search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவியை கொலை செய்து விட்டு மாரடைப்பால் இறந்ததாக நாடகம்- கணவர் கைது
    X

    மனைவியை கொலை செய்து விட்டு மாரடைப்பால் இறந்ததாக நாடகம்- கணவர் கைது

    வீட்டு வாடகை கொடுக்க பணம் கேட்டதால் ஆத்திரத்தில் மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, அவர் மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    மதுரவாயல், கங்கையம்மன் நகர், 6-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சீனிவாசன்(வயது 36). பிளம்பர். இவருடைய மனைவி இந்திராணி (34). இவர், தனியார் கம்பெனியில் தையல் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 7ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குழந்தைகள் இல்லை.

    நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலை முடிந்து கணவன்-மனைவி இருவரும் வீட்டுக்கு வந்தனர். நள்ளிரவில் திடீரென சீனிவாசன் அலறல் சத்தம் மட்டும் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது தனது மனைவி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இறந்து விட்டதாக சீனிவாசன் கூறினார்.

    அதற்குள் இந்திராணியின் உறவினர்கள் வந்து பார்த்தபோது, அவரது முகம் மற்றும் கழுத்தில் காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எனவே இந்திராணி சாவில் மர்மம் இருப்பதாக அவர்கள் மதுரவாயல் போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் சம்பவ இடத்துக்கு சென்று இந்திராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனிடம் விசாரணை செய்தனர்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த சீனிவாசனிடம், இந்திராணி வீட்டு வாடகை கொடுக்க பணம் தரும்படி கேட்டார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த சீனிவாசன், இந்திராணியை அடித்து உதைத்தார். இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் ஆத்திரம் அடங்காத சீனிவாசன், வீட்டில் இருந்த துணியால் இந்திராணியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் அந்த கொலையை மறைக்க, தனது மனைவி மாரடைப்பால் இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி நாடகம் ஆடி இருப்பது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.

    இதையடுத்து சீனிவாசனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×