search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை சட்டசபையில் மின்சார மீட்டரை உடைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
    X

    புதுவை சட்டசபையில் மின்சார மீட்டரை உடைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

    ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பகுதிகளில் கூடுதலாக மின் கட்டண உபயோகத்தை காட்டுவதை கண்டித்து புதுவை சட்டசபையில் மின்சார மீட்டரை உடைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் மின்துறை சார்பில் நகர பகுதியில் ஸ்மார்ட் மீட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    சீனாவில் இருந்து 34 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர் ரூ.44 கோடி செலவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் நகர பகுதியில் உருளையன் பேட்டை, உப்பளம், முத்தியால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தியுள்ளனர்.

    ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பகுதிகளில் கூடுதலாக மின் கட்டண உபயோகத்தை காட்டுகிறது. இதனால் மின் கட்டணம் 2 மடங்கு கூடுதலாக வருகிறது என புகார்கள் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், தி.மு.க. உறுப்பினர் சிவா ஆகியோர் பேசினர். ஸ்மார்ட் மீட்டரால் வரும் கூடுதல் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஸ்மார்ட் மீட்டரை திரும்பப்பெற வேண்டும் என அ.தி.மு.க. தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    ஆனால் அரசு ஸ்மார்ட் மீட்டரை திரும்பப் பெறும் எண்ணத்தில் இல்லை. இதனால் இதை கண்டித்து புதுவை சட்டசபை வளாகத்தில் மையமண்டபத்துக்கு செல்லும் படிகட்டுக்கு முன்பு இன்று காலை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் ஸ்மார்ட் மீட்டர்களை உடைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்மார்ட் மீட்டரை தரையில் வீசி உடைத்தனர். பின்னர் வழக்கம் போல சபை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
    Next Story
    ×