search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே கப்பல் மூலம் மும்பையில் இருந்து ராய்காட் சென்ற போது எடுத்தபடம். அருகில் ஆதித்ய தாக்கரே உள்ளார்.
    X
    உத்தவ் தாக்கரே கப்பல் மூலம் மும்பையில் இருந்து ராய்காட் சென்ற போது எடுத்தபடம். அருகில் ஆதித்ய தாக்கரே உள்ளார்.

    ‘நிசர்கா’ புயல் பாதித்த ராய்காட் மாவட்டத்துக்கு ரூ.100 கோடி நிவாரணம்: உத்தவ் தாக்கரே அறிவிப்பு

    நிசர்கா புயலால் பாதிக்கப்பட்ட ராய்காட் மாவட்டத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது முதல்கட்ட நிவாரண நிதியாக ரூ.100 கோடியை அறிவித்தார்.
    மும்பை :

    அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த நிசர்கா புயல் கடந்த புதன்கிழமை ராய்காட் மாவட்டம் அலிபாக் அருகே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இந்த புயலில் பெரும் சேதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட மும்பை லேசான பாதிப்புடன் தப்பியது. தானே, பால்கர், சிந்துதுர்க், ரத்னகிரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களும், புனேயிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் சேதம் ஏற்பட்டது.

    ஆனால் ராய்காட் மாவட்டத்தில் நிசர்கா புயல் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டது. வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இந்த மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் விழுந்ததாக முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்தது.

    இந்தநிலையில், நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மும்பையில் இருந்து கப்பல் மூலம் ராய்காட் மாவட்டத்திற்கு சென்று புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார்.அவரது மகனும், மந்திரியுமான ஆதித்ய தாக்கரே உடன் சென்றார்.

    அலிபாக் சென்ற உத்தவ் தாக்கரே புயல் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார். மாவட்ட பொறுப்பு மந்திரி அதிதி தட்கரே மற்றும் மாவட்ட கலெக்டர் நிதி சவுத் ஆகியோர் மாவட்டத்தின் புயலுக்கு பிந்தைய நிலைமை குறித்து முதல்-மந்திரியிடம் விளக்கம் அளித்தனர்.

    பின்னர் இதுகுறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் கூறியதாவது:-

    புயலால் பாதிக்கப்பட்டு உள்ளராய்காட் மாவட்டத்திற்கு முதல்கட்ட அவசர நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படுகிறது. இது ஒரு ஆரம்பம் தான். சிறப்பு தொகுப்பாக கருதக்கூடாது. மழை காரணமாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த சமயத்தில் மழை தொடர்பான நோய்களையும் தடுக்க வேண்டும். யாரையும் சிக்கலில் விடமாட்டோம். இங்கு மின்சாரம், தொலைத்தொடர்பு மற்றும் வீடுகளை சரி செய்து இயல்புநிலையை மீட்டெடுக்க முன்னுரிமைகொடுக்கப்படும்.பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்ட சேத விவரத்தை புகைப்படம் எடுத்து சேத கணக்கெடுக்க வரும் களப்பணியாளர்களிடம் கொடுக்கலாம். இன்னும் ஒரு வாரத்தில் கணக்கெடுப்பு பணி நிறைவு பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அலிபாக் அருகே மின்மாற்றி சரிந்து விழுந்து உயிரிழந்த தசரத் வாக்மாரே (வயது 58) குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சத்துக்கான காசோலையை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வழங்கினார்.

    புனே மாவட்டத்தில் சேதமடைந்த பகுதிகளை துணை முதல்-மந்திரி அஜித்பவார் நேரில் சென்று பார்வையிட்டார்.

    மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கினார்.
    Next Story
    ×