search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வைரம்மாவை படத்தில் காணலாம்.
    X
    கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வைரம்மாவை படத்தில் காணலாம்.

    கிருஷ்ணகிரி அருகே தாயின் தலையில் கல்லைபோட்டு கொலை- மகனும் தற்கொலைக்கு முயற்சி

    கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறு காரணமாக தாயின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து மகனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் வைரம்மா (வயது55). இவரது மகன் கார்த்திக் (28).

    இவர் அந்த பகுதியில் ரப்பர் ஸ்டாம்பு தயாரிக்கும் கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் வைரம்மாவுக்கும், மகன் கார்த்திக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இதனால் இன்று காலை கார்த்திக் தனது தாய் வைரம்மாவை ஒரு வாடகை காரில் அழைத்து கொண்டு கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வந்ததும் கார்த்திக் டிரைவரிடம் கூறி காரை ரோட்டோரம் நிறுத்தினார். உடனே காரில் இருந்து கார்த்திக் இறங்கி தாய் வைரம்மாவை அழைத்து அருகில் உள்ள தென்னந்தோப்பிற்கு சென்றார்.

    அப்போது அவர்களுக்குள் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் தனது தாய் என்று கூட பார்க்காமல் வைரம்மாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். இதில் வலி தாங்காமல் வைரம்மா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்தை பார்த்த கார் டிரைவர் வண்டியை அங்கிருந்து எடுத்து சென்றார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது தாயை கொலை செய்து விட்டு கார்த்திக் தனது தலையிலும், வாயிலும் மண்ணை போட்டும், தென்னை குச்சியை எடுத்து முகம், வயிறு, தலை உள்ளிட்ட பகுதியில் குத்தியும் தற்கொலைக்கு முயன்றார்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    தாயை கொன்று தற்கொலைக்கு முயன்று படுகாயம் அடைந்த கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் போலீசார் பிணமாக கிடந்த வைரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×