search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையுண்ட கவுசல்யா
    X
    கொலையுண்ட கவுசல்யா

    சேந்தமங்கலம் அருகே பெண் கொலை: சரண் அடைந்த கணவரிடம் போலீஸ் விசாரணை

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பணத்தகராறில் மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள நடுக்கோம்பை பங்களா தெருவைச் சேர்ந்தவர் மோகன் (வயது 45), விவசாயி. இவரது மனைவி கவுசல்யா (38). இவர்களுக்கு தீபிகா என்ற மகளும், ஹனிஷ் என்ற மகனும் உள்ளனர்.

    கவுசல்யாவின் தந்தை காளியண்ணனுக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு கலாமணி என்ற மகளும், 2-வது மனைவிக்கு கவுசல்யா மற்றும் வனிதா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ஆண் வாரிசு இல்லாததால் தனது சொத்தை விற்று தனது மகள்களுக்கு கொடுக்க காளியண்ணன் முடிவு செய்தார். இதையடுத்து தனது தோட்டத்தை மகள் வனிதாவிடம் ரூ. 1 கோடி ரூபாய்க்கு விற்றார். இந்த பணத்தில் 50 லட்சத்தை தான் வைத்துக் கொண்டு ரூ. 25 லட்சத்தை மகள் கவுசல்யாவுக்கு கொடுத்தார்.

    மீதி ரூ. 25 லட்சத்தை மூத்த மனைவியின் மகளுக்கு கொடுக்க திட்டமிட்டு இருந்தார்.

    இதையறிந்த மோகன் மனைவி கவுசல்யாவிடம் மாமனார் கொடுத்த ரூ. 25 லட்சத்தை கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த கவுசல்யா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகன், மகளை கணவரிடம் விட்டுவிட்டு தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி மனைவியிடம் மோகன் பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி சேந்தமங்கலம் போலீசில் மோகன் புகார் கொடுத்தார்.

    போலீசார் 2 பேரையும் அழைத்து சமாதான பேச்சுவாத்தை நடத்தினார்கள். இதில் சமரசம் அடைந்த கவுசல்யா கணவர் மற்றும் குழந்தைகளுடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தார். ஆனாலும் 2 பேரும் தனித்தனியாக சமையல் செய்து சாப்பிட்டு வந்தனர்.

    இந்த சூழ்நிலையில் மனைவியிடம் மாமனார் கொடுத்த பணத்தை கேட்டு மீண்டும் அவர் தகராறு செய்து வந்தார். நேற்று மாலை கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த மோகன் அருகில் கிடந்த உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு கம்பியால் கவுசல்யாவை சரமாரியாக தாக்கினார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கவுசல்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த மோகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா, சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தியும் அங்கு வந்து விசாரணை நடத்தினார்.

    பின்னர் போலீசார் கவுசல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆ ஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய மோகனை தேடி வந்தார்கள்.

    இந்த நிலையில் நேற்றிரவு மோகன் சேந்தமங்கலம் போலீசில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவுசல்யாவின் மகன், மகளிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×