search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அணை நிரம்பியதால் உபரிநீர் ‌ஷட்டர் வழியாக வெளியேற்றப்படும் காட்சி.
    X
    பாபநாசம் அணை நிரம்பியதால் உபரிநீர் ‌ஷட்டர் வழியாக வெளியேற்றப்படும் காட்சி.

    தாமிரபரணி ஆற்றில் 3-வது நாளாக வெள்ளம் - கரையோர மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை

    பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் கடனா அணைகளில் இருந்து வரும் உபரி நீர் தாமிரபரணியில் சேர்வதால் இன்று 3-வது நாளாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. #Thamirabaraniriver #Papanasamdam
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த 2 மாதமாக நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்கனவே பெய்த மழையினால் மாவட்டத்தில் உள்ள கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் அணை ஆகிய 6 அணைகள் நிரம்பியுள்ளன.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணை நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 149 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து சுமார் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதே போல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 144.85 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 79 அடியாக இருந்தது. இன்று 81.70 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,743 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. எனினும் மலைப்பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக வரும் காட்டாற்று வெள்ளம் அதிகமாக வருகிறது.

    வடக்கு பச்சையாறு அணை 14 அடியாகவும், நம்பியாறு அணை 20.6 அடியாகவும் இருந்துள்ளன. அணைகள் நிரம்பியதால் அங்கு வரும் தண்ணீர் அப்படியே ஆறுகளில் திறந்துவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பெய்து வரும் மழையினால் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்து பாய்ந்தோடும் வெள்ளம்

    பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் கடனா அணைகளில் இருந்து வரும் உபரி நீர் தாமிரபரணியில் சேர்வதால் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று 3-வது நாளாக தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக ஆற்றில் கரையோர மண்டபங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

    நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் தைப்பூச மண்டபம் ஆகியவற்றையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலப்பாளையம் கருப்பந்துறை ஆற்றுப்பாலத்தை தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

    நெல்லையில் தாமிரபரணியின் குறுக்கே பாலம் கட்டும் பணி வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்பை உள்ளிட்ட பல பகுதிகளில் கரையோரம் உள்ள வயல்வெளிகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது.

    மணிமுத்தாறு அருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும், கல்யாண தீர்த்தத்திலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். பாபநாசம் சோதனைச்சாவடி இன்றும் மூடப்ப‌ட்டு உள்ளது.

    அடவி நயினார் அணையில் வினாடிக்கு 1000 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதால் அந்த பகுதிகளிலுள்ள நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.மேலும் மேக்கரை நீர்தேக்கத்தின் நீர் அப்படியே வெளியேற்றபப்டுவதால் பண்பொழி, கடையநல்லூர் சாலையிலுள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல், வாழை,காய்கறிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குண்டாறு அணை ஏற்கனவே கடந்த 2 மாதத்துக்கு முன்பே நிரம்பி வ‌ழிகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணையில் 76 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் அடவிநயினார் அணை பகுதியில் 68 மில்லிமீட்டர் மழையும், செங்கோட்டையில் 66 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. பாபநாசம் அணை பகுதியில் நேற்று 21 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடனா அணையில் 18 மில்லிமீட்டர், ராமநதி அணையில் 10 மில்லிமீட்டர், கருப்பாநதி அணையில் 8 மில்லிமீட்டர், சேர்வலாறு அணையில் 7 மில்லிமீட்டர், சங்கரன்கோவிலில் 3 மில்லிமீட்டர், அம்பையில் 2.4 மில்லிமீட்டர், ஆய்க்குடி, சிவகிரியில் தலா 1 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மழை குறைந்தாலும் தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து உள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, பாவூர் சத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி, அம்பை, பணகுடி, களக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குளங்களும் நிரம்பியுள்ளன. கால்வாய்களிலும் அதிகளவு தண்ணீர் செல்கிறது.

    எனினும் வடக்கு கோடைமேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுன்னி கால்வாய்களில் இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை. மற்ற பகுதிகளில் குளங்கள் மற்றும் கால்வாய்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆற்று பாலங்களில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  #Thamirabaraniriver #Papanasamdam

    Next Story
    ×