search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரூக் அப்துல்லா
    X
    பரூக் அப்துல்லா

    காஷ்மீர்: பரூக் அப்துல்லாவின் வீட்டுக் காவல் ரத்து

    பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வைக்கப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக் காவல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை பறிக்கும் வகையில் கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் உருவாக்கப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தும் பறிக்கப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
     
    இதை எதிர்த்து காஷ்மீரில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் பிரிவினைவாத குழுக்களின் தலைவர்களும் போராட்டத்தில் குதித்தனர். பொதுமக்களும் மிகப்பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் பரவலாக ஈடுபட்டனர்.

    பரூக் அப்துல்லாவின் இல்லம்

    போராட்டங்கள் மேலும் பரவாத வகையில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணையதளங்களுக்கான இணைப்புகள் மற்றும் கைபேசி இணைப்புகளும் சில மாதங்கள் முடக்கி வைக்கப்பட்டது.

    காஷ்மீரின் முக்கிய தலைவர்கள் பலர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், காஷ்மீரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சிகள் சமீபத்தில் வலியுறுத்தின.

    இதுதொடர்பாக, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மத்திய முன்னாள் மந்திரிகள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி எம்.பி. மனோஜ் ஜா உள்ளிட்ட தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகள் மோடி தலைமையிலான ஆட்சியின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளால் நசுக்கப்படுகின்றன.

    காஷ்மீரில் கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். குறிப்பாக, முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில், பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வைக்கப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக் காவல் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஜம்மு-காஷ்மீருக்கான உள்துறை செயலாளர் ஷலீன் கப்ரா பிறப்பித்துள்ளார்.
     
    Next Story
    ×