search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தோவாளையில் மனைவியை தீவைத்து எரித்த விவசாயி

    தோவாளையில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தீவைத்து எரித்த விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    நாகர்கோவில்:

    தோவாளை புதூர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பதாஸ் (வயது 56). விவசாயி.

    இவரது மனைவி இரக்கம் (52). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்துவருகிறார். 2-வது மகள் நர்சிங் முடித்துவிட்டு மதுரையில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    வீட்டில் கணவன், மனைவி இருவரும் வசித்து வந்தனர். கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவியின் நடத்தையிலும் புஷ்பதாசுக்கு சந்தேகம் இருந்தது.

    நேற்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த புஷ்பதாஸ், மனைவி இரக்கத்தை கம்பால் தாக்கினார். பின்னர் வீட்டில் இருந்த மண்எண்ணையை அவரது உடலில் ஊற்றி தீ வைத்தார். இதையடுத்து இரக்கம் வீட்டில் இருந்து பின்வாசல் வழியாக வெளியே ஓடினார்.

    அப்போது வீட்டின் பின்னால் இருந்த ஓலை குடிசை தீப்பிடித்து எரிந்தது. இரக்கத்தின் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்தனர். அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரக்கத்திடம் நாகர்கோவில் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். அப்போது இரக்கம் தன்னை தனது கணவர் புஷ்பதாஸ் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்ததாக கூறினார். தனது நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். புஷ்பதாஸ் மீது இந்திய தண்டனைச்சட்டம் 294(பி), 323, 307 ஐ.பி.சி. ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் புஷ்பதாசை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட புஷ்பதாசிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மனைவியை தீ வைத்து எரித்த சம்பவம் தோவாளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×