என் மலர்
நீங்கள் தேடியது "பெண்கள் உலகக் கோப்பை"
- முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோதுகின்றன.
- அலிசா ஹீலி தலைமையில் களம் காணும் ஆஸ்திரேலியா பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் அனைத்திலும் திடமான ஒரு அணியாக வலம் வருகிறது.
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. கவுகாத்தியில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.
பங்கேற்கும் 8 அணிகளில் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருப்பது யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
ஆஸ்திரேலியா: அலிசா ஹீலி தலைமையில் களம் காணும் ஆஸ்திரேலியா பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் அனைத்திலும் திடமான ஒரு அணியாக வலம் வருகிறது. 7 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா அந்த எண்ணிக்கையை 8-ஆக உயர்த்த கங்கணம் கட்டுகிறது. 2024-ம் ஆண்டில் இருந்து 18 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 16-ல் வெற்றி கண்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதில் டெல்லியில் நடந்த ஆட்டத்தில் 412 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. கேப்டன் ஹீலியுடன் எலிஸ் பெர்ரி, பெத் மூனி, ஆஷ்லி கார்ட்னெர், தாலியா மெக்ராத், ஜார்ஜியா வோல், லிட்ச்பீல்டு, மேகன் ஸ்கட், சுதர்லாண்ட் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே ஆஸ்திரேலிய அணியில் அணிவகுத்து நிற்கிறார்கள். கோப்பையை வெல்ல அவர்களுக்கே பிரகாசமான வாய்ப்பு என்பதில் மாற்று கருத்து இல்லை.
இந்தியா: சொந்த மண்ணில் ஆடுவது இந்தியாவுக்கு அனுகூலமாகும். இதுவரை எந்த உலகக் கோப்பையும் வெல்லாத இந்தியா இந்த முறை இறுதிதடையை வெற்றிகரமாக உடைப்ேபாம் என கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சூளுரைத்துள்ளார். 2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறியதே இந்தியாவின் சிறந்த செயல்பாடாகும். உலகின் 'நம்பர் ஒன்' பேட்டரான ஸ்மிர்தி மந்தனாவைத் தான் இந்திய அணி மலைபோல் நம்பி உள்ளது. அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 50 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்தார். 2025-ம் ஆண்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் (928 ரன்) முதலிடம் வகிக்கிறார்.
மேலும் இந்த ஆண்டில் இந்திய அணி ஆடிய 14 ஆட்டங்களில் 10-ல் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் ஒரு முறை பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதும் அடங்கும். மந்தனாவுடன், 5-வது முறையாக உலகக் கோப்பையில் கால்பதிக்கும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ், ரேணுகா சிங், சினே ராணா, கிரந்தி கவுட் உள்ளிட்டோர் நெருக்கடியை திறம்பட கையாண்டு ஒருங்கிணைந்து செயல்படும் பட்சத்தில், கோப்பையை கையில் ஏந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை.
இங்கிலாந்து: 4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி நாட் சிவெர் தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. ஆல்-ரவுண்டரான நாட் சிவெர் தான் அந்த அணியின் முதுகெலும்பு. 2017-ம் ஆண்டு உலகக் கோப்பையை அந்த அணி உச்சிமுகர்ந்த போது, அந்த தொடரில் 2 சதங்கள் அடித்தார். 2022-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற போது கூட அதிலும் செஞ்சுரி கண்டார். அண்மை கால தடுமாற்றத்தை சமாளித்து இங்கிலாந்து மீண்டெழுவதற்கு அவர் கைகொடுக்க வேண்டியது அவசியமாகும். மற்றபடி சோபி எக்லெஸ்டோன், சார்லி டீன், டாமி பீமோன்ட், டேனி வியாட், விக்கெட் கீப்பர் அமெ ஜோன்ஸ், ஹீதர் நைட், அலிஸ் கேப்சி நம்பிக்கை அளிக்கிறார்கள்.
நியூசிலாந்து: கடந்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை சொந்தமாக்கிய நியூசிலாந்து, இப்போது 50 ஓவர் உலகக் கோப்பைக்கு குறி வைத்துள்ளது. கேப்டன் சோபி டிவைன் உலகக் கோப்பையுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அனுபவமும், இளமையும் கலந்த அணியாக நியூசிலாந்து திகழ்கிறது. சுசி பேட்ஸ், லியா தஹூதஹூ, அமெலியா கெர், மேடி கிரீன், ஜார்ஜியா பிளிமெர் பலம் சேர்க்கிறார்கள். கடந்த 6 மாதங்களாக நியூசிலாந்து எந்த ஒரு நாள் போட்டியிலும் விளையாடவில்லை. ஆனாலும் கடந்த மாதம் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள சூழலுக்கு ஏற்ப பழக்கப்படுத்திக் கொள்ள 2 வாரம் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டனர். எப்படியும் அவர்கள் டாப்-4 அணிக்குள் ஒன்றாக அரைஇறுதியை எட்டி விடுவார்கள் என்பதே நிபுணர்களின் கணிப்பு.
தென்ஆப்பிரிக்கா: கடந்த இரு உலகக் கோப்பை தொடர்களில் அரைஇறுதிக்கு வந்திருந்த தென்ஆப்பிரிக்கா இந்த முறை மேலும் ஒரு அடி முன்னேறி முதல்முறையாக இறுதி சுற்றை எட்டுவோம் என்று கூறியுள்ளது. இந்த தடவை தாங்கள் மிகவும் வலுவான அணியாக இருப்பதாக கேப்டன் லாரா வோல்வார்ட் கூறுகிறார். அவருடன், 'ஹாட்ரிக்' சதம் அடித்துள்ள தஸ்மின் பிரிட்ஸ், நடினே டி கிளெர்க், மரிஜானே காப் ஆகியோர் அந்த அணியின் கவனிக்கத்தக்க வீராங்கனைகளாக உள்ளனர். இவர்கள் ஜொலிப்பதை பொறுத்தே தென்ஆப்பிரிக்காவின் வீறுநடை அமையும்.
மற்ற அணிகளான இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் இதுவரை அரைஇறுதிக்கு கூட நெருங்கியதில்லை. அவர்களை பொறுத்தவரை அது தான் அவர்களின் முதல் குறி. இதில் சொந்த மண்ணில் பெரும்பாலான ஆட்டங்களில் விளையாடும் சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அதிர்ச்சி வைத்தியங்களை அளிக்க ஆயத்தமாகிறது.
- பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
- கடந்த 2019ம் ஆண்டு பிரான்ஸில் நடந்த உலகக்கோப்பை போட்டியின் டிக்கெட் விற்பனையை விட அதிகம்.
9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 20ம் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறுகிறது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கிய நிலையில், இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.
இது, கடந்த 2019ம் ஆண்டு பிரான்ஸில் நடந்த உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியின் மொத்த டிக்கெட் விற்பனையைவிட இது அதிகமாகும்.






