search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா சீனா பேச்சுவார்த்தை
    X
    இந்தியா சீனா பேச்சுவார்த்தை

    லடாக்கில் இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை 16 மணி நேரம் நீடித்தது

    லடாக்கில் இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தை 16 மணி நேரம் நீடித்துள்ளது.
    புதுடெல்லி:

    லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த மே மாதம் அத்துமீறிய சீன ராணுவத்தால் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் ஜூன் மாதத்தில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

    இதனால் இந்தியாவும், சீனாவும் தலா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை எல்லையில் குவித்ததால் பதற்றம் நீடித்தது. எனவே படைகளை திரும்பப்பெற்று பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன.

    இதன் பலனாக கடந்த 10-ம் தேதி முதல் கிழக்கு லடாக்கில் படை விலக்கல் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக அங்குள்ள பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைப்பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை இரு தரப்பும் மேற்கொண்டன.

    இதைத்தொடர்ந்து படை விலக்கல் நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே நேற்று முன்தினம் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. லடாக் மோதலுக்கு பின்னர் நடைபெற்ற இந்த 10-வது சுற்று பேச்சுவார்த்தை 16 மணி நேரம் நீடித்துள்ளது.

    அதாவது கிழக்கு லடாக்கில் அமைந்துள்ள சீன எல்லைப் பகுதியான மோல்டோவில் நேற்று முன்தினம் காலை சுமார் 10 மணியளவில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை நேற்று அதிகாலை 2 மணி வரை நீடித்தது.

    இந்த பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் லேயை மையமாக கொண்டு செயல்படும் 14-வது படைப்பிரிவின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன் தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்னும் அதிகாரபூர்வ செய்திகள் வெளியாகவில்லை. எனினும், பங்கோங்சோ ஏரிக்கரைகளுக்கு அப்பால் படைவிலக்கல் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்து இருதரப்பும் விவாதித்ததாக தெரிகிறது.

    குறிப்பாக, கிழக்கு லடாக்கின் ஹாட்ஸ்பிரிங்ஸ், கோக்ரா மற்றும் தேப்சாங் பகுதிகளில் இருந்து படைகளை விலக்கி அமைதியை ஏற்படுத்துவது குறித்து இந்தியா வலியுறுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
    Next Story
    ×