என் மலர்
நீங்கள் தேடியது "Kerala gold smuggling"
- யாரோ தயாரித்து கொடுத்த உரையை ஸ்வப்னா படித்துள்ளார்.
- விஜேஸ்பிள்ளையும், ஸ்வப்னாவின் குற்றச்சாட்டை மறுத்தார்.
திருவனந்தபுரம்:
வளைகுடா நாட்டில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு தங்கம் கடத்தி வரப்பட்டது.
இந்த வழக்கில் கேரளாவில் தகவல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக இருந்த ஸ்வப்னா கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் இருக்கும் ஸ்வப்னா சமீபத்தில் தனது முகநூலில் பேட்டி அளித்தார்.
அதில் தங்க கடத்தல் ஆதாரங்களை அளித்தால் தனக்கு ரூ.30 கோடி பணம் தருவதாக விஜேஸ் பிள்ளை என்பவர் தெரிவித்ததாக கூறியிருந்தார். விஜேஸ் பிள்ளையை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கோவிந்தன் அனுப்பியதாகவும் கூறியிருந்தார்.
ஸ்வப்னாவின் குற்றச்சாட்டை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கோவிந்தன் மறுத்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
யாரோ தயாரித்து கொடுத்த உரையை ஸ்வப்னா படித்துள்ளார். இதன் பின்னணியில் அரசியல் சதி உள்ளது என்பது எங்களுக்கு தெரியும். எனவே இந்த குற்றச்சாட்டை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்.
விஜேஸ் பிள்ளை யார் என்றே தெரியாது. இங்கு பிள்ளை என்று யாரும் இல்லை, எனக் கூறினார். இதுபோல விஜேஸ்பிள்ளையும், ஸ்வப்னாவின் குற்றச்சாட்டை மறுத்தார். மேலும் கோவிந்தனை தனக்கு தெரியாது எனவும் கூறினார்.
கோவிந்தன் மற்றும் விஜேஸ் பிள்ளை இருவரும் ஸ்வப்னாவின் குற்றச்சாட்டை மறுத்து இருப்பது குறித்து ஸ்வப்னா கூறியதாவது:-
நான் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மை. இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் விசாரணை அமைப்புகளுக்கும், கோர்ட்டுக்கும் அனுப்பி விட்டேன். அவர்களின் விசாரணையில் உண்மை தெரியவரும் என்றார்.
- தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி பங்கு குறைந்து கொண்டே போகிறது.
- சுமார் ரூ.25 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி :
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் நிதித்துறை செயலாளரை சந்தித்து பேசினார். இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
கடந்த முறை நான் டெல்லி வந்தபோது வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து வெளிநாட்டு முதலீடுகள் பற்றி பேசினேன். அவர் அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்திய தூதராக இருந்துள்ளார். உலக பொருளா தாரத்தின் கவனம் இந்தியா மீது இருக்கும் சூழ்நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதில் மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது. அது தொடர்பாக அவரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தேன். அவற்றை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் இந்த ஆட்சி தொடங்கும்போது நிதி நிலைமை கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருந்தது. அதை படிப்படியாக சரிசெய்து, கடந்த ஆண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையையும், நிதி பற்றாக்குறையையும் குறைத்தோம். இந்த ஆண்டும் அந்த செயல்பாடு தொடர்கிறது.
மத்திய அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாநிலங்களின் கடன் வாங்கும் உச்ச வரம்புக்கும், தற்போதைய புதிய அறிவிப்புக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த கடன் வாங்கும் உச்ச வரம்பு அளவுக்கு தமிழகம் கடன் வாங்க போவதில்லை. அதைப்போல தமிழ்நாடு பட்ஜெட்டுக்காக கூடுதல் நிதி கேட்டும் கோரிக்கை வைக்கவில்லை.
கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு நிதிக்குழு காலத்திலும் தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி பங்கு குறைந்து கொண்டே போகிறது. மத்திய அரசின் பங்களிப்பு 4 சதவீதம் வரை இருந்தது. தற்போது 3 சதவீதத்துக்கு கீழே குறைந்துள்ளது. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு நாட்டின் தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நடந்ததால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சுங்கத்துறை, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தின.
திருவனந்தபுரம்:
துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந்தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. அதில் ரூ.14.82 கோடி மதிப்புள்ள சுமார் 30.245 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. ஒரு நாட்டின் தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நடந்ததால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அப்போதைய அமீரக தூதரக துணைத்தூதரின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த ஸ்வப்னா சுரேஷ், தூதரக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித்குமார், ஸ்வப்னா சுரேசுக்கு ஆதரவாக செயல்பட்ட முதல்-மந்திரியின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 5-1-2021 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சுங்கத்துறை, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தின.
இது தொடர்பான வழக்கு தற்போது எர்ணாகுளம் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தங்க கடத்தலில் நேரடியாக ஈடுபட்டதாக ஸ்வப்னா சுரேஷ், எஸ் சரித், சந்தீப் நாயர், ரமீஸ் ஆகியோருக்கு தலா ரூ.6 கோடி வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கு ரூ.50 லட்சம் என தங்கம் கடத்தலில் தொடர்புடைய 44 பேருக்கும் மொத்தம் ரூ.66.65 கோடி அபராதம் செலுத்த மத்திய சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு கமிஷனர் நோட்டீசு அனுப்பி உள்ளார்.
- வேலை கேட்டு இவர்களிடம் செல்லும் ஏழை பெண்களை தங்களது பாலியல் பசிக்காக படுக்கை அறைக்கு அழைப்பார்கள்.
- போலீசாரும், குற்றபுலனாய்வு துறை அதிகாரிகளும் முன்னாள் மந்திரி, முன்னாள் சபாநாயகரிடம் தீவிர விசாரணை நடந்த வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர் சுவப்னா சுரேஷ். கேரள முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருடன் நெருக்கமாக இருந்து இதுபோன்ற கடத்தலை சர்வ சாதாரணமாக அரங்கேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சமீபத்தில் அவர் ஜாமீனில் வந்த பிறகு முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் மீதும் பல புகார்களை தெரிவித்தார்.
மேலும் தனது சுயசரிதை புத்தகத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர், முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் மற்றும் முன்னாள் மந்திரிகள் குறித்தும், தங்கம் கடத்தல் உள்பட சட்ட விரோத செயல்களில் அவர்களுடைய தொடர்பு குறித்தும் பல தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த புத்தகம் வெளியான முதல் நாளிலேயே அனைத்து பிரதிகளும் விற்று தீர்ந்த நிலையில், புத்தகத்தின் 2-ம் பதிப்பை வெளியிட தயாராகி வருவதாக சுவப்னா சுரேஷ் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் மலையாள செய்தி சேனல் ஒன்றுக்கு சுவப்னா சுரேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முன்னாள் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் மற்றும் முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராம கிருஷ்ணன் ஆகிய இருவரும் பெண்பித்தர்கள்.
வேலை கேட்டு இவர்களிடம் செல்லும் ஏழை பெண்களை தங்களது பாலியல் பசிக்காக படுக்கை அறைக்கு அழைப்பார்கள். நான் ஒரு உயர்ந்த பதவியில் இருப்பது தெரிந்தும், என்னையும் படுக்கை அறைக்கு அழைத்தனர். அப்படியென்றால் சாதாரண பெண்களின் நிலையை சிந்தித்து பார்க்க வேண்டும்.
உயர் பதவியில் இருந்து கொண்டு இதுபோன்ற இழிவான செயல்களில் இவர்களால் எப்படி ஈடுபட முடிகிறது. போலீசாரும், குற்றபுலனாய்வு துறை அதிகாரிகளும் முன்னாள் மந்திரி, முன்னாள் சபாநாயகரிடம் தீவிர விசாரணை நடந்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தங்கம் கடத்தல் வழக்கில் ரகசிய வாக்குமூலத்தின் நகலை பெற சரிதா நாயருக்கு என்ன தேவை, அவசியம் உள்ளது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
- ஸ்வப்னா சுரேசுக்கும், சரிதா நாயருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
பெரும்பாவூர்:
தங்கம் கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர், முன்னாள் மந்திரி கே.டி.ஜலீல், அதிகாரிகள் மீது ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அவர் எர்ணாகுளம் கோர்ட்டில் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக ரகசிய வாக்குமூலம் அளித்தார். வழக்கில் முதல்-மந்திரிக்கு தொடர்பு இருப்பதாக கூறி பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் சூரிய மின்தகடு ஊழல் வழக்கில் சிக்கிய சரிதா நாயர், தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் அளித்த ரகசிய வாக்குமூலத்தின் நகல்களை தர வேண்டும் என்று எர்ணாகுளம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த வழக்கில் ஸ்வப்னா சுரேசுக்கும், சரிதா நாயருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதையடுத்து ரகசிய வாக்குமூலத்தில் தன்னை குறித்தும் சில கருத்துகளை ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்டு இருக்கக்கூடும் என்று கருதிய சரிதா நாயர் மீண்டும் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட்டு தனி அமர்வு நீதிபதி ஷாஜி பி.சாலி விசாரித்தார். தங்கம் கடத்தல் வழக்கில் ரகசிய வாக்குமூலத்தின் நகலை பெற சரிதா நாயருக்கு என்ன தேவை, அவசியம் உள்ளது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும் வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத அவர் எப்படி, இந்த வாக்குமூலத்தை கோர முடியும் என்று கேட்டார். பின்னர் அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
- கேரளா மார்க்சிஸ்ட் எம்எல்ஏ கே.டி.ஜலீல் மீது ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டு.
- எந்த நிலைக்கும் இறங்க முடியும் என்று அவர் நினைக்கிறார்.
திருவனந்தபுரம்:
கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மத்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை இந்த வழக்கை விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் ஜாமினில் விடுதலையான ஸ்வப்னா சுரேஷ், நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இதில் தொடர்பு இருப்பாக கூறியிருந்தார். மேலும் முன்னாள் அமைச்சர் ஜலீல் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் ஆகியோர் மீதும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று பேட்டி அளித்த ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளதாவது:
இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழித்து விட்டனர். கேரள முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கே.டி.ஜலீல் மீதான எந்த குற்றச்சாட்டுகளையும் அவரால் மறுக்க முடியாது. இது குறித்து ஆதாரத்துடன் எனது வாக்குமூலத்தில் சேர்த்துள்ளேன். அவர்தான் தற்போது இந்த ஆதாரங்களை அழிக்க நினைக்கிறார்.
எந்த நிலைக்கும் இறங்க முடியும் என்று அவர் நினைக்கிறார். எம்.எல்.ஏவாக அவர் எதையும் செய்ய முடியும், ஒரு நாளிதழையோ அல்லது பத்திரிகையையோ அல்லது என்னைப் போன்ற ஒரு பெண்ணையோ தாக்க முடியும்.
சிலவற்றை என்னால் வெளிப்படுத்த முடியாது, ஏனென்றால் இது வழக்கின் ஒரு பகுதி, அது விசாரணையில் உள்ளது. எனவே உண்மையை கூற முடியாமல் திணறுகிறேன். என்னுடைய ஆதாரங்களை அவர்கள் அழித்தாலும் அவற்றை மீண்டும் சேகரிக்க நான் முயன்று வருகிறேன். இந்த வழக்கில் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும்.
- நுபுர் சர்மா விவகாரத்தில் வளைகுடா நாடுகளுடன் எந்த முரண்பாடும், அதிருப்தியும் இல்லை.
பெரும்பாவூர் :
திருவனந்தபுரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
இலங்கையில் அதிபரை பதவி விலகக்கோரி மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இது தீவிரம் அடைந்து உள்ளது. இதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். விரைவில் அங்கு நிலையான அரசு அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.
கேரள தங்க கடத்தல் வழக்கு விசாரணையின் முடிவில், உண்மை நிச்சயம் வெளிவரும். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரசு அமீரக தூதரத்துடன் நடந்த இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் அனைத்தும், மத்திய வெளியுறவுத்துறைக்கு கிடைத்துள்ளது. இதில் நடக்கக்கூடாது சில சம்பவங்களும் நடந்து உள்ளது. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அதுபற்றி கூடுதலாக பேச விரும்பவில்லை.
நுபுர் சர்மா விவகாரத்தில் வளைகுடா நாடுகளுடன் எந்த முரண்பாடும், அதிருப்தியும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- லைப்மிஷன் ஊழல் வழக்கு தொடர்பாக ஏற்கனவே பலரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. இப்போதுதான் முதல் முறையாக ஸ்வப்னாவை விசாரிக்க நோட்டீசு அனுப்பி உள்ளது.
- இதிலும் ஸ்வப்னா அளிக்கும் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் ஸ்வப்னா.
இவர் சமீபத்தில் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தங்க கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பாக கூறியிருந்தார்.
பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு இருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இதனை வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தினர். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே பினராயி விஜயனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஸ்வப்னா குற்றம் சாட்டினார். மேலும் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திலும் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் கேரளாவில் நடந்த லைப்மிஷன் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. மீண்டும் தொடங்க உள்ளது.
இந்த ஊழல் வழக்கிலும் ஸ்வப்னாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக வருகிற 11-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஸ்வப்னாவுக்கு சி.பி.ஐ. நோட்டீசு அனுப்பி உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பலரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. இப்போதுதான் முதல் முறையாக ஸ்வப்னாவை விசாரிக்க நோட்டீசு அனுப்பி உள்ளது. இதிலும் ஸ்வப்னா அளிக்கும் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
- ஸ்வப்னா சுரேசின் ரகசிய வாக்குமூலத்தால் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு வருகிறது.
- ஸ்வப்னா சுரேஷ் ரகசிய வாக்குமூலத்தின் நகலை தரக்கோரி அமலாக்க பிரிவு அதிகாரிகள் கோர்ட்டில் கேட்டிருந்தனர்.
பெரும்பாவூர்:
தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் சமீபத்தில் கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தங்கம் கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது மனைவி, மகள் மற்றும் அமைச்சர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட பலருக்கு தொடர்பு உள்ளதாக பகீர் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்வப்னா சுரேசின் ரகசிய வாக்குமூலத்தால் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே கொச்சியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஸ்வப்னா சுரேசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு பதிவு செய்துகொண்டனர். மேலும் தங்கம் கடத்தல் வழக்கு, டாலர் கடத்தல், கூட்டு சதி ஆகிய 3 வழக்குகள் குறித்து ஸ்வப்னா சுரேசிடம் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் விசாரணையில் தன்னை கைது செய்யக்கூடும் என்று கருதி ஸ்வப்னா சுரேஷ் கேரள ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று ஐகோர்ட்டு விசாரணைக்கு எடுக்கவில்லை. வருகிற 1-ந் தேதி முன் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே ஸ்வப்னா சுரேஷ் ரகசிய வாக்குமூலத்தின் நகலை தரக்கோரி அமலாக்க பிரிவு அதிகாரிகள் கோர்ட்டில் கேட்டிருந்தனர். வாக்குமூல நகல் வழங்க இயலாது என கோர்ட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. கூட்டு சதி வழக்கு குறித்த விசாரணைக்கு நேற்று ஆஜராகுமாறு குற்றத்தடுப்பு போலீசார் தெரிவித்து இருந்தனர். ஆனால், உடல்நிலை சரியில்லாததால் ஸ்வப்னா சுரேஷ் ஆஜராகவில்லை.
- கேரள முன்னாள் மந்திரி ஜலீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு ஸ்வப்னா கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
- இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடக்க உள்ளது. இந்த வழக்கில் ஸ்வப்னா மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் 153 மற்றும் 120 பி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சமீபத்தில் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
ஸ்வப்னா அளித்த வாக்குமூலத்தில் தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கூறினார்.
இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஸ்வப்னாவிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது.
அதன்படி கடந்த வாரம் ஸ்வப்னா அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் 11 மணி நேரத்திற்கும் மேல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் நேற்றும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்ற அவரிடம் அதிகாரிகள் சுமார் 5½ மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்றும் அவரிடம் விசாரணை நடக்கிறது.
இந்த நிலையில் கேரள முன்னாள் மந்திரி ஜலீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு ஸ்வப்னா கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடக்க உள்ளது. இந்த வழக்கில் ஸ்வப்னா மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் 153 மற்றும் 120 பி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.
- தங்கம் கடத்தல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என ஸ்வப்னா கோரிக்கை விடுத்து வருகிறார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எர்ணாகுளத்தில் உள்ள செசன்சு கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தங்கம் கடத்தல் சம்பவத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். மேலும் முன்னாள் அமைச்சர் ஜலீல் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் ஆகியோர் மீதும் சில குற்றச்சாட்டுகளை கூறினார்.
இதுதொடர்பாக ரகசிய வாக்குமூலத்தில் தெரிவித்து இருப்பதாகவும் கூறினார். இந்த சம்பவம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.
இந்த நிலையில் எதன் அடிப்படையில் முதல்-மந்திரி மீது ஸ்வப்னா புகார் கூறினார் என்பது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த திட்டமிட்டது. மேலும் அவர் கோர்ட்டில் கொடுத்த ரகசிய வாக்குமூலம் அறிக்கையை அமலாக்கத்துறை பெற்று உள்ளது.
இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக ஸ்வப்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர் இன்று ஆஜராக உள்ளார். அவரிடம் ஏதேனும் புதிய ஆதாரம் உள்ளதா என்பது குறித்தும் சிவசங்கர் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு எழுதிய சுயசரிதை புத்தகத்தில் கூறியுள்ள கருத்துகள் குறித்தும் விளக்கம் கேட்கப்படும் என தெரிகிறது.
இதற்கிடையில் தங்கம் கடத்தல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என ஸ்வப்னா கோரிக்கை விடுத்து வருகிறார்.
- ஸ்வப்னா சுரேஷ் கூறிய குற்றச்சாட்டுக்கு அவரிடம் ஆதாரம் எதுவும் இல்லை என்று சோலார் ஊழல் வழக்கில் கைதான சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
- ஸ்வப்னாவின் 164 பக்க வாக்குமூலத்தின் நகல் கோரி சரிதா தாக்கல் செய்த மனுவை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், தங்கம் கடத்தல் சம்பவத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கூறினார். அவரது இந்த புகாரால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. முதல்-மந்திரி செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக்கொடி காட்டி வருகின்றனர். இதனால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரசார் நடத்திய போராட்டத்தின் போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் பலர் காயம் அடைந்தனர்.
இந்த சூழலில் ஸ்வப்னா சுரேஷ் கூறிய குற்றச்சாட்டுக்கு அவரிடம் ஆதாரம் எதுவும் இல்லை என்று சோலார் ஊழல் வழக்கில் கைதான சரிதா நாயர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் சிறையில் இருந்தபோது, ஸ்வப்னாவும் சிறையில் இருந்தார். அப்போது என்னிடம் பேசிய அவர், இந்த வழக்கில் முதல்-மந்திரியை தேவையில்லாமல் உள்ளே இழுத்துள்ளதாக தெரிவித்தார். அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அவரை யாரோ பின்னால் இருந்து இயக்குகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், ஸ்வப்னாவின் 164 பக்க வாக்குமூலத்தின் நகல் கோரி சரிதா தாக்கல் செய்த மனுவை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதால் அந்த அறிக்கையை விசாரணை நிறுவனத்துடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும் என்று நீதிமன்றம் கூறி உள்ளது.
விசாரணை முடியும் வரை ஸ்வப்னாவின் அறிக்கையை பகிர முடியாது என்று நீதிமன்றம் கூறி உள்ளது. எனினும், ஐகோர்ட்டை அணுகப் போவதாக சரிதாவின் வக்கீல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஸ்வப்னா சுரேஷ் கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு அமலாக்க இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.