search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேச்சுவார்த்தை
    X
    பேச்சுவார்த்தை

    திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடக்குமா? -விவசாயிகளுடன் மத்திய அரசு 11வது சுற்று பேச்சுவார்த்தை

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தையை தொடங்கியது.
    புதுடெல்லி:

    டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் முற்றுகை போராட்டம் இன்று 59-வது நாளாக நீடித்து வருகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கத் தலைவர்களுடன் இதுவரை 10 சுற்றுகளாக பேச்சுவார்த்தைகளை நடத்தியும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.  

    விவசாயிகள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றே தீரவேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு இந்த சட்டங்களை வாபஸ் பெற மறுக்கிறது. 

    அதேநேரத்தில் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு தயாராக உள்ளது. இதை ஏற்கமாட்டோம், சட்டத்தை முற்றிலும் விலக்கியே ஆக வேண்டும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். இதன் காரணமாக பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் இழுபறி ஏற்பட்டு வருகிறது. 

    இதற்கிடையே, உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது, வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டு வரை நிறுத்தி வைக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. அதையும் விவசாயிகள் ஏற்கவில்லை. சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்கின்றனர். குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதிலும் உறுதியாக உள்ளனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் மத்திய அரசு இன்று மீண்டும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. இது 11-வது சுற்று பேச்சுவார்த்தை ஆகும். மத்திய மந்திரிகள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். இன்றைய பேச்சுவார்த்தையிலாவது ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
    Next Story
    ×