search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த காட்சி
    X
    கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த காட்சி

    சுஷாந்த் சிங் மரண வழக்கு- காதலி ரியாவின் சகோதரர் ஷோயிக், சாமுவேல் மிராண்டாவுக்கு விசாரணைக் காவல்

    நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட ரியாவின் சகோதரர் மற்றும் சாமுவேல் மிராண்டா ஆகியோர் என்சிபி விசாரணை காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
    மும்பை:

    இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பண மோசடியில் ஈடுபட்டதாக அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. போதைப்பொருள் கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

    ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் (என்சிபி) ரியா மீது வழக்குப்பதிவு செய்தனர். ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது சுஷாந்த் சிங் வீட்டில் ஹவுஸ்கீப்பிங் மேனேஜராக பணியாற்றிய சாமுவேல் மிராண்டா ஆகியோரின் வீடுகளில் நேற்று போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். 

    ரியாவின் சகோதரர் ஷோயிக் சக்கரபோர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா ஆகியோரை விசாரணைக்கு பிறகு கைது செய்தனர். சுஷாந்தின் மற்றொரு ஊழியரான திபேஷ் சாவந்திடம் நேற்று இரவு தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவர் இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருப்பதால் அவர் கைது செய்யப்படவில்லை என போதைப்பொருள் தடுப்பு  அமைப்பின் துணை இயக்குனர் தெரிவித்தார்.

    இந்நிலையில் சுஷாந்த் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட  ஷோயிக் சக்கரபோர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா இருவரும் இன்று மும்பை எஸ்பிளனேடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களிடம் மேலும் பல்வேறு தகவல்களை பெற வேண்டியிருப்பதால் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி என்சிபி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் 9ம் தேதி வரை என்சிபி காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    முன்னதாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சோயிக் சக்கரபோர்த்தி, சாமுவேல் மிராண்டா, ஜாயிக், கைசன் இப்ராகிம் ஆகியோருக்கு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
    Next Story
    ×