search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
    X
    பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

    பாராளுமன்ற மக்களவையில் 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 29ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதம் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்ப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இது அவர் தாக்கல் செய்த 3வது பட்ஜெட் ஆகும்.

    முன்னதாக, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இணை மந்திரி அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை குழுவினர் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அவரிடம் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக எடுத்துரைத்தனர். அதன்பின்னர் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இணை மந்திரி அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் பாராளுமன்றத்திற்கு புறப்பட்டனர். முதலில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்தியாவில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது. 

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், நாடு இதுவரை காணாத நீண்ட ஊரடங்கு, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு, தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, பொருளாதார பின்னடைவு மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில், நிலையான பொருளாதார மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் கொள்கை அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

    குறிப்பாக வழக்கம்போல், இந்த ஆண்டும் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா? என்பதுதான் சாமானிய மக்களின் கேள்வியாக இருக்கிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா? என்று தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

    கடைசியாக, 2014-15ம் ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதற்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளில், வருமான வரி செலுத்துவதில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    Next Story
    ×