search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது (கோப்புப்படம்)
    X
    கைது (கோப்புப்படம்)

    மெரினா கடற்கரையில் மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

    சென்னை மெரினா கடற்கரையில் திருமணம் ஆசை காட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    சென்னை:

    தன்னந்தனியாக வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றும் இளம்பெண்கள் எப்படியெல்லாம் சீரழிந்து போகிறார்கள் என்பதற்கு சென்னையில் பிடிபட்ட 9-ம் வகுப்பு மாணவி ஒரு சாட்சி.

    கடந்த 29-ந்தேதி இரவு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் ஒரு இளைஞருடன் சிறுமி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது குழந்தைகளுக்கான தொண்டு நிறுவன ஊழியர்கள் இரண்டு பேரும் அங்கு நின்றனர்.

    அவர்களுக்கு அந்த இருவரையும் பார்த்ததும் சந்தேகம். இதையடுத்து அவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். அப்போது அந்த வாலிபர் தனது பெயர் அன்பழகன் (22) என்பதும் விருத்தாசலம் பலமலைநாதர் நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

    அந்த சிறுமியிடம் கேட்ட போது அவர் 9-ம் வகுப்பு படித்து வருவதாகவும் பெருங்குடியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். இருவரும் காதலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து தொண்டு நிறுவன ஊழியர்களுக்கு சந்தேகம் வலுத்தது. அந்த சிறுமியை அன்பழகன் கடத்தி செல்லலாம் என்று உணர்ந்து இருவரையும் தங்கள் அலுவலகத்துக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

    அங்கு இருவரிடமும் தனித்தனியாக விசாரித்த போது அந்த மாணவி சீரழிக்கப்பட்டதை அறிந்தனர். இதையடுத்து அவர்களை திருவல்லிக்கேணி போலீசில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.

    மெரினா கடற்கரையை சுற்றிப் பார்க்க வந்தபோது உழைப்பாளர் சிலை அருகில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்க்கும் அன்பழகன் அந்த மாணவியை பார்த்துள்ளார். அறியா பருவத்தில் இருந்த அந்த மாணவி வாலிபர் அன்பழகனின் காதல் வலையில் வீழ்ந்து இருக்கிறார்.

    காதல் மயக்கத்தில் இருந்த அந்த மாணவி அடிக்கடி மெரினாவுக்கு வந்து அன்பழகனை சந்தித்துள்ளார்.

    வலையில் சிக்கிய அந்த மாணவியை ஆசைப்பட்ட நேரத்தில் எல்லாம் அன்பழகன் அழைத்து காதல் போதை ஏற்றி இருக்கிறார்.

    ஒரு கட்டத்தில் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி இருக்கிறார். இதையடுத்து அந்த மாணவிக்கும் கல்யாண கனவு வந்துள்ளது.

    சம்பவத்தன்று வீட்டை விட்டு வந்து விடு நான் உன்னை ஊருக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார். அதை நம்பி மெரினாவுக்கு வந்திருக்கிறார். அப்போது அவரிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.

    பள்ளி முடிந்து வந்த அந்த மாணவியை இரவு வரை மெரினாவில் வைத்து விட்டு கடை மூடிய பிறகு இரவில் ஊருக்கு அழைத்து செல்வதற்காக எழும்பூர் ரெயில் நிலையம் சென்றுள்ளார்.

    வாலிபர் அன்பழகன் மாணவியிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.

    இதையடுத்து அவரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
    Next Story
    ×