என் மலர்
இந்தியா
- பாராளுமன்றக் குழுவின் சட்டப்பூர்வமான தன்மையையும் எதிர்த்து யஷ்வந்த் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
- மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் கடந்த 8-ந்தேதி ஒத்திவைத்தது.
டெல்லி ஜகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தபோது வீட்டில் கட்டு கட்டாக பண குவியல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த பணத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நீதிபதி யஷ்வந்த் மறுத்தார். இச்சம்பவம் தொடர்பாக யஷ்வந்த் வர்மா அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக்கோரி 146 எம்.பிக்கள் கையெழுத்திட்டு பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் வழங்கினர். இதையடுத்து 3 உறுப்பினர் கொண்ட விசாரணை குழுவை சபாநாயகர் அமைத்தார். இதே தீர்மானம் மேல்-சபையில் நிராகரிக்கப்பட்டது.
இதற்கிடையே தன்னை நீக்குவதற்கான தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதையும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பாராளுமன்றக் குழுவின் சட்டப்பூர்வமான தன்மையையும் எதிர்த்து யஷ்வந்த் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் கடந்த 8-ந்தேதி ஒத்திவைத்தது.
இந்த நிலையில், மக்களவை சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனு மீது இன்று நீதிபதிகள் தீபங்கர் தத்தா, எஸ்.சி. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
இதில் யஷ்வந்த் வர்மாவின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். நீதிபதி யஷ்வந்த் வர்மா சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மேல்-சபையின் துணைத் தலைவருக்கு ஒரு தீர்மானத்தை நிராகரிக்க அதிகாரம் இல்லை என்றும், 1968-ம் ஆண்டு நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின் கீழ், சபாநாயகர் மற்றும் தலைவருக்கு மட்டுமே ஒரு நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்தனர்.
- சேவல் பந்தயத்தில் கலந்து கொண்டவர்கள் நல்ல நேரம் ஜாதகம் பார்த்த பிறகு தங்களது சேவல்களை பந்தயத்திற்கு விட்டனர்.
- சேவல்களின் கால்களில் கூர்மையான கத்தி கட்டப்பட்டு சேவல்கள் ஆக்ரோஷமாக ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன.
சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சேவல் பந்தயம் களைகட்டியது.
ஆந்திராவில் மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, டாக்டர் அம்பேத்கர் கோனசீமா, கிருஷ்ணா, போலவரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சேவல் பந்தயம் நடந்தது.
பந்தயங்களில் கலந்து கொண்ட சேவல்கள் மீது பார்வையாளர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பந்தயம் கட்டினர்.
ஆந்திராவில் சேவல் பந்தயத்திற்கு மாநில அரசு தடை விதித்து இருந்தாலும் அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் பந்தயத்தை தொடங்கி வைப்பதால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பந்தயத்தில் வெற்றி பெறும் சேவல் உரிமையாளர்களுக்கு கார்கள், பைக்குகள், தங்கம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.
கிருஷ்ணா மாவட்டத்தில் பந்தயம் கட்டும் பணத்தை எந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டது. சேவல் பந்தயத்தில் கலந்து கொண்டவர்கள் நல்ல நேரம் ஜாதகம் பார்த்த பிறகு தங்களது சேவல்களை பந்தயத்திற்கு விட்டனர்.
சேவல்களின் கால்களில் கூர்மையான கத்தி கட்டப்பட்டு சேவல்கள் ஆக்ரோஷமாக ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன. கத்தி வெட்டுப்பட்டு சில பந்தய சேவல்கள் சம்பவ இடத்திலேயே இறந்தன.
கிழக்கு வாதவரி மாவட்டம், வெங்கட்ராமய்யா பகுதியில் நேற்று நடந்த சேவல் சந்தையில் குடிவாடா பிரபாகர் மற்றும் ராஜமுந்தி ரமேஷ் சேவல்கள் மோதிக்கொண்டன. இதில் ராஜமுந்திரி ரமேஷின் சேவல் வெற்றி பெற்றது. அவருக்கு ரூ.1.53 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
நேற்று ஒரே நாளில் தெலுங்கு மாநிலங்களில் நடந்த சேவல் பந்தயத்தில் ரூ .100 கோடிக்கு மேல் பந்தயம் நடந்ததாக பந்தைய போட்டியாளர்கள் தெரிவித்தனர்.
- மும்பை மாநகராட்சி தேர்தல் ஒரு சாதாரண உள்ளாட்சி தேர்தலைத் தாண்டி, பெரிய அரசியல் போர்க்களமாக மாறியது.
- தேர்தலையொட்டிய கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் மொத்தமாக 893 வார்டுகளுக்கு 3 கோடியே 48 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
தேர்தலில் 15,931 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் இந்தியாவிலேயே மிகப்பெரிய உள்ளாட்சி அமைப்பாக கருதப்படும் மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த தேர்தலில், 227 இடங்களுக்கு சுமார் 1,700 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மும்பை மாநகராட்சி தேர்தலில் அரசியல் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. பா.ஜ.க. மற்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஒருபுறமும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரேயின் எம்.என்.எஸ். மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்த கூட்டணி மறுபுறமும் போட்டியிட்டன.
காங்கிரஸ் கட்சி, அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது.
புனே மாநகராட்சியில் பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தனித்தனியாக போட்டியிட்டன. உத்தவ் சிவசேனா மற்றும் எம்.என்.எஸ். கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் தனித்தும், தேசியவாத காங்கிரசின் 2 பிரிவுகளும் ஒன்றிணைந்தும் போட்டியிட்டன.
மும்பை தேர்தல் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவதற்கான முக்கிய காரணம், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைந்து அரசியல் களத்தில் நிற்கும் சூழல் உருவாகியிருப்பதே. தங்களின் பழைய அரசியல் அடையாளத்தையும் செல்வாக்கையும் மீட்டெடுக்க அவர்கள் முயற்சி செய்து வரும் நிலையில், பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அவர்களை நேரடியாக எதிர்கொண்டு களம் இறங்கியுள்ளது.
இதனால், மும்பை மாநகராட்சி தேர்தல் ஒரு சாதாரண உள்ளாட்சி தேர்தலைத் தாண்டி, பெரிய அரசியல் போர்க்களமாக மாறியது. தேர்தலையொட்டிய கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன.
இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 35 இடங்களிலும், சிவசேனா-உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி 24 இடங்களிலும் முன்னிலை வகித்தது.
மும்பை மாநகராட்சியில் 227 இடங்களில் 60 இடங்களுக்கான முன்னிலை விவரங்கள் தெரியவந்துள்ளன. இதில் பா.ஜ.க. கூட்டணி 15 இடங்களிலும், ஷிண்டேவின் கட்சி 10 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் யு.பி.டி. 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. எம்.என்.எஸ். 6 இடங்களிலும், சரத் பவாரின் கட்சி 1 இடத்திலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
151 வார்டுகளை கொண்ட நாக்பூரில் பா.ஜ.க. கூட்டணி 35 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
- உணவு அடுக்கி வைத்து இருந்த அறையில் கண்ணை கட்டிய துணியை அவிழ்த்து விட்டனர்.
- பல்வேறு இடங்களில் புதுமாப்பிள்ளைகளுக்கு 100-க்கும் மேற்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டன.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நர்சிப்பட்டினம், சாந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மனைவி கலாவதி. இவர்களின் மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
மருமகனுக்கு பல்வேறு வகையான உணவுகளை சமைத்து பரிமாற கலாவதி முடிவு செய்தார். அதன்படி நேற்று ஆடு, கோழி, முட்டை, மீன்கள், இனிப்பு வகைகள், கார வகைகள் என 290 வகையான உணவுகளை சமைத்து அறை முழுவதும் பரப்பி வைத்திருந்தனர். மருமகனுக்கு பிரமிப்பு ஏற்படுத்துவதற்காக அவரது கண்ணை துணியில் கட்டி அழைத்து வந்தனர்.
உணவு அடுக்கி வைத்து இருந்த அறையில் கண்ணை கட்டிய துணியை அவிழ்த்து விட்டனர். 290 வகையான உணவு வகைகளை கண்ட மருமகன் என்ன செய்வது என்று தெரியாமல் அசந்து போனார். இதேபோல் பல்வேறு இடங்களில் புதுமாப்பிள்ளைகளுக்கு 100-க்கும் மேற்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டன.
- நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது திருவள்ளுவர் நம்பிக்கை வைத்தார்.
- திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வருகிற 26-ம் தேதி குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
- குடியரசு தினவிழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பது வழக்கம்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் வருகிற 26-ம் தேதி குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐரோப்பிய யூனியன் தலைவர் ஊர்சுலா வான்டர் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அண்டோனியோ கோஸ்டா ஆகிய இருவரும் வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்தப் பயணத்தின்போது, டெல்லியில் நடைபெறும் 16-வது இந்தியா-ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் அவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்துப் பேச உள்ளனர் என தெரிவிக்கபட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே 2004-ம் ஆண்டு முதல் மூலோபாய உறவு நீடித்து வருகிறது. பல்வேறு துறைகளில் இருதரப்புக்கும் இடையே உறவுகள் வலுவடைந்து வருகிறது எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
- ஈரானில் உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் வன்முறையால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
- இந்தியர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்துவர வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துவருகிறது.
புதுடெல்லி:
ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, இந்தியக் குடிமக்கள் மறு உத்தரவு வரும் வரை ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், ஈரானில் உள்ள இந்தியர்கள் அங்கு கிடைக்கும் எந்தவொரு போக்குவரத்து வசதியைப் பயன்படுத்தி உடனே நாட்டை விட்டு வெளியேறும்படி டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியது.
ஈரானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் கையாளும்படி வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
முதல் கட்டமாக அங்குள்ள இந்தியர்கள் விமானங்கள் மூலம் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலைமை மேலும் மோசமடைந்தால், அவர்களை மீட்க இந்திய விமானப்படை மற்றும் இந்தியக் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத் துறை மந்திரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
- மும்பை மாநகராட்சிக்கு 9 வருடங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
- 227 கவுன்சிலர் இடங்களுக்கு 1700 பேர் போட்டி.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் மேலும் 28 மாநராட்சிகளுக்கு தேர்தல் இன்று நடைபெற்றது. இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. இதில் 46 முதல் 50 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். பின்னர் சரியான வாக்குப்பதிவு விவரங்கள் வெளியிடப்படும் என்றார்.
கடந்த 2017-ம் ஆண்டு மும்பை மாநகராட்சிக்கு தேர்தல நடைபெற்றது. அப்போது 55.53 சதவீத வாக்குகள் பதிவாகின. முதல்முறையாக தேர்தலை சந்தித்த ஜால்னா மற்றும் இசால்கராஞ்சி மாநகராட்சிகளில் 56.35 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்காளர்கள் கையில் வைக்கப்பட்ட மை எளிதாக அழிந்துவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளா்ர.
மும்பை மாநகராட்சி தேர்தலில் மகாயுதி கூட்டணிக்கும், தாக்கரே சகோதரர்களுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. 227 கவுன்சிலர் இடங்களை கொண்ட மும்பை மாநகராட்சி தேர்தலில் 1700 பேர் போட்டியிட்டனர்.
மும்பை மாநகராட்சிக்கு 9 வருடங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. 4 வருடத்திற்கு முன்னதாக நடத்தப்பட வேண்டிய தேர்தல், தற்போது நடத்தப்பட்டுள்ளது.
- இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, காவல்படை துரத்தி பிடித்தது.
- போர்பந்தருக்கு படகு கொண்டு வரப்பட்டுள்ளது.
சர்வதேச கடலோர எல்லைப் பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளது. மேலும், அந்த படகில் இருந்து 9 பேரை கைது செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட படகு, குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு கொண்டு சொல்லப்படுகிறது. நேற்று கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல் அரேபிய கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துபோது பாகிஸ்தானின் மீன்பிடி படகு இந்திய எல்லைக்குள் தென்பட்டதை கண்டனர். இதனைத் தொடர்ந்து படகை பறிமுதல் செய்துள்ளனர்.
கப்பலை கண்டதும் பாகிஸ்தான் படகு, பாகிஸ்தான் எல்லைக்குள் செல்ல முயன்றுள்ளனர். இருந்தபோதிலும், கடலோர காவல்படையினர் அந்த படகை இடைமறித்து, படகில் ஏறி பறிமுதல் செய்துள்ளனர்.
- கடந்த வாரம் ஐ-பேக் (I-PAC) நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
- மேற்கு வங்க அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் 'கேவியட்' மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குநர் ராஜீவ் குமாரை பணியிடை நீக்கம் செய்யக் கோரி அமலாக்கத்துறை, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், விசாரணை முகமைக்கு மேற்கு வங்க காவல்துறையின் மூத்த அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்றும், அவர்கள் தவறாக நடந்துகொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அவர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமலாக்கத்துறை கோரியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தை அமலாக்கத்துறை வலியுறுத்தியுள்ளது.
கடந்த வாரம் தேர்தல் உத்தி வகுப்பாளரான ஐ-பேக் (I-PAC) நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இச்சோதனையின் நடுவே மம்தா பானர்ஜி வந்து, விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும், சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிறரின் பங்கு குறித்து சிபிஐ விசாரணை கோரி அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. அங்கு உடனடி நிவாரணம் கிடைக்காததைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
கடந்த வாரம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற அறையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால், நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரிக்கும்.
ஐ-பேக் (I-PAC) மீது நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைகள் தொடர்பாக, தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என்று கோரி மேற்கு வங்க அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் 'கேவியட்' மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
- 2027 உ.பி. சட்டசபை தேர்தலில் பிஎஸ்பி தனித்து போட்டியிடும்.
- சாதி அடிப்படையிலான கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து, 5-வது முறையாக ஆட்சியை பிடிப்போம்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி, நாட்டில் நடக்கும் அனைத்து தேர்தலிகளிலும் தனது கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவித்துள்ளார்.
லக்னோவில் தனது 70-வது பிறந்தநாளில், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, "சிறு மற்றும் பெரிய தேர்தல்கள் அனைத்திலும் தனித்து போட்டியிடுவதே மிகவும் பொருத்தமானது என்றும், எந்தக் கட்சியுடனும் எந்தவிதமான கூட்டணியிலும் ஈடுபடப் போவதில்லை" என்றார்.
மேலும், "இது குறித்து எந்த குழப்படும் இருக்கக் கூடாது. பிஎஸ்பி உத்தர பிரதேசத்தில் நடக்க இருக்கும் அடுத்த சட்டசபை தேர்தலில் தனித்துதான் போட்டியிடும். பாஜக, காங்கிரஸ் மற்றும் மற்ற சாதி அடிப்படையிலான கட்சிகளுக்கு பிஎஸ்பி சரியான பதிலடி கொடுத்து, உத்தர பிரதேசத்தில் 5-வது முறையாக ஆட்சி அமைக்கும்" என்றார்.
- மும்பையின் 227 வார்டுகளில் 1,700 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
- 1.03 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் மும்பை, புனே உட்பட 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 2,869 இடங்களுக்கு 15,931 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மும்பையின் 227 வார்டுகளில் 1,700 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு மட்டும் 1.03 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 7.30 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணிக்கு நிறைவடையும். தேர்தலை முன்னிட்டு சம்பந்தப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் இன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் தாக்கரே சகோதரர்களுக்கும், பாஜக-சிவசேனா கூட்டணிக்கும் இடையே பெரும் போட்டி நிலவுகிறது.
இதனிடையே மாநகராட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாக சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார. மேலும், இது ஜனநாயகத்தை கொலை செய்வதற்கான முயற்சி என கடுமையாக சாடியுள்ளார்.






