search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை (கோப்புப்படம்)
    X
    கொலை (கோப்புப்படம்)

    கண்டமங்கலம் அருகே பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி புதருக்குள் வீச்சு

    கண்டமங்கலம் அருகே பெண்ணை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி புதரில் வீசி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கண்டமங்கலம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ளது பெரியபாபுசமுத்திரம். இந்த பகுதியை சேர்ந்தவர் மோகன். விவசாயி. இவரது மனைவி தில்லைநாயகி (வயது 45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    மோகனுக்கு பெரியபாபு சமுத்திரம் பம்பை ஆற்று பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்துக்கு தில்லைநாயகி சென்று தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம்.

    அதுபோல் நேற்று காலையும் அவர் விவசாய நிலத்துக்கு சென்றார். அதன் பின்னர் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த அவரது கணவர் மோகன் மற்றும் உறவினர்கள் அவரை தேடி விவசாய நிலத்துக்கு சென்றனர். அங்கு மண்வெட்டியும், தில்லைநாயகியின் செருப்பும் கிடந்தது. அவரை காணவில்லை.

    இதனை தொடர்ந்து அவர்கள் அங்குள்ள கிணறு மற்றும் கரும்பு தோட்ட பகுதிக்கு சென்று தில்லைநாயகியை தேடிப் பார்த்தனர். எங்கும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து கண்டமங்கலம் போலீசில் மோகன் இன்று காலை புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பம்பை ஆற்று பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்று தேடினர். அப்போது அங்குள்ள புதரில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அதன் உள்ளே தில்லை நாயகியின் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் சாக்குமூட்டையில் இருந்த தில்லைநாயகியின் உடலை எடுத்து பார்த்தனர். உடம்பில் காயங்கள் இருந்தது. யாரோ மர்ம மனிதர்கள் தில்லைநாயகியை கொலை செய்து விட்டு உடலை சாக்கு மூட்டையில் கட்டி புதரில் வீசி சென்றுள்ளனர்.

    அவரை கொலை செய்தது யார்? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தில்லைநாயகியை கொலை செய்த கொலையாளிகளையும் போலீசார் தேடிவருகின்றனர். மேலும் தில்லைநாயகியின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×