search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ஏ
    X

    வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ஏ

    இங்கிலாந்தில் நடைபெற்று வந்த வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDA
    இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட 2-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள டவுன்டனில் நடைபெற்று வந்தது.

    கடந்த 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. கேம்ப்பெல் 41 ரன்னிலும், தாமஸ் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ப்ரூக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 90.5 ஓவரில் 302 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ப்ரூக்ஸ் 122 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுக்களும், நதீம் 3 விக்கெட்களும் வீழ்த்தினார்.

    இதையடுத்து இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா ‘ஏ’ 192 ரன்னில் சுருண்டது. கேப்டன் கருண் நாயர் 42 ரன்களும், கடைசி ஆட்டக்காரராக களம் இறங்கிய விஜய் சங்கர் 30 ரன்களும் சேர்த்தனர். அங்கிட் பாவ்னே 43 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி சார்பில் ரேமன் ரெய்பர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டும், ஒஷானே தாமஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி முதலில் சிறப்பாக ஆடியது. அதன்பின் இந்திய பந்து  வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்ப்பெல் 61 ரன்களும், ஜெமன் பிளாக்வுட் 67 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால் அந்த அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா ‘ஏ’ சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், குர்பானி 3 விக்கெட்டும், ஜெயந்த் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

    ஒட்டுமொத்தமாக வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 320 ரன்கள் அதிகம் பெற்றிருந்தது. இதனால் இந்தியா ‘ஏ’ அணிக்கு 321 வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. ஹனுமா விஹாரி மற்றும் கேப்டன் கருண் நாயர் அரைசதமடித்து சேஸிங் செய்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள்.



    நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ‘ஏ’ அணி 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. ஹனுமா விஹாரி 66 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. விஹாரி மேலும் இரண்டு ரன்கள் எடுத்து 68 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த பாவ்னே 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் விக்கெட் கீப்பர் ரிஷ் பந்த் சிறப்பான ஆட்டத்தை ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 71 பந்தில் 67 ரன்கள் அடிக்க இந்தியா ‘ஏ’ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    Next Story
    ×