search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    X
    அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    கச்சிராயபாளையம் அருகே குடிநீர் வழங்க கோரி அரசு பஸ் சிறை பிடிப்பு- பொதுமக்கள் போராட்டம்

    கச்சிராயபாளையம் அருகே இன்று காலை குடிநீர் வழங்க கோரி அரசு பஸ்ஸை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    கச்சிராயபாளையம்:

    விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை அருகே உள்ள மணியார் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டு 7 கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமத்தில் 2 ஆயிரத்தும் மேற்பட்ட மலை வாழ்மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு அந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இதில் மணியார் பாளையம் பகுதியில் உள்ள மின்மாற்றி ஒன்று மின்னல் தாக்கி சேதமடைந்தது.

    மின்மாற்றி பழுதானதால் அந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

    இதனால் அந்த பகுதி பொது மக்கள் தங்களது அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர். வனபகுதியில் உள்ள நீரோடைகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து குடிநீருக்கு பயன்படுத்தி வந்தனர்.

    மின்மாற்றி பழுதானதால் அந்த பகுதியில் மின்சாரம் இன்றி கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் பல முறை தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை .

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் இன்று காலை 7.30 மணி அளவில் காலி குடங்களுடன் மணியார் பாளையம் கூட்டுறவு சங்க அலுவலகம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கல்வராயன் மலை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மற்றும் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:- எங்கள் பகுதியில் உள்ள மின்மாற்றி பழுதாகி உள்ளதால் எங்கள் கிராமமே இருளில் மூழ்கியுள்ளது. எங்களுக்கு குடிநீரும் கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம். எனவே மின்மாற்றியை சீரமைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர்.

    அதற்கு போலீசார் சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உடனடியாக மின்மாற்றி சீரமைக்கப்படும். மேலும் சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் இருந்து ஜெனரேட்டர் கொண்டு வரப்பட்டு உங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நீங்கள் தற்போது போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். இதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    அதன் பின்னர் அரசு பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×