search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசங்கர்
    X
    சிவசங்கர்

    கேரள தங்க கடத்தல் வழக்கு: முதல் மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் கைது

    கேரள தங்க கடத்தல் வழக்கில் சுங்கத்துறை சார்பில் பதியப்பட்டுள்ள வழக்கில் மாநில முதல்மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கடந்த ஜூலை 5-ம் தேதி சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. கடத்தல் தங்கத்தின் அன்றைய மதிப்பு 14.82 கோடி ரூபாய் ஆகும்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், வழக்குடன் தொடர்புடைய தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதேபோல் வழக்கில் தொடர்புடைய முன்னாள் தூதரக ஊழியர் சந்தீப் நாயர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த வழக்குகள் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்க துறை மற்றும் சுங்க துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். 

    இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அரசின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கருக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, முதன்மை செயலாளர் பதவியில் இருந்து சிவசங்கர் நீக்கப்பட்டார்.

    இதையடுத்து, அவர் மீது அமலாக்கத்துறை, சுங்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. அதில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு சிவசங்கர் நீதிமன்ற காவலில் இருந்து வந்தார். அவருக்கு நீதிமன்ற காவல் 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இதற்கிடையில், தங்க கடத்தல் வழக்கில் சிவசங்கரை கைது செய்ய செய்ய சுங்கத்துறைக்கு கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் (பொருளாதார குற்றங்கள்) நேற்று அனுமதி அளித்திருந்தது.

    இந்நிலையில், நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள சிவசங்கரை இன்று சுங்கத்துறை கைது செய்துள்ளது.

    கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கரை 10 நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சுங்கத்துறை சார்பில் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (பொருளாதார குற்றங்கள்) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×