கேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்பட 44 பேருக்கு ரூ.66½ கோடி அபராதம்

ஒரு நாட்டின் தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நடந்ததால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சுங்கத்துறை, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தின.
சுவப்னா சுரேஷ் - சிவசங்கர்
சுவப்னா சுரேஷ் - சிவசங்கர்
Published on

திருவனந்தபுரம்:

துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந்தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. அதில் ரூ.14.82 கோடி மதிப்புள்ள சுமார் 30.245 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. ஒரு நாட்டின் தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நடந்ததால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அப்போதைய அமீரக தூதரக துணைத்தூதரின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த ஸ்வப்னா சுரேஷ், தூதரக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித்குமார், ஸ்வப்னா சுரேசுக்கு ஆதரவாக செயல்பட்ட முதல்-மந்திரியின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 5-1-2021 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக சுங்கத்துறை, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தின.

இது தொடர்பான வழக்கு தற்போது எர்ணாகுளம் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தங்க கடத்தலில் நேரடியாக ஈடுபட்டதாக ஸ்வப்னா சுரேஷ், எஸ் சரித், சந்தீப் நாயர், ரமீஸ் ஆகியோருக்கு தலா ரூ.6 கோடி வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கு ரூ.50 லட்சம் என தங்கம் கடத்தலில் தொடர்புடைய 44 பேருக்கும் மொத்தம் ரூ.66.65 கோடி அபராதம் செலுத்த மத்திய சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு கமிஷனர் நோட்டீசு அனுப்பி உள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com