என் மலர்
இந்தியா
- செப்டம்பர் மாதத்தில் மோனோ ரெயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது.
- மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் அதன் கண்ணாடிகளை உடைத்து பயணிகள் மீட்கப்பட்டனர்.
மும்பை:
மும்பையில் மோனோ ரெயில் போக்குவரத்து உள்ளது. இந்த ரெயில் உயர்மட்ட பாதையில் தனித்துவமான தண்டவாளத்தில் இயக்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 15 மற்றும் 19-ம் தேதிகளில் மோனோ ரெயில்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்றன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் அதன் கண்ணாடிகளை உடைத்து பயணிகள் மீட்கப்பட்டனர். மோனோ ரெயில் சேவை கடந்த செப்டம்பர் 20-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.
பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை சோதனை ஓட்டம் நடந்தது. வடாலா டெப்போ அருகே தண்டவாளம் கிராசிங் செய்யும் இடத்தில் சென்றபோது, மற்றொரு தண்டவாளம் மீது பயங்கரமாக மோதி நின்றது. இதில் மோனோ ரெயில் பெட்டியின் அடிப்பகுதி சுக்கு நூறாக நொறுங்கி பலத்த சேதம் அடைந்தது. இது சோதனை ஓட்டம் என்பதால் ரெயிலில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் இல்லை. இதில் ரெயில் ஓட்டுனருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் இது 'சிறிய விபத்து' என மோனோ ரெயில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
மோனோ ரெயில் தொடர்ந்து ஆபத்துகளில் சிக்கி வருவது பயணிகள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
- பீகாரில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
- கட்சிகளின் தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இரண்டாவது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதையடுத்து, தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்தனர்.
பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்பட பலர் பீகாரில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி பாட்னாவில் மெகா ரோடுஷோ நடத்தினார். தலைவர்கள் முற்றுகையால் பீகார் தேர்தல் களம் சூடு பிடித்தது.
இந்நிலையில், பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடக்கும் 121 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பலத்த பாதுகாப்புடன் செய்யப்பட்டுள்ளன.
- நாளை முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
- தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி நாளை முதல் கட்டமாக 121 தொகுதிகளில் நடைபெற உள்ள வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது கட்டமாக 122 தொகுதிகளுக்கு 11ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், பிர்பெயின்தி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான லலன் குமார் இன்று அக்கட்சியில் இருந்து திடீரென விலகி லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியில் இணைந்தார்.
அவர் கட்சியில் இருந்து விலகியது பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் அவர் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்திருந்த அவர், ஆர்.ஜே.டி.யில் இணைந்துள்ளார். அவர் பீகார் எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல் மந்திரி ராப்ரி தேவி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
- சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 3 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்து, பின்னர் கம்பேக் கொடுத்ததை பாராட்டியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. ஆண்கள் அணி இதற்கு முன்னதாக இரண்டு முறை (கபில்தேவ் தலைமையில் 1983, டோனி தலைமையில் 2011) 50 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள், அணி நிர்வாகிகள் இன்று பிரதமர் மோடியை, அவரது லோக் கல்யாண் மார்க் வீட்டில் சந்தித்தனர். அப்போது வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டனர்.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 3 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்து, பின்னர் கம்பேக் கொடுத்ததை பாராட்டியுள்ளார்.
இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், 2017-ல் பிரதமரை சாம்பியன் கோப்பை இல்லாமல் சந்தித்தோம். தற்போது சாம்பியன் கோப்பையுடன் சந்தித்தோம். பிரதமர் மோடியை அடிக்கடி சந்திக்க விரும்புகிறோம் என்றார்.
- அரியானா தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு.
- பீகாரை பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை. ஆகவே, கதையை அரியானாவுக்கு மாற்றுகிறார்.
வாக்கு திருட்டு தொடர்பாக தன்னிடம் ஹைட்ரஜன் குண்டு உள்ளது. அதை பயன்படுத்தினால், மோடி ஆட்டம் கண்டுவிடுவார் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த வாக்கு திருட்டு மோசடி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றது. காங்கிரசின் வெற்றியை பா.ஜனதாவின் வெற்றியாக மாற்றம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டது.
அரியானாவில் ஒரே நபர் 10 வாக்குச்சாவடியில் 22 முறை வாக்களித்து உள்ளார். 22 முறை வாக்களித்த நபரின் புகைப்படம் பிரேசிலை சேர்ந்த மாடல் ஒருவருடையது.
அரியானாவில் மொத்த வாக்காளர்களில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டு உள்ளன. மொத்த வாக்குகளில் 12.5 சதவீத வாக்குகள் திருடப்பட்டுள்ளது. 8-ல் ஒரு வாக்கு அரியானா தேர்தலில் திருடப்பட்டது. முகவரியே இல்லாமல் 93 ஆயிரம் வாக்குகள் இருந்தது.
ஒரே நபர் வெவ்வேறு அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்கு அளித்துள்ளனர். பாதாஸ்பூர் என்ற இடத்தில் 14 முறை ஒருவர் வாக்கு அளித்துள்ளார். வாக்கு திருட்டால்தான் அரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ஜனநாயகத்தை அழிப்பதில் பா.ஜனதாவின் புதிய ஆயுதம் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) ஆகும். மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் இதே மோசடி நடந்தது. அனைத்து கருத்து கணிப்பும் காங்கிரசுக்கே வெற்றி என கூறின. மோசடிகள் நடக்காமல் இருந்தால் அரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கும்.
வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பொய் சொல்கிறது. முக்கிய கண்காணிப்பு கேமரா ஆவணங்களை தேர்தல் ஆணையம் அழித்து உள்ளது. முறைகேடுகளால்தான் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. போலி புகைப்படங்களை நீக்கும் மென்பொருள் வசதி தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. ஒரே நபர் ஒரே நாளில் பல வாக்குகளை அளிக்க தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது? வாக்கு திருட்டின் மூலம் பீகாரிலும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்கு திருட்டு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
வாக்கு திருட்டில் ஈடுபடும் மோடியும், அமித் ஷாவும் பதவியில் இருக்க தகுதியற்றவர்கள். பிரதமர் மோடி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டார். வாக்கு திருட்டு ஒரு தொகுதியிலோ ஒரு மாவட்டத்திலோ மட்டும் அல்ல நாடு முழுவதும் நடக்கிறது.
இவ்வாறு ராகுல்காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதற்கு பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு பதில் அளித்துள்ளார். கிரண் ரிஜிஜு "தேர்தல் பீகாரில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ராகுல் காந்தி அரியானா பற்றி கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். பீகாரை பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை. ஆகவே, கதையை அரியானாவுக்கு மாற்றுகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
- வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக தொடர்ந்து தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.
- அவர் எந்த அடிப்படையும் இல்லாமல் அரசியலமைப்பு அமைப்புகளை டார்கெட் செய்கிறார்.
பீகார் மாநில தேர்தலுக்கான பிரசாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
வாக்குகளுக்காக பிரதமர் மோடி நடனம் கூடி ஆடுவார். வாக்காளர்கள் கேட்டுக்கொண்டால் யோகா கூட செய்வார் என விமர்சனம் செய்திருந்தார். மேலும், மீனவர்களுடன் குளத்தில் குதித்து நீச்சல் அடித்ததுடன், மீன் பிடித்தார்.
இந்த நிலையில் ராகுல் காந்தியை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கிண்டல் செய்துள்ளார். "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு குளத்தில் குதிப்பதைவிட வேறு வழியில்லை. வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக தொடர்ந்து தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். அவர் எந்த அடிப்படையும் இல்லாமல் அரசியலமைப்பு அமைப்புகளை குறிவைக்கிறார்" என்றார்.
மேலும், "ராகுல் காந்திக்கு என்ன நிகழ்ந்தது. அவர் பாதுகாப்புப்படையில் இடஒதுக்கீடு பிரச்சினையை எழுப்புகிறார். பாதுகாப்புப்படைகளில் இடஒதுக்கீடு கோரிக்கை வைத்து நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்" என்றார்.
- கள்ளக்காதல் கணவருக்கு தெரிந்ததால் கொலை செய்ய திட்டம்.
- 3 பேர் உதவியுடன் கொலை செய்து சமையலறையில் உடல் புதைப்பு.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சமீர் அன்சாரி. இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்கேஜ் பகுதியில் கட்டுமான தொழில் (கொத்தனார்) வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கும் ரூபி என்ற பெண்ணிற்கும் இடையில் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
ரூபிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வகேலா என்பவருக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது அன்சாரிக்கு தெரியவந்து, மனைவியை அடித்து உதைத்துள்ளார். இனிமேல் கணவன் உயிரோடு இருந்தால், வதேலாவுடனான கள்ளக்காதலை தொடர முடியாது என நினைத்த ரூபி, கணவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.
இது தொடர்பாக கள்ளக்காதலுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். கள்ளக்காதலன் வகேலா, அவரது உறவினர்கள் ரஹீம் மற்றும் மோசின் ஆகிய மேலும் இரண்டு பேரை இவர்களது திட்டத்துடன் இணைத்துக் கொண்டார்.
அன்சாரி வீட்டிற்குள் சென்ற 3 பேரும், ரூபி உதவியுடன் அன்சாரியின் கழுத்தை அறுத்து தீர்த்துக்கட்டினர். பின்னர் உடலை சமையலறையில் குழி தோண்டு புதைத்துள்ளனர். அத்துடன், டைல்ஸ் ஒட்டி குழி தோண்டிய அடையாளம் இல்லாத வகையில் மறைத்துள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்று சுமார் ஒரு வருடம் ஆகிறது. ரூபி அந்த வீட்டில் பல மாதங்கள் தங்கியுள்ளார். பின்னர், வேறு வீட்டிற்கு மாறியுள்ளார். வீடு பூட்டிக்கிடந்ததை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சந்தேகம் வந்துள்ளார். இந்த வீட்டில் வசித்து வந்த அன்சாரி என்பவரை பல மாதங்களாக பார்க்கவில்லை என போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
போலீசார் விசாரணை நடத்தும்போது, வதேலா வசமாக சிக்கிக் கொண்டார். வதேலாவின் வாக்குமூலம் அடிப்படையில் ரூபி கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய விவரம் தெரியவந்தது. வீட்டை உடைத்து சமையலறையில் புதைத்த இடத்தை தோண்டி எலும்புகளை எடுத்துள்ளனர். அதை சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
போலீசார் அவர்களை நெருங்குவதை அறிந்து கொண்ட ரூபி, ரஹிம், மோசின் தலைமறைவாகியுள்ளனர்.
- ராய் தொகுதியில் ஒரே வீட்டில் 108 வாக்காளர்கள் உள்ளனர்.
- பாஜக நிர்வாகி வீட்டில் 66 வாக்குகள் உள்ளதாக மோசடி
வாக்குத் திருட்டு பற்றிய ஹைட்ரஜன் குண்டை இன்று வெளியிடுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். .
இது தொடர்பாக 'THE H FILES' என்ற தலைப்பில் இன்று பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர், "ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 3.5 லட்சம் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது . இவர்கள் அனைவரும் முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர்கள். ஆனால் பாஜக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இத்தனை பேரையும் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.
ஹரியானாவின் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாகக் கூறி மாபெரும் மோசடி செய்துள்ளனர்.
ராய் தொகுதியில் ஒரே வீட்டில் 108 வாக்காளர்கள், பாஜக நிர்வாகி வீட்டில் 66 வாக்குகள் உள்ளதாக மோசடி செய்துள்ளனர் என்று ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளார்.
- ஒரு பெண்மணி 223 முறை தனித்தனியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்
- வாக்குச்சாவடி மையங்களில் இலட்சக்கணக்கான போலி வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
வாக்குத் திருட்டு பற்றிய ஹைட்ரஜன் குண்டை இன்று வெளியிடுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். .
இது தொடர்பாக 'THE H FILES' என்ற தலைப்பில் இன்று பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர், "அரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக முதல்வர் வேட்பாளராக இருந்த நயாப் சிங் சைனி பாஜக கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்கும் அதற்கான வேலைகளை செய்து விட்டோம் என சிரித்தபடியே கூறுகிறார் அந்த சிரிப்பின் பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது.
நாட்டின் இளைஞர்கள் குறிப்பாக gen z தலைமுறையினர் நான் சொல்வதை கவனமாக கேளுங்கள் ஏனென்றால் உங்களது எதிர்காலத்தை பற்றி தான் நான் தற்பொழுது பேசுகிறேன். உங்களது வாக்குரிமையை நிலைநாட்டுவதற்காக தான் பேசுகிறேன்
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் வாக்கு செலுத்தி இருக்கிறார். ஷிமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, விமலா என வெவ்வேறு பெயர்களில் இந்த பெண்மணி ஹரியானாவின் ஒரு தொகுதியில் 10 வெவ்வேறு வாக்குச்சாவடி மையங்களில் இருந்து 22 வாக்குகளை செலுத்தி இருக்கிறார்.
பெண்மணி ஒருவர் இரண்டு வாக்குப்பதிவு மையங்களில் 223 முறை தனித்தனியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். இந்தப் பெண்மணி நினைத்தால் ஒவ்வொரு வாக்குப் பதிவு மையங்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாக்களித்திருக்கலாம் அதனால்தான் வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி காட்சிகளை வெளிவிடாமல் தேர்தல் ஆணையம் அளித்திருக்கிறது.
இதுபோல ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடி மையங்களில் இலட்சக்கணக்கான போலி வாக்குகள் பதிவாகி இருக்கிறது. ஒரே நபர்கள் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு வயதுகளின் வெவ்வேறு அடையாள அட்டைகளை வெவ்வேறு முகவரிகளில் இருந்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக ராகுல் காந்தி வெளியிட்டார்
- மஹாகாலேஷ்வர் கோவிலில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
- ஏராளமான மக்கள் கடவுளிடம் வருகிறார்கள். அவர் ஒவ்வொரு முறையும் அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்கிறார்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள ஸ்ரீ மஹாகாலேஷ்வர் கோவிலில் நடந்த பஸ்ம ஆரத்தியில் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மஹாகாலேஷ்வர் கோவிலில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன். இது ஒரு அழகான ஆன்மீக இடம். ஏராளமான மக்கள் கடவுளிடம் வருகிறார்கள். அவர் ஒவ்வொரு முறையும் அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்கிறார். இது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.
உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள். இது பெண்கள் சக்தி! கோ கேர்ள்ஸ்!
இவ்வாறு அவர் கூறினார்.
- வாக்கு திருட்டில் பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
- 'THE H FILES' என்ற தலைப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி
கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டது என்பதை ராகுல் காந்தி ஆதாரங்களுடன் வெளியிட்டார்.
அப்போது, வாக்கு திருட்டு புகாரில் ஆதாரங்கள் உள்ளது. யதார்த்த நிலையை முற்றிலும் அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்த போகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி வாக்குத் திருட்டு பற்றிய ஹைட்ரஜன் குண்டை இன்று வெளியிடுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். .
இது தொடர்பாக 'THE H FILES' என்ற தலைப்பில் இன்று பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர், "தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஹரியானாவில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என்று கூறின. ஹரியானாவின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, அஞ்சல் வாக்குகள் உண்மையான வாக்குகளிலிருந்து வேறுபட்டிருந்தன என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்பு ஹரியானாவில் இது நடந்ததில்லை.
நீங்கள் பார்க்கப் போகும் இந்தத் தகவலை நான் முதன்முதலில் பார்த்தபோது, அதை நம்ப முடியாமல் அதிர்ச்சி அடைந்தேன். இந்த தகவல்களை நான் பலமுறை சரிபார்த்தேன்.
ஹரியானாவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை இரண்டு கோடி. அதில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்ட வாக்குகள் ஆகும். அதாவது எட்டு வாக்காளர்களில் ஒரு வாக்காளர் போலி வாக்காளராக இருந்திருக்கிறார்
5 லட்சத்து 21 ஆயிரத்து 619 போலி வாக்காளர்கள் 93 ஆயிரத்து 174 வாக்குகள் போலியான முகவரியை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது
பாஜக நிர்வாகியான உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரகலாத் என்பவர் மதுரா தொகுதியில் வாக்களித்திருக்கிறார் பிறகு ஹரியானாவின் நோத்தல் சட்டமன்ற தொகுதியிலும் வாக்களித்திருக்கிறார்
பாஜகவின் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் தலைவர்கள் ஹரியானாவிலும் வாக்களித்திருக்கிறார்கள் உத்தரபிரதேசத்திலும் வாக்களித்திருக்கிறார்கள் எனக் கூறி அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்டு குற்றம் சாட்டினார்.
- நேற்று சரக்கு ரெயில் பின்புறத்தில் பயணிகள் ரெயில் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர்.
- உத்தரபிரதேச மாநிலம் மிர்சாப்பூர் மாவட்டத்தில் மற்றொரு கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று சரக்கு ரெயில் பின்புறத்தில் பயணிகள் ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.
அந்த கோர விபத்தின் தாக்கம் மறைவதற்குள் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு உத்தரபிரதேச மாநிலம் மிர்சாப்பூர் மாவட்டத்தில் மற்றொரு கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
மிர்ஷாப்பூர் மாவட்டத்தில் உள்ள சனார் ஜங்ஷன் பகுதியில் இன்று காலை 9 மணிக்கு பயணிகள் ரெயில் ஒன்று 4-வது நடைமேடை பகுதியில் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் 3-வது நடைமேடையை கடந்து சென்று கொண்டி ருந்தனர்.
பயணிகளில் மற்றொரு பிரிவினர் தண்டவாளத்தை கடந்து அடுத்த பக்கம் செல்வதற்கு நடந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் எதிர் திசையில் இருந்து மிக வேகமாக ஹவுரா செல்லும் நேதாஜி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.
ரெயில் மிக அருகில் வந்த போதுதான் பயணிகள் கவனித்து அலறினார்கள். 4-வது நடைமேடைக்கும், 3-வது நடைமேடைக்கும் இடையில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். அதற்குள் நேதாஜி எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்தனர். அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சனார் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்லக்கூடிய ரெயில் ஆகும். இதனால் அந்த ரெயில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.
ரெயில் மோதிய வேகத்தில் 3 பயணிகளின் உடல்கள் கடுமையாக சிதறி போனது. பலியான 6 பயணிகளும் இன்று பவுணர்மி தினத்தை முன்னிட்டு வாரணாசியில் புனித நீராடி சிவனை வழிபடுவதற்காக சென்று கொண்டிருந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
6 பேர் பலியானது குறித்து தகவல் அறிந்ததும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடும் அதிர்ச்சி தெரிவித்தார். பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள அவர் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.
சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.






