உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை - பிரியங்கா காந்தி

பிளஸ் 2 படித்து முடித்த பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர், 10 லட்சம் பேருக்கு அரசு வேலை, மின் கட்டணம் குறைப்பு, நெல்-கோதுமை கொள்முதல் விலை உயர்வு என பல வாக்குறுதிகளை பிரியங்கா காந்தி வழங்கி உள்ளார்.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
Published on

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

இங்கு மீண்டும் செல்வாக்கை பெற காங்கிரஸ் முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அவர் உத்தரபிரதேசத்தில் முகாமிட்டு தேர்தல் பிரசாரங்களை முடுக்கிவிட்டு வருகிறார். மேலும் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா சில வாக்குறுதிகளையும் வழங்கி உள்ளார்.

மாணவிகளுக்கு செல்போன், பிளஸ் 2 படித்து முடித்த பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர், 10 லட்சம் பேருக்கு அரசு வேலை, மின் கட்டணம் குறைப்பு, நெல்-கோதுமை கொள்முதல் விலை உயர்வு என பல வாக்குறுதிகளை வழங்கி உள்ளார்.

இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் ஒரு வாக்குறுதியையும் அவர் வெளியிட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் எந்த நோயாக இருந்தாலும் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கப்படும் என்று கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறும் போது, ‘உத்தரபிரதேசத்தில் சுகாதார நடவடிக்கைகள் சரி இல்லாததால் சுகாதாரம் ரீதியாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கொரோனா காலத்திலும் மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்கு அரசு நிவாரணங்கள் கிடைக்கவில்லை. எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சைகளை அளிப்போம்’ என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com