search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    பெங்களூரு அருகே நடுரோட்டில் வாலிபர் வெட்டிக்கொலை

    பெங்களூரு அருகே நடுரோட்டில் தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    பெங்களூரு:

    பெங்களூரு புறநகர் மாவட்டம் அத்திபெலே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெத்தமானஹள்ளி பகுதியை சேர்ந்தவர் வினுத் (வயது 26) . இவர், ஆனேக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் அவர் வழக்கம் போல மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது மர்மநபர்கள் சிலர் வாகனங்களில் வினுத்தை பின்தொடர்ந்து வந்தனர். அத்திபெலே மெயின் ரோட்டில் வைத்து வினுத்தின் மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் சுற்றி வளைத்தனர்.

    பின்னர் நடுரோட்டில் வைத்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வினுத்தை சரமாரியாக தாக்கினார்கள். இதில், பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். உடனே அங்கிருந்து மர்மநபர்கள் சென்று விட்டனர். உயிருக்கு போராடிய வினுத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்து விட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அத்திபெலே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு பெங்களூரு புறநகர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி கணேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று வினுத் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது வினுத்தை 4-க்கும் மேற்பட்ட மர்மநபர்கள், அவரது மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து வந்து கொலை செய்தது தெரியவந்தது. அதே நேரத்தில் வினுத்திற்கு ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரிந்தது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தான் அவரை பழிக்குப்பழியாக கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இருப்பினும் வினுத் கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து அத்திபெலே போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். நடுரோட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் அத்திபெலேயில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×