search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
    X
    பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- பள்ளி வகுப்பறையில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை

    பள்ளி வகுப்பறையில் 11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை:

    மதுரை கே.புதூரை அடுத்துள்ளது காந்திபுரம். அந்த பகுதியைச் சேர்ந்தவர் முத்து, கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    மூத்த மகள் சந்தியா கல்லூரியில் படித்து வருகிறார். 2-வது மகள் அர்ச்சனா (வயது16). புதூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று காலை 8 மணி அளவில் பள்ளிக்கு அர்ச்சனா வந்தார். வகுப்பறைக்குள் சென்ற அவர் திடீரென வீட்டில் இருந்து எடுத்து வந்த சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    அப்போது சக மாணவிகள் யாரும் வரவில்லை. சிறிது நேரத்தில் வகுப்புக்கு வந்த மாணவிகள் அர்ச்சனா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அலறியடித்த படி வெளியே ஓடினர்.

    அர்ச்சனா தற்கொலை செய்த தகவல் கிடைத்ததும் உறவினர்கள் திரண்டு வந்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பதட்டம் ஏற்பட்டது. போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையில் அர்ச்சனா உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் உடலை கொண்டு செல்லவும் முயன்றனர். இதனை போலீசார் தடுத்தனர். இதனால் அங்கு அவர்களுக்கு இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

    போலீசார் அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவி அர்ச்சனா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    பிளஸ்-1 படித்து வந்த அர்ச்சனா அதே பகுதியில் உள்ள ஒரு வாலிபருடன் பழகி வந்தார். இது காதலாக மாறியது. இந்த விவரம் தெரிய வந்ததும் அர்ச்சனாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அர்ச்சனா மனவேதனை அடைந்தார்.

    கடந்த சில நாட்களாக யாருடனும் பேசாமல் இருந்த அவர் இன்று காலை பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி இருப்பதாகவும், அதற்கு உனது சேலை வேண்டும் என்றும் தாயிடம் கேட்டு வாங்கி வந்துள்ளார். பள்ளிக்கு காலையிலேயே வந்த அர்ச்சனா, மற்ற மாணவிகள் வராத நேரத்தில் வகுப்பறையில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

    தொடர்ந்து அர்ச்சனாவின் பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சக தோழிகளிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    அர்ச்சனா தற்கொலை சம்பவம் மற்ற மாணவிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் இன்று பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    Next Story
    ×