search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நரேந்திர மோடி
    X
    நரேந்திர மோடி

    உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு மோடி அழைப்பு

    இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் பங்கேற்க வருமாறு உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் ‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தி-முதலீடு 2020’ மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி பயணத்தில் உலகளாவிய முதலீட்டாளர்கள் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

    தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    நாங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறைவேற்ற உள்ளோம். இவை ஆண்டுக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1½ லட்சம் கோடி) வர்த்தகத்தை உருவாக்கும்.

    தற்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் உலக அளவில் 4-வது இடத்தில் இந்தியா உள்ளது. இதில், பிற முக்கிய நாடுகளுடன் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.

    தற்போது நாட்டில் 136 ஜிகாவாட்ஸ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் இது 220 ஜிகாபைட்ஸ் அளவாக அதிகரிக்கும். இந்தியாவின் தற்போதைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியானது நாட்டின் மின்சக்தி உற்பத்தியில் 36 சதவீத பங்களிப்பை செய்கிறது.

    மின்னணு உற்பத்தி துறையில் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, உயர்திறன் கொண்ட சூரிய எரிசக்தி தொகுதிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்துள்ளோம்.

    இந்தியாவில் தொழில் செய்வதை எளிதாக்குவதை உறுதி செய்வதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. முதலீட்டாளர்களுக்கு வசதியாக ஒரு சிறப்பு திட்ட மேம்பாட்டு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த 6 ஆண்டுகளில் நமது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளோம். நமது வருடாந்திர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 2017-ம் ஆண்டில் இருந்து நிலக்கரி அடிப்படையிலான எரிசக்தியை தாண்டி வருகிறது.

    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மலிவாக இல்லாதபோதுகூட இதில் முதலீடுகள் செய்யப்பட்டன. தற்போது முதலீடுகளும், உற்பத்தி அளவும் உற்பத்தி செலவை குறைக்கின்றன.

    கடந்த 6 ஆண்டுகளில் இந்தியா ஈடு இணையற்ற பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

    இந்தியாவின் ஒவ்வொரு குடிமகன்களுக்கும், தங்களுக்கு தேவையான முழுதிறனையும் பெற்றுக்கொள்ள வசதியாக உற்பத்தி திறனை பெருக்கி வருகிறோம்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
    Next Story
    ×