search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங்
    X
    பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங்

    வேளாண்மையில் சுயசார்புக்கு வலுவான அடித்தளம் -மசோதா நிறைவேற்றம் குறித்து ராஜ்நாத் சிங் கருத்து

    மாநிலங்களவையில் இன்று 2 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம் வேளாண்மையில் சுயசார்புக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) மசோதா, விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய அந்த மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவைக்கு வந்தன. 

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) மசோதா, விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

    மசோதாக்கள் மீது விவாதத்திற்கு பிறகு, வேளாண் மந்திரியின் பதிலுரையின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் இரண்டு மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

    இதுபற்றி பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    மாநிலங்களவையில் இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம், வேளாண்மையில் சுயசார்புக்கு வலுவான அடித்தளத்தை இந்தியா உறுதிப்படுத்தி உள்ளது. இது, பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் முடிவற்ற அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான நடவடிக்கைகளுக்கு கிடைத்த பலன் ஆகும்.

    இந்த இரு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த நாள் உண்மையில் இந்திய விவசாயத்திற்கு ஒரு முக்கியமான நாள். இந்திய விவசாயத்தின் உண்மையான திறனை வெளிக்கொண்டு வருவது தொடர்பான இந்த முயற்சிக்காக பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    மசோதாக்களின் அனைத்து அம்சங்களையும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தெளிவுடனும் உறுதியுடனும் விளக்கிய வேளாண் மந்திரிக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.
    Next Story
    ×