search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெட்டுக்கிளிகள்
    X
    வெட்டுக்கிளிகள்

    மகாராஷ்டிராவிற்குள் கொத்து, கொத்தாக படையெடுத்த வெட்டுக்கிளிகள்

    மகாராஷ்டிராவிற்குள் கொத்து, கொத்தாக படையெடுத்த வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
    மும்பை :

    உழவனுக்கு நண்பனாக திகழும் பூச்சி, புழு இனங்கள் உண்டு. ஆனால் வெட்டுக்கிழி விவசாயிகளின் வாழ்வுக்கு வேட்டு வைக்கிறது. இவை கூட்டமாக படையெடுத்து மின்னல் வேகத்தில் பயிர்களை தாக்கி அழித்து விடும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினை மட்டுமின்றி, மக்களுக்கு உணவு பஞ்சத்தையும் ஏற்படுத்தி விடுகிறது, இந்த அபாயகரமான வெட்டுக்கிளிகள்.

    பல்வேறு நாடுகள் இந்த பூச்சியினத்தால் பெரிதளவு பாதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் சமீப நாட்களாக பயிர்களை தின்று சேதம் விளைவித்த வெட்டுக்கிளிகள் மகாராஷ்டிரா மாநிலத்துக்குள்ளும் புகுந்து விட்டன.

    கடந்த சனிக்கிழமை இரவு விதர்பா பகுதியில் உள்ள நாக்பூர் மாவட்டத்தின் கட்டோலி தாலுகாவில் உள்ள பெட்ரி, கன்காவ் மற்றும் வார்தா மாவட்டத்தின் அஸ்தி தாலுகாவில் வெட்டுக்கிளிகள் ஆரஞ்சு பயிர் மற்றும் காய்கறி பயிர்களை சேதப்படுத்தின. பின்னர் திங்கட்கிழமை இரவு பர்சோனி தாலுகா நோக்கி படையெடுத்தன.

    இந்தநிலையில், நேற்றுமுன்தினம் பண்டாரா மாவட்டத்துக்குள் அவை புகுந்து விட்டன. அங்குள்ள மொஹாடி தாலுகா மற்றும் தும்சர் தாலுகாவில் உள்ள தேமானி கிராமத்தில் தென்பட்டன. இங்கு நேற்று அதிகாலை தேமனி கிராமத்தில் ஒரு கி.மீ. சுற்றளவில் உள்ள மரங்களில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் கொத்து, கொத்தாக அமர்ந்து இருந்தன. இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் பூச்சி கொல்லி மருந்து அடிக்கப்பட்டன. இதில் பல வெட்டுக்கிளிகள் செத்து கீழே விழுந்தன. மரங்களின் இலைகளை நாசப்படுத்திய இந்த கொடிய பூச்சிகள், பழங்களை சேதப்படுத்தவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து இங்கு வெட்டுக்கிளிகள் படைபெயடுத்து உள்ளதாக பண்டாரா மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    கோண்டியா மாவட்டத்தை நோக்கி தற்போது இவை முன்னேறி செல்வதாகவும், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

    இதற்கிடையே மும்பையை அடுத்த பால்கர் மாவட்டத்துக்குள் வெட்டுக்கிளிகள் நுழைவதை உன்னிப்பாக கவனித்து அதனை விரட்ட தயாராக இருக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் வேளாண் அதிகாரிகளை மாவட்ட கலெக்டர் கைலாஷ் ஷிண்டே அறிவுறுத்தி உள்ளார். குஜராத்தில் இருந்து அதன் எல்லையில் உள்ள தலசாரி, தகானு, ஜாவ்கர் ஆகிய தாலுகாக்களில் வெட்டுக்கிளிகள் நுழைய வாய்ப்பு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    வேளாண் அதிகாரி பேட்டி

    இதுகுறித்து வேளாண்துறை இணை இயக்குனர் ரவி போஸ்லே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாங்கள் வெட்டுக்கிளிகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். மேலும் அவற்றை வயல்களில் இருந்து விரட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கான வெட்டுக்கிளி கட்டுப்பாடு ஆபரேஷன் என்ற திட்டத்தை தொடங்கி உள்ளோம். இதன்படி தீயணைப்பு படை உதவியுடனும், அதிக ஒளி தரும் விளக்குகள் மூலமும், பூச்சிகொல்லி மருந்துகளை தெளிப்பதன் மூலம் வெட்டுக்கிளிகளை விரட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×