search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் தினமும் 6 மணிநேரம் மின்வெட்டு- வியாபாரிகள்- விவசாயிகள் பாதிப்பு
    X

    டெல்டா மாவட்டங்களில் தினமும் 6 மணிநேரம் மின்வெட்டு- வியாபாரிகள்- விவசாயிகள் பாதிப்பு

    டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா சாகுபடிக்கான உழவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டங்களில் பல இடங்களில் ஏரி, குளங்கள் நிரப்பப் படாமலும், வாய்க்கால்கள் தூர்வாரப்படாமலும் இருப்பதாலும் கடைமடை பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் செல்லாமல் உள்ளது. இதனால் போர்வெல் பாசனத்தின் மூலம் விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் கக்கரை, கூவத்தூர், திருமங்கல கோட்டை, திருநல்லூர், தெற்கு கோட்டை, வடக்கு கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரத்தில் 1 மணி விட்டு விட்டு ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மின்வெட்டு இருந்து வருகிறது. இதனால் தற்போது பயிர் செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் வாடிய நிலையில் காணப்படுகிறது.

    தண்ணீர் இல்லாமல் தவித்த விவசாயிகள் இப்போது மின்சாரத்துக்கும் ஏங்கும் நிலை உள்ளது.

    தஞ்சை நகர் பகுதிகளில் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது.

    அதேநரத்தில் கிராமப்புறங்களில் 1 முதல் 2 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இரவு நேரங்களிலும் திடீர் திடீரென மின்வெட்டு இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடந்த 4 நாட்களாக அவதி அடைந்து வருகின்றனர்.

    இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பேரளம், குடவாசல், நன்னிலம், நீடாமங்கலம் ஆகிய கிராமங்களில் தினமும் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

    குறிப்பாக முத்துப்பேட்டை பகுதியில் பகல் நேரத்தில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட வர்த்தக சங்கத்தினர் மின்வாரிய செயற்பொறியாளர் பிரபுவை நேரில் சந்தித்து ‘ தடையின்றி மின்சாரம் வழங்க கோரி’ மனு கொடுத்தனர்.

    நாகை மாவட்டத்தில் நாகை, திருமருகல், பொறையாறு, வேதாரண்யம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் தினமும் 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளில் அதிகபட்சமாக தினமும் 6 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

    இதனால் வியாபாரிகள் மட்டுமல்லாமல், கடைமடை விவசாயிகளும் விழிபிதுங்கி தவித்து வருகிறார்கள். 

    Next Story
    ×