவை:

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற 25-ந்தேதி கோவைக்கு வருகிறார். இதற்காக காலை 7.45-க்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி காலை 10.25-க்கு சென்னை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு மீண்டும் 2.10 மணிக்கு சென்னை வருகிறார்.

    அங்கிருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 3.35 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு ஏராளமான பா.ஜ.கவினர் திரண்டு வந்து பிரதமரை வரவேற்கிறார்கள். அதனை தொடர்ந்து கார் மூலம் கொடிசியா அரங்கிற்கு செல்கிறார்.

    அங்கு நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று நெய்வேலி லிக்னைட் நிறுவனம், மத்திய கப்பல் போக்குவரத்து, மின்சாரம், தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம், நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகளின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் முடிவுற்ற திட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் மாலை 5 மணியளவில் காரில் கொடிசியா அரங்குக்கு அருகே உள்ள மைதானத்துக்கு செல்லும் பிரதமர் அங்கு பா.ஜனதா சார்பில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    பொதுக்கூட்டம் முடிந்ததும் கோவை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி சென்றடைகிறார்.

    பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கொடிசியா மைதானத்தில் மேடை அமைக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. கொடிசியா அரங்கு மற்றும் கொடிசியா மைதானம் முழுவதும் போலீஸ் பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மோடியின் வருகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்கு வர உள்ளனர். பாதுகாப்பு பணியில் 17 எஸ்.பிக்கள், 38 கூடுதல் எஸ்.பிக்கள், 48 டி.எஸ்.பிக்கள் உள்பட மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதவிர பிரதமரின் 2 நிகழ்ச்சிகளும் கொடிசியா அரங்கு மற்றும் மைதானத்தில் நடப்பதால் அந்த பகுதி முழுவதுமே போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக கொடிசியா நுழைவு வாயில் முன்பு மினி கன்ட்ரோல் ரூமை போலீசார் அமைத்துள்ளனர்.

    இதுதவிர பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும் கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்பு பணிக்கு வரும் அனைத்து போலீசாரும் மினி கன்ட்ரோல் ரூமில் பதிவு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள்(எஸ்.பி.ஜி) 30 பேர் கோவை வந்துள்ளனர். அவர்களுடன் பிரதமர் மோடி பயணிப்பதற்காக குண்டு துளைக்காத 4 கார்களும் வரழைக்கப்பட்டுள்ளன. 4 கார்களும் அரசு விருந்தினர் மாளிகையில் நிறுத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×