என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 269 ரன்கள் எடுத்தது.
கவுகாத்தி:
13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நவ.2-ந்தேதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது.
இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் கவுகாத்தியில் இன்று மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய மகளிர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 8 ரன்னில் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு பிரதிகா ராவல், ஹர்லின் தியோல் ஜோடி 67 ரன்கள் சேர்த்த நிலையில் பிரதிகா ராவல் 37 ரன்னில் வெளியேறினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹர்லின் தியோல் 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின், பெய்த மழை காரணமாக போட்டி 47 ஓவராக குறைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் விரைவில் அவுட்டாகினர். 124 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தத்தளித்தது.
7வது விக்கெட்டுக்கு இணைந்த தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது. இருவரும் அரை சதம் கடந்தனர். 83 ரன்கள் சேர்த்த நிலையில் அமன்ஜோத் கவுர் 57 ரன்னில் வெளியேறினார். தீப்தி சர்மா 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் ஸ்ரே ரானா அதிரடியாக ஆடி 15 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 28 ரன்கள் குவித்தார்.
இறுதியில், இந்திய மகளிர் அணி 47 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி சார்பில் இனோகா ரணவீரா 4 விக்கெட்டும், பிரபோதினி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிக்கான எனது பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
- ஆனால், என்னுடைய மிகப்பெரிய இலக்கு உலகக் கோப்பை.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 147 இலக்கை எதிர்நோக்கி களம் இறங்கியது. 3 விக்கெட் விரைவாக இழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் திலக் வர்மா கடைசி வரை களத்தில் நின்று ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதனால் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இறுதிப் போட்டி மற்றும் வெற்றி பெற்றது குறித்து திலக் வர்மா கூறியதாவது:-
முதலில் பிரதமர் மோடி இதை ஆபரேஷன் சிந்தூர் என அழைத்தார். ஆனால், ஆபரேஷன் திலக் என்று அழைப்பது மிகப்பெரிய விசயம். விளையாட்டில், நாங்கள் நம்முடைய நாட்டிற்காக விளையாடுகிறோம். சரியான தருணத்தில், சரியான நேரத்தில் நான் வாய்ப்பை பெற்றேன். எனது நாட்டிற்காக வெற்றி தேடிக்கொடுத்ததை சிறந்ததாக உணர்கிறேன்.
இறுதிப் போட்டியில் பதட்டம் நிலவியது. நாம் 3 விக்கெட்டை முன்னதாகவே இழந்தபோது, பாகிஸ்தான் வீரர் இன்னும் தீவிரமாக முயற்சி செய்தனர். நான் களத்தில் நின்றிருந்தேன். நாள் முன்னதாக சொன்னது போன்று, நான் அதற்குள் சிக்கி ஷாட் ஆட முயற்சி செய்திருந்தால், எனது நாட்டை தோல்வி பாதைக்கு அழைத்துச் சென்றிருப்பேன். நான் எப்போதும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என நினைப்பேன். போட்டியில் வெற்றி பெற தேவை என்னது? என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
போட்டியின்போது ஏராளமான விசயங்கள் நடந்தன. மீடியா முன் அனைத்தையும் சொல்ல முடியாது. குறிப்பாக இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது நடைபெற்றது. போட்டிதான் உண்மையான பதிலடி. நான் அதை செய்ய விரும்பினேன். அதைச் செய்தேன்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிக்கான எனது பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், என்னுடைய மிகப்பெரிய இலக்கு உலகக் கோப்பை. 2011 உலகக் கோப்பையை பார்க்கும்போது, நான் கிரிக்கெட்டை விரும்ப தொடங்கினேன். அதன்பின் தொழில்முறை கிரிக்கெட்டை தொடங்கினேன்.
அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பையில் ஒரு பகுதியாக இருந்து, இந்தியாவின் வெற்றிக்கு உதவியாக இருக்க விரும்புகிறேன். இதுதான் என்னுடைய அல்டிமேட் கோல்.
இவ்வாறு திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
- ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது.
- இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் தேவ்ஜித் சாய்க்கியா தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் ஆசிய கோப்பை மற்றும் பதக்கங்களை கொடுக்க தயார் எனவும் ஆனால் ஒரு கண்டிசன் என பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வி கூறினார்.
மேலும் முறையான விழா ஏற்பாடு செய்யப்பட்டால் மட்டுமே சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது வீரர்கள் பதக்கங்களைப் பெறுவார்கள் என்றும், அங்கு அவர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் நக்வி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் உறவுகளைக் கருத்தில் கொண்டால், அத்தகைய ஏற்பாடு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது..
- ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- சூர்யகுமார் இந்த தொடரில் பெரிய அளவில் ரன்களை குவிக்க தவறினார்.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சூர்யகுமார் தலைமையில் களமிறங்கியது. இந்த தொடரில் இந்த அணி ஒரு தோல்வி கூட சந்திக்காமல் ஆசிய கோப்பையை வென்றது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சூர்யகுமார் இந்த தொடரில் பெரிய அளவில் ரன்களை குவிக்க தவறினார். ஆனால் கேப்டன்ஷிப்பில் எந்தவித பதட்டமும் இன்றி சரியான முடிவுகளை எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
இந்நிலையில் ரோகித் மற்றும் ரித்திகா கொடுத்த அறிவுரை தான் நம்பிக்கையான முடிவை எடுக்க உதவியது என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முக்கியமான தொடருக்கு முன்பு ரோகித் எப்படி வெளியில் இருந்து வரும் கருத்துகளை எப்படி தவிர்ப்பார் என்பது பற்றி ரோகித்திடமும் அவரது மனைவியிடமும் பேசியது எனக்கு நினைவிருக்கிறது.
ரித்திகா தொலைபேசியிலிருந்து தனது அனைத்து சமூக ஊடக செயலிகளையும் மூடிவிட்டதாக என்னிடம் கூறினார். நானும் அதைப் பின்பற்றினேன். அது எனக்கு முடிவெடுப்பதற்கு உதவியது.
என சூர்யகுமார் கூறினார்.
- ஆஸ்திரேலியா- நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
- இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 1-ந் தேதி நடக்கிறது.
இந்த தொடருக்காக ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.
மேலும் அவருக்கு பதிலாக ஜோஷ் பிலிப் அணியில் இடம் பெற்றுள்ளார்.
- இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
- ஒருநாள் தொடர் அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனையடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடர் அக்டோபர் 14-ந் தேதியுடன் முடிவடைகிறது.
அதனை தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக விலகி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
அவர் ஆசிய கோப்பை தொடரின் போது காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் கடைசி 2 போட்டிகளில் பாண்ட்யா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய கோப்பை அணியில் ரிஸ்வானுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
- சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்த ரிஸ்வான், உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிய கோப்பை தொடர் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இதன் இறுதிபோட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர்களான பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோர் அந்த அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டனர். தொடர் தோல்வி காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்தது. மேலும் அமெரிக்க லீக் போன்ற டி20 போன்ற தொடர்களில் விளையாட வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.
இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்த பாகிஸ்தான் அணியின் ஒருநாள் கேப்டன் ரிஸ்வான் யாரும் எதிர்பார்க்காத வகையி்ல் உள்ளூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மைதானத்தை சுற்றி மக்கள் கூடியிருந்ததை பார்க்க முடிந்தது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது அவர் எப்போது விளையாடினார் என்பது குறித்த சரியான தகவல் ஏதும் இல்லை.
ஆனால் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிறைய ரசிகர்கள் எதிர்மறையான கருத்தும் சிலர் ஆதரவான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் ரிஸ்வான் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ரிஸ்வான் 20-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 173 ரன்கள் குவித்தது.
- இதனையடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 83 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சார்ஜா:
வெஸ்ட் இண்டீஸ், நேபாளம் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சார்ஜாவில் நடக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் நேபாளம் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் முழு உறுப்பினர் அணிக்கு எதிராக முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 20 ஓவரில் 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆசிஃப் ஷேக் 68 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியில் 3 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 17.1 ஓவரில் 83 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் நேபாளம் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நேபாளம் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
- அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
- இந்திய அணி உலகக் கோப்பையை ஒரு போதும் வென்றதில்லை.
கவுகாத்தி:
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1973-ம் ஆண்டு அறிமுகமாகி, 4 ஆண்டுக்கு ஒரு முறை (தவிர்க்க முடியாத காரணத்தால் சில தடவை தாமதம் ஆகியிருக்கிறது) நடத்தப்படுகிறது.
இதன்படி 13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நவ.2-ந்தேதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வராது என்பதால் அந்த அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கை மண்ணில் ஆடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியை எட்டினால், இறுதி ஆட்டம் கொழும்பில் நடக்கும். இல்லாவிட்டால் நவிமும்பையில் அரங்கேறும். 12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பை போட்டி திரும்பியிருக்கிறது.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரு அணி வீராங்கனைகளும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்திய அணி உலகக் கோப்பையை ஒரு போதும் வென்றதில்லை. அதிகபட்சமாக 2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதி ஆட்டங்களில் தோற்று இருக்கிறது. இந்திய கேப்டன் 36 வயதான ஹர்மன்பிரீத் கவுருக்கு இது 5-வது உலகக் கோப்பை போட்டியாகும். அனேகமாக அவருக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும். சொந்த மண்ணில் முதல்முறையாக கோப்பையை கையில் ஏந்தும் உத்வேகத்துடன் ஆயத்தமாகும் இந்திய அணியில் ஸ்மிர்தி மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், கிரந்தி கவுட் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் ஆடுவது இந்தியாவுக்கு கூடுதல் சாதகமாகும்.
சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியை கூட நெருங்கியதில்லை. தான் ஓய்வு பெறுவதற்குள் அரைஇறுதியில் கால்பதித்து விட வேண்டும் என்பதே தனது கனவு என கேப்டனும், ஆல்-ரவுண்டருமான சமாரி அட்டப்பட்டு கூறியிருக்கிறார். ஆனால் சமாரி அட்டப்பட்டு தான் இலங்கையின் ஆணி வேர். அவர் ஜொலிப்பதை பொறுத்தே அவர்களின் வெற்றி வாய்ப்பு அமையும். போட்டியை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் ஆர்வம் காட்டுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
இவ்விரு அணிகள் இதுவரை 35 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 31-ல் இந்தியாவும், 3-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
போட்டிக்கான இரு அணி வீராங்கனைகள் வருமாறு:-
இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிர்தி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், உமா சேத்ரி, ரிச்சா கோஷ், கிரந்தி கவுட், அமன்ஜோத் கவுர், சினே ராணா, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ஸ்ரீ சரனி, ராதா யாதவ்.
இலங்கை: சமாரி அட்டப்பட்டு (கேப்டன்), அனுஷ்கா சஞ்சீவானி, கவிஷா தில்ஹரி, இமிஷா துலானி, விஷ்மி குணரத்னே, அச்சினி குலசூர்யா, சுகந்திகா குமாரி, மால்கி மதரா, ஹாசினி பெரேரா, வத்சலா, உதேஷிகா பிரபோதனி, இனோகா ரனவீரா, ஹர்ஷிகா சமரவிக்ரமா, நிலக்ஷிகா சில்வா, தேமி விஹாங்கா.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் 3.4 ஓவரில் 50 ரன்கள் வாரி வழங்கினார்.
- கடைசி ஓவர்களை அவரிடம் வழங்கக் கூடாது என முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 146 ரன்கள் சேர்த்தது. பின்னர் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.
ஒரு கட்டத்தில் இந்தியா 20 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் திலக் வர்மா (53 பந்தில் 69 ரன் நாட்அவுட்), சஞ்சு சாம்சன் (24), ஷிவம் துபே (22 பந்தில் 33 ரன்) ஆகியோர் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்து வீசிய நிலையில், ஹரிஸ் ராஃப் 3.4 ஓவரில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதுதான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹாரிஸ் ராஃப்-ஐ கடுமையான விமர்சித்துள்ளனர்.
முகமது யூசுப் கூறுகையில் "எத்தனை போட்டிகளில் கடைசி நேரத்தில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் இறுதி ஓவர்களை வீசக்கூடாது. கடந்த உலகக் கோப்பை ஞாபகம் இருக்கிறதா?. அவருடைய பந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. அவர் சிறப்பாக பந்து வீசியிருந்தால், சூழ்நிலை வேறுமாதிரியாக இருந்திருக்கும்" என்றார்.
முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் "ஹரிஸ் ராஃப் பெரிய போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை. நாம் எல்லோருக்கும் மெல்போர்ன் போட்டி ஞாபகம் இருக்கிறது (விராட் கோலி ஹரிஸ் ராஃப் பந்தில் 2 சிக்ஸ் விளாசினார்). இது போன்ற சூழ்நிலையில் எந்த பந்து வீச்சாளரை பயன்படுத்த வேண்டும் என கேப்டன் புரிந்து கொள்ள வேண்டும். நாம் கற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து தவறுகளை செய்கிறோம்" என்றார்.
முகமது ஆமிர் "ஹரிஸ் ராஃப்-க்கு ஓவர் கொடுத்தது மிகப்பெரிய தவறு. சுழற்பந்து வீச்சாளர்கள் அணிக்கு உத்வேகத்தை ஏற்படுத்தினர். ஆனால், சுழற்பந்து வீச்சாளரை நீக்கிவிட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப்-ஐ கொண்டு வந்து, உத்வேகத்தை அப்படியே மாற்றிவிட்டனர். அவர் உங்களுடைய விக்கெட் டேக்கிங் பந்து வீச்சாளர் என்பதை சந்தேகம் இல்லை. அந்த சூழ்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் தேவையிருந்தது. அப்படி செய்திருந்தால் போட்டியை இழந்திருக்க மாட்டீர்கள். பவர்பிளேயிலா் ஷாஹீன், பஹீம் சிறப்பாக ப்து வீசினார்கள்" என்றார்.
பாகிஸ்தான் அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தவுசீஃப் அகமது கூறுகையில் "கிரிக்கெட்டில் என்ன வேண்டுமென்றாலும் நடகலாம் என நாம் சொல்கிறோம். ஆனால், இது போன்ற விசயம் ஹார்ஸ் ராஃப்-க்கு மட்டும் கிரிக்கெட்டில் நடக்கிறது?. எங்களுக்கு வெளியே வேறு சில பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். பிரான்சைஸ் கிரிக்கெட்டின் (T20 League) கதைகளை நிறுத்துங்கள். பிரான்சைஸின் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். ஹாரிஸ் ராஃப் மட்டுமே இதைச் செய்திருக்க முடியும். ஹசன் அலி அல்லது வேறு ஒரு இளம் வீரர் அல்ல. எங்கள் காலத்திலும் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம், ஆனால் இதுபோன்ற ஒவ்வொரு முறையும் இல்லை" என்றார்.
- விளையாட்டு களத்தில் ஆபரேஷன் சிந்தூர். முடிவு அதே முடியவுதான்- இந்தியா வெற்றி- பிரதமர் மோடி.
- எந்தவொரு 3ஆவது நடுவரின் உத்தரவால் சிறந்த கேப்டன் போர் நிறுத்தத்தை அறிவிக்கமாட்டார்- காங்கிரஸ்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கான சூப்பர் 4 சுற்று போட்டியின்போது, பாகிஸ்தான் அணி வீரர்கள் கடுமையான சைகைகளில் ஈடுபட்டனர். அபிஷேக் சர்மா, சுப்மன் கில் வாக்குவாத்தில் ஈடுபட, பாகிஸ்தான் பேட்ஸ்மேன் துப்பாக்கியால் சுடுவது போன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப், 6 விமானங்களை சுட்டு வீழ்த்தியது போன்றும், விமானம் கீழே விழுந்து நொருங்குவது போன்றும் சைகை காட்டினார். இது கடும் பேசும்பொருளானது. பிசிசிஐ இது தொடர்பாக ஐசிசி-யிடம் புகார் அளித்தது.
இந்த பரபரப்புக்கு இடையில் நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா கடைசி ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் மறுத்துவிட்டார்.
இந்திய அணி வெற்றி பெற்றதும் இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "விளையாட்டு களத்தில் ஆபரேஷன் சிந்தூர். முடிவு அதே முடிவுதான்- இந்தியா வெற்றி பெற்றது! நம்முடைய கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்" என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கெரா, அந்த பதிவை டேக் செய்து "பிரதமர் ஜி, முதலில் கிரிக்கெட் போட்டியை போர்க்களத்துடன் ஒப்பிடுவது சரியானது அல்ல.
2ஆவது, நீங்கள் எந்த வகையிலும் ஒப்பீடு செய்திருந்தால், அதன்பின் இந்திய அணியிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது, வெற்றியை (ஆபரேஷன் சிந்தூர்) நெருங்கி வந்தபோது, எந்தவொரு 3ஆவது நடுவரின் உத்தரவால் சிறந்த கேப்டன் போர் நிறுத்தத்தை அறிவிக்கமாட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் சண்டை தன்னுடைய தலையீடு காரணமாக நிறுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதை வைத்துதான் கெரா இவ்வாறு தெரிவித்து்ளளார்.
- முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோதுகின்றன.
- அலிசா ஹீலி தலைமையில் களம் காணும் ஆஸ்திரேலியா பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் அனைத்திலும் திடமான ஒரு அணியாக வலம் வருகிறது.
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. கவுகாத்தியில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.
பங்கேற்கும் 8 அணிகளில் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருப்பது யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
ஆஸ்திரேலியா: அலிசா ஹீலி தலைமையில் களம் காணும் ஆஸ்திரேலியா பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் அனைத்திலும் திடமான ஒரு அணியாக வலம் வருகிறது. 7 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா அந்த எண்ணிக்கையை 8-ஆக உயர்த்த கங்கணம் கட்டுகிறது. 2024-ம் ஆண்டில் இருந்து 18 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 16-ல் வெற்றி கண்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதில் டெல்லியில் நடந்த ஆட்டத்தில் 412 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. கேப்டன் ஹீலியுடன் எலிஸ் பெர்ரி, பெத் மூனி, ஆஷ்லி கார்ட்னெர், தாலியா மெக்ராத், ஜார்ஜியா வோல், லிட்ச்பீல்டு, மேகன் ஸ்கட், சுதர்லாண்ட் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே ஆஸ்திரேலிய அணியில் அணிவகுத்து நிற்கிறார்கள். கோப்பையை வெல்ல அவர்களுக்கே பிரகாசமான வாய்ப்பு என்பதில் மாற்று கருத்து இல்லை.
இந்தியா: சொந்த மண்ணில் ஆடுவது இந்தியாவுக்கு அனுகூலமாகும். இதுவரை எந்த உலகக் கோப்பையும் வெல்லாத இந்தியா இந்த முறை இறுதிதடையை வெற்றிகரமாக உடைப்ேபாம் என கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சூளுரைத்துள்ளார். 2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறியதே இந்தியாவின் சிறந்த செயல்பாடாகும். உலகின் 'நம்பர் ஒன்' பேட்டரான ஸ்மிர்தி மந்தனாவைத் தான் இந்திய அணி மலைபோல் நம்பி உள்ளது. அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 50 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்தார். 2025-ம் ஆண்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் (928 ரன்) முதலிடம் வகிக்கிறார்.
மேலும் இந்த ஆண்டில் இந்திய அணி ஆடிய 14 ஆட்டங்களில் 10-ல் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் ஒரு முறை பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதும் அடங்கும். மந்தனாவுடன், 5-வது முறையாக உலகக் கோப்பையில் கால்பதிக்கும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ், ரேணுகா சிங், சினே ராணா, கிரந்தி கவுட் உள்ளிட்டோர் நெருக்கடியை திறம்பட கையாண்டு ஒருங்கிணைந்து செயல்படும் பட்சத்தில், கோப்பையை கையில் ஏந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை.
இங்கிலாந்து: 4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி நாட் சிவெர் தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. ஆல்-ரவுண்டரான நாட் சிவெர் தான் அந்த அணியின் முதுகெலும்பு. 2017-ம் ஆண்டு உலகக் கோப்பையை அந்த அணி உச்சிமுகர்ந்த போது, அந்த தொடரில் 2 சதங்கள் அடித்தார். 2022-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற போது கூட அதிலும் செஞ்சுரி கண்டார். அண்மை கால தடுமாற்றத்தை சமாளித்து இங்கிலாந்து மீண்டெழுவதற்கு அவர் கைகொடுக்க வேண்டியது அவசியமாகும். மற்றபடி சோபி எக்லெஸ்டோன், சார்லி டீன், டாமி பீமோன்ட், டேனி வியாட், விக்கெட் கீப்பர் அமெ ஜோன்ஸ், ஹீதர் நைட், அலிஸ் கேப்சி நம்பிக்கை அளிக்கிறார்கள்.
நியூசிலாந்து: கடந்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை சொந்தமாக்கிய நியூசிலாந்து, இப்போது 50 ஓவர் உலகக் கோப்பைக்கு குறி வைத்துள்ளது. கேப்டன் சோபி டிவைன் உலகக் கோப்பையுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அனுபவமும், இளமையும் கலந்த அணியாக நியூசிலாந்து திகழ்கிறது. சுசி பேட்ஸ், லியா தஹூதஹூ, அமெலியா கெர், மேடி கிரீன், ஜார்ஜியா பிளிமெர் பலம் சேர்க்கிறார்கள். கடந்த 6 மாதங்களாக நியூசிலாந்து எந்த ஒரு நாள் போட்டியிலும் விளையாடவில்லை. ஆனாலும் கடந்த மாதம் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள சூழலுக்கு ஏற்ப பழக்கப்படுத்திக் கொள்ள 2 வாரம் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டனர். எப்படியும் அவர்கள் டாப்-4 அணிக்குள் ஒன்றாக அரைஇறுதியை எட்டி விடுவார்கள் என்பதே நிபுணர்களின் கணிப்பு.
தென்ஆப்பிரிக்கா: கடந்த இரு உலகக் கோப்பை தொடர்களில் அரைஇறுதிக்கு வந்திருந்த தென்ஆப்பிரிக்கா இந்த முறை மேலும் ஒரு அடி முன்னேறி முதல்முறையாக இறுதி சுற்றை எட்டுவோம் என்று கூறியுள்ளது. இந்த தடவை தாங்கள் மிகவும் வலுவான அணியாக இருப்பதாக கேப்டன் லாரா வோல்வார்ட் கூறுகிறார். அவருடன், 'ஹாட்ரிக்' சதம் அடித்துள்ள தஸ்மின் பிரிட்ஸ், நடினே டி கிளெர்க், மரிஜானே காப் ஆகியோர் அந்த அணியின் கவனிக்கத்தக்க வீராங்கனைகளாக உள்ளனர். இவர்கள் ஜொலிப்பதை பொறுத்தே தென்ஆப்பிரிக்காவின் வீறுநடை அமையும்.
மற்ற அணிகளான இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் இதுவரை அரைஇறுதிக்கு கூட நெருங்கியதில்லை. அவர்களை பொறுத்தவரை அது தான் அவர்களின் முதல் குறி. இதில் சொந்த மண்ணில் பெரும்பாலான ஆட்டங்களில் விளையாடும் சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அதிர்ச்சி வைத்தியங்களை அளிக்க ஆயத்தமாகிறது.






