search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருமணம் செய்து வைக்க தாமதப்படுத்தியதால் தாய்-தந்தை கொடூர கொலை - வாலிபர் வெறிச்செயல்

    திருமணம் செய்து வைக்க தாமதப்படுத்துகிறார்களே என நினைத்த வாலிபர், தாய்-தந்தையின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் அருகிலுள்ள ஜி.குப்பம் தாங்கல் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 60). விவசாயி. இவரது மனைவி மாங்கனி (55). இவர்களுக்கு ராம்குமார் (30) என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது.

    ஆனால் ராம்குமாருக்கு சற்று மனநல பாதிப்பு ஏற்பட்டு இருந்ததால் திருமணம் செய்வதை பெற்றோர் தள்ளிப்போட்டு வந்தனர். எனினும் ராம்குமார் திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் தினமும் தகராறு செய்து வந்துள்ளார். பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி வந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு ராம்குமார் தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் கூறவே, அவர்கள் சற்று பொறுத்துக்கொள், நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறி சமரசம் செய்தனர். அதன்பிறகு கோவிந்தசாமியும், மாங்கனியும் தூங்க சென்றனர்.

    தனக்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார்களே என அவர்கள் மீது ராம்குமார் ஆத்திரத்துடன் இருந்தார். இதனால் அவர் தூங்கிக்கொண்டிருந்த தாய் மாங்கனி, தந்தை கோவிந்தசாமி ஆகியோர் தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். அதன்பின் ராம்குமார் சைக்கிளை எடுத்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு தப்பி ஓடி விட்டார்.

    அக்கம்பக்கத்தினர் இதனை பார்த்து சாத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஊரடங்கு பணியில் தீவிரம் காட்டியிருந்த போலீசார் பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

    மேலும் இதுதொடர்பாக சாத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவண்ணாமலையில் பதுங்கி இருந்த ராம்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×