search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தட்டார்மடம் வியாபாரி செல்வன்
    X
    தட்டார்மடம் வியாபாரி செல்வன்

    தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு- சிறையில் இருக்கும் 4 பேரை காவலில் எடுக்க நாளை மனுதாக்கல்

    தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் 4 பேரை காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசார் நாளை மனு தாக்கல் செய்கிறார்கள்.
    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வன் (வயது 35).

    தண்ணீர்கேன் வியாபாரம் செய்து வந்த இவரை நிலப்பிரச்சினை காரணமாக கடந்த 17-ந் தேதி ஒரு கும்பல் கடத்தி கொலை செய்தனர்.

    இந்த வழக்கில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகி திருமணவேல் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது.

    சி.பி.சி.ஐ.டி. பிரிவின் டி.எஸ்.பி. அனில்குமார், இன்ஸ்பெக்டர் உலகராணி சபீதா மற்றும் போலீசார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன், திருமணவேல், சின்னத்துரை, முத்துராமலிங்கம் உள்பட 6 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் கைதான சின்னத்துரை, முத்துராமலிங்கம், கோர்ட்டில் சரண் அடைந்த திருமணவேல், முத்துகிருஷ்ணன் ஆகிய 4 பேரும் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் தான் இந்த கொலையில் மேலும் எத்தனை பேருக்கு தொடர்பு இருந்தது என்ற விபரம் தெரியவரும்.

    இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிறையில் இருக்கும் 4 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    இன்று அதற்கான மனு தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. நாளை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள், 4 பேரையும் போலீஸ் காவலில் எடுக்க கோவில்பட்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்கிறார்கள்.

    இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பான மேலும் ஆதாரங்களை திரட்ட சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் குழுவினர் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்த உள்ளார்கள்.

    Next Story
    ×