search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முதல் பூப்பும், பாட்டி வைத்தியமும்
    X

    முதல் பூப்பும், பாட்டி வைத்தியமும்

    • உளுந்து, இடுப்பு எலும்புகளுக்கு வன்மை தந்து இடுப்பு வலி வராமல் தடுத்து பலம் கொடுக்கும்
    • ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்டிரோன் ஆகிய இரண்டும் தான் மகளிருக்கான தனித்துவ ஹார்மோன்கள்.

    "மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா" என்கிறார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. மகளிரின் பருவங்களில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது மங்கைப் பருவம். அதாவது பெண்களின் 11 -13 வயது வரை. இந்த வயதில் பெண்களுக்கு பொதுவாகவே மாதவிடாய் எனும் பூப்பு துவங்குகிறது. பூப்பு என்பது பெண்களின் இயற்கையான உடல் செயலியல் நிகழ்வு.

    தமிழ் இலக்கியங்களில் இந்த மங்கைப்பருவம் 11-13 வயது என குறிப்பிடுகிறது. இயல்பாக 11-13 வயதுகளில் பூப்பு எய்தி வந்த பெண்கள், நவீன வாழ்வியல் நெறிமுறைகளால் 10 வயதிற்கு முன்னதாகவே பூப்பு அடைந்து, 40 வயதிற்கு முன்னதாகவே கடைசி பூப்பு எனும் மெனோபாஸ் நிலையை அடைகின்றனர். இதனால் உடல் அளவிலும், மனதளவிலும் பெரிய மாற்றங்களை சவால்களாக சந்திக்க வேண்டி உள்ளது.

    அதிகமான துரித உணவுகளும், பட்டனை தட்டின உடனே வாசலில் வந்து நிற்கும் நெருப்பில் வாட்டிய இறைச்சி வகைகளும் இதற்கு ஒரு பக்கம் காரணமாகின்றன. நவீன காலம் என்ற போர்வையில், விரும்பிய உணவுகள் வேண்டிய நேரத்தில் உண்ணும் தட்டை அலங்கரிக்கின்றன. இது நவீன வாழ்வியலின் வளர்ச்சிக்கு அடையாளம் என்பதை விட ஆரோக்கிய வாழ்வினை கெடுக்கும் செயல் என்பதே உண்மை.

    100 டிகிரிக்கு மேல் இறைச்சியை நெருப்பில் வாட்ட, அதில் உள்ள புரத மூலக்கூறு சிதைந்து, ஹெடிரோ சைக்ளிக் அமைன் எனும் மூலக்கூறுகளாக மாறுவதாக நவீன அறிவியல் எச்சரிக்கிறது. இந்த அமைன்கள் நாவின் சுவை மொட்டுக்களை சிதைத்து அந்த சுவைக்கு நாவினை அடிமையாக்கும். அது மட்டுமின்றி நம் உடலில் மரபணு வரை சென்று தாக்கி புற்றுநோய்க்கு காரணமாகும் கார்சினோஜெனிக்-ஆக செயல்படுவதாக உள்ளது பலருக்கும் தெரியாது.

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    மஞ்சள், இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து பாரம்பரியமாக பாட்டி சமைக்கும் முறையினை மறந்ததே பல புற்றுநோய் நிலைகளுக்கு அடிப்படை. மஞ்சளில் உள்ள குர்குமின், சீரகத்தில் உள்ள குமினல்டீஹைடு, இஞ்சியில் உள்ள ஜின்ஜிபேரின், பூண்டில் உள்ள அலிசின் ஆகிய பல வேதிப்பொருள்கள் புற்றுநோய்க்காரணிகளை தடுக்கும் தன்மை கொண்டது. நம் பாரம்பரிய உணவு முறைகளும், வாழ்க்கை முறைகளும் சித்த மருத்துவத்தோடு ஒன்றிணைந்தது. இதை இக்கால மங்கையர்கள் புரிந்துகொண்டால் தான் வருங்கால சந்ததி ஆரோக்கியம் பெறும்.

    அத்தகைய மங்கைப் பருவத்தில் பூப்பு என்பது அவர்களுக்கு திடீரென தோன்றும் எதிர்பாராத உடல் செயலியல் மாற்றம். 'பூப்பு' என்பது கருப்பை உட்சவ்வின் வழக்கமான உதிரப்போக்கு. இது பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஏற்படுகிறது. 'மாதவிடாய் இழப்பு' என்பது கருப்பை உட்சவ்வின் ரத்தம் மற்றும் திசுக்கள் மற்றும் சுரப்புகளால் ஆனது. ஒவ்வொரு மாதவிடாயின் போதும் 40 முதல் 60 மில்லி அளவுக்கு ரத்தம் இழக்கப்படுவதாக மருத்துவ அறிவியல் கூறுகின்றது. ஆக முதலில் பூப்பு எய்தும் பெண்கள் அதற்கேற்றார் போல் உடல் வலிமையும், மன வலிமையும் பெற்று இருத்தல் அவசியம்.

    பெண்கள் மங்கைப் பருவத்தில் பூப்பு அடைந்ததும் பாட்டி வைத்தியமாக கொடுக்கும் பாரம்பரிய உணவுகள் உடல், மன வலிமை கொடுப்பதோடு மருத்துவ குணத்தையும் அளிக்கும். பூப்பு முதலில் துவங்கும் போது கோழி முட்டையும், பாலும், நல்லெண்ணையும், பச்சரிசி மாவில் செய்த பிட்டும் தருவது வழக்கம். 'நல்ல சாப்பிடுமா, அப்பதான் இடுப்பு வலு பெறும்' என்று பாட்டி ஆசை ஆசையாய் செய்து கொடுக்கும் உளுந்து களியில், கேழ்வரகு உருண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. இத்தகைய இயற்கை தந்த உணவுகளுக்கு, சத்து மாத்திரை, பாட்டில் டானிக் இவற்றை விட பலன் அதிகம்.

    'நல்ல எண்ணெய்' என்ற பெயர்க்காரணம் எள் எண்ணெய்க்கு வருவதன் காரணம், அதில் நச்சுத்தன்மை உள்ள வேதிப்பொருட்கள் என்பதே இல்லை. நல்லெண்ணெய்க்கு ஆதாரமாக உள்ள எள், எலும்புகளுக்கு வன்மை தந்து உடலில் ரத்தத்தை அதிகரிக்கக்கூடியது. இதனை அகத்தியர் குணவாகடம் என்ற நூல் 'ஏறனலாம் திண்மை தரும்' என்று குறிப்பிடுகிறது. இதில் உள்ள தாது உப்புக்களான இரும்பு, துத்தநாக சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், செம்பு ஆகிய சத்துக்கள் எலும்பினை வன்மையாக்கி ரத்தத்தை பெருக்கும். எள் விதையில் உள்ள புரதசத்து உடலுக்கு வன்மை தரும்.

    நல்லெண்ணையில் அதிக அளவு வைட்டமின் ஈ உள்ளது. இது மலட்டு தன்மையை நீக்கும் வைட்டமின் என்பது யாவரும் அறிந்ததே. இதில் உள்ள முக்கிய கொழுப்பு அமிலங்கள் உடலின் பல்வேறு செல்களின் வளர்ச்சிக்கும் அத்தியாவசியம். ஆகவே பூப்பு எய்தும் காலத்தில் பாட்டி தரும் எள்ளு உருண்டையும், நல்லெண்ணையும் நாவுக்கும் சுவை, கருப்பைக்கும் பலம் என்பது விளங்குகிறது. பருப்பு பொடியில் நல்லெண்ணை சேர்த்து எடுப்பதும் மகளிர்க்கு பூப்பு காலத்தில் வன்மையை தரும்.

    மேலும் எள்ளில் உள்ள சீசாமின், சீசாமோலின் ஆகிய வேதிப்பொருட்களுக்கு ஆன்டிஆக்டசிடன்ட் தன்மை இருப்பதால் வயது மூப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். இது புற்றுநோயினை வரவிடாமல் தடுக்கும் தன்மையும் உடையது.

    இன்று உலக நாடுகள், நவீன மருத்துவத்தில் நல்லெண்ணையை 'சிஸ்ப்ளட்டின்' போன்ற புற்றுநோய் மருந்துகளின் ஊடகமாக தான் பயன்படுத்துகின்றன. ஆனால் நம் பாரம்பரிய மருத்துவத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக நல்லெண்ணை புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவாக பயன்படுத்துவது அறிவியலை விஞ்சி நிற்கும் ஆச்சரியம்.

    பூப்பு அடைந்த பெண்களுக்கு ஆகாரமாக பாட்டி கொடுக்கும் அடுத்த உணவு அரிசி மாவு பிட்டும், உளுந்து வடையும் தான். புழுங்கலரிசியை விட, பச்சரிசி மந்தம் உண்டாக்கும் எனினும் உடலுக்கு வன்மை தரும். இந்த அரிசியால் செய்யப்பட்ட பிட்டினை உண்டால் பூப்பு எய்தும் காலத்தில் அதிகமாக வெளியேறும் ரத்தபோக்கினை கட்டுப்படுத்தும் என்கிறது சித்த மருத்துவம். இதனை 'செம்புனலும் கட்டும் தெளிவும் உரமாகும்' என்ற அகத்தியர் குணவாகட வரிகளால் அறியலாம். பிட்டுக்கு கூட மருத்துவ குணங்கள் உள்ளதாக சித்த மருத்துவம் கூறுவது நிச்சயம் வியப்பு தரும்.

    கருப்பு உளுந்தில் உள்ள மருத்துவ குணங்கள் பல. உளுந்து நம் அன்றாட வாழ்வில் பல காலமாக பயன்படுத்தும் பருப்பு வகை இது. உடலின் ஊட்டசத்துக்கு ஆதாரம். 100 கிராம் உளுந்தில், ஏறத்தாழ 40 கிராம் வரை புரதசத்து உள்ளது .மேலும் இதில் எண்ணற்ற வைட்டமின்களும், தாது உப்புக்களும் உள்ளன.

    உளுந்து, இடுப்பு எலும்புகளுக்கு வன்மை தந்து இடுப்பு வலி வராமல் தடுத்து பலம் கொடுக்கும் என்பதை "என்புருக்கி தீரும் இடுப்புக்கதி பலமாம் முன்பு விருத்தியுண்டாம் முன்" என்ற அகத்தியர் குணவாகடப் பாடல் வரிகளால் அறியலாம்.

    பருவ காலத்தில் பெண்கள் பூப்பு எய்தும்போது, உளுந்தினை வடையாக, கஞ்சியாக அல்லது களியாக்கி கொடுப்பது காலம் காலமாக இருந்து வரும் நம் வழக்கு முறை. இது வெறும் வழக்கு முறை மட்டுமல்ல, ஆரோக்கியமான சமுதாயத்தினை உண்டாக்கும் வழிமுறையும் கூட தான்.

    அடுத்து பாட்டி தரும் கோழிமுட்டையில் வெண்மை பகுதியில் புரத சத்தும், மஞ்சள் பகுதியில் கொழுப்பு சத்தும் என்பதைக் கடந்து கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளதால் எலும்புகளை வன்மையாக்க உதவும். கோழி முட்டை மஞ்சள் கருவில் உள்ள கொலெஸ்ட்ரால் உடலில் இனப்பெருக்க ஹார்மோன்கள் உற்பத்திக்கு மிக அவசியம்.

    ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்டிரோன் ஆகிய இரண்டும் தான் மகளிருக்கான தனித்துவ ஹார்மோன்கள். இதில் ஈஸ்ட்ரோஜென் மாதவிடாயின் முதல் பகுதியிலும், ப்ரோஜெஸ்டிரோன் மாதவிடாயின் இரண்டாம் பகுதியிலும் ஆட்சி செலுத்துகிறது. இவை இரண்டும் சினைப்பை சுரப்புகள் தான். இருப்பினும் இதற்கு ஆதாரம் கொலஸ்டரோல் என்ற வேதிப்பொருள் தான்.

    மேலும், முட்டை வெண்கருவில் பல்வேறு புரத மூலக்கூறுகள் இருப்பினும் அதில் உள்ள லியூசின் எனும் புரத மூலக்கூறு, வயது வந்த பெண்களின் உடல் எடையை கூட்டுவதற்கு ஆதாரமாக உள்ளது. அறிந்தோ அறியாமலோ பூப்பு காலத்தில் பாரம்பரியமாக முட்டை கொடுப்பதன் பின்னால், இவ்வளவு அறிவியல் செய்திகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இன்னும் சொல்ல வேண்டிய எளிய உணவு என்னவெனில் 'பஞ்சந்தாங்கி' என்ற சிறப்பு பெயர் பெற்ற கேழ்வரகு. இதன் மாவினை சிறிது பாலுடன் பனைவெல்லம் சேர்த்து கூழாக்கி, அல்லது களியாக்கி பூப்பு எய்தவர்களுக்கு கொடுக்க உடல் நலமும், வலிமையும் உண்டாகும். இதனை 'காழாங் களிக்கு பலமுண்டாம்' என்று அகத்தியர் குணவாகடம் கூறுகின்றது.

    பொதுவாக தானிய வகைகளில் உள்ள புரத சத்தும், எண்ணற்ற தாது உப்புக்களும் வைட்டமின்களும் மட்டுமின்றி கேழ்வரகில் அதிகப்படியான கால்சியம் சத்து உள்ளது இதன் சிறப்பு. இந்த கால்சியம் எலும்புகளுக்கு வன்மையை தரும். இந்த கேழ்வரகு கற்காலத்திற்கு பிறகு வந்த இரும்பு காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வருவதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றது. ஆனால், இப்போது வந்த நவீன துரித உணவுகளால் இதன் மகத்துவமும், மருத்துவ குணமும் மறக்கடிக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை.

    இவ்வாறு மகளிர் பூப்பு எய்திய, முதல் ஒரு சில மாத காலத்திற்கு அவர்களிடம் அதிக அன்பும், அக்கறையும் காட்டி, பாரம்பரிய உணவுகளை ஊட்டி, அதன் பிறகு இத்தகைய பாரம்பரிய உணவுகளை மறப்பதே பூப்பு சுழற்சி தடைபடுதலுக்கும், மாறுபடுதலுக்கும் முக்கிய காரணம்.

    (தொடரும்)...

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×